பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயபிரதாவும் தயாரிப்பாளராக மாறிவிட்டார். தனது தங்கை மகனான சித்தார்த் என்னும் சித்துவை ஹீரோவாகவும், ஹன்ஸிகோ மோத்வானியை ஹீரோயினாகவும் வைத்து ‘உயிரே உயிரே’ என்கிற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். ‘சத்யம்’ படத்தை இயக்கிய ராஜசேகர்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இதில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அனில் கபூர், தெலுங்குலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்பாபு, தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் சுப்பராமா ரெட்டி. உத்தரபிரதேச அரசிய்வாதியான அமர்சிங், நடிகைகள் ராதிகா, ஸ்ரீப்ரியா, சுமலதா, தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சுப்புராம ரெட்டி பேசும்பொது, “ஜெயபிரதாபோல் ஒரு சிவப்பான அழகி இந்தியாவில் யாரும் கிடையாது. இன்றைக்கு, இப்போது இருப்பவர்கள்கூட அவரது சிவப்பழகுக்கு முன்பு ஒன்றுமில்லை. இந்தப் படத்தின் ஹீரோயினான ஹன்சிகாவும், ஜெயபிரதா போலவே சிவப்பழகிதான்..” என்று பேசினார்.
அவர் பேசும்போது மேடையில் அமர்ந்திருந்த ராதிகாவும், ஸ்ரீபிரியாவும் இடைமறித்து “நாங்களும் சிவப்புதான் ஸார்…” என்றார்கள். ரெட்டியும் விடாமல், “அதெல்லாம் ஜெயபிரதா கலருக்கு முன்னாடி நிக்க முடியுமா..? என்றார். இதன் பின்பும் ராதிதாகவும், ஸ்ரீபிரியாவும் தொடர்ந்து ரெட்டியுடன் தெலுங்கில் மாடலாடியபடியே இருந்தனர்.
பின்னர் ராதிகா பேசும்பொது, “சுப்புராம ரெட்டி சார், ஹன்சிகா போலவே நானும் நல்ல நிறம்தான். ஆனால், அவு்ட்டோர் ஷூட்டிங்குக்காக நிறைய வெயிலில் அலைந்ததினால் கறுத்துவிட்டேன்..! அவ்ளோதான்.
இந்த மேடையை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கு. இந்த விழாவில நாங்க எல்லாரும் வந்திருப்பதே நட்புக்காகத்தான். நாங்களெல்லோரும் நீண்ட நாள் நண்பர்கள். அந்த நட்புக்கு மரியாதை கொடுத்ததினால்தான் இங்கே வந்திருக்கிறோம். எங்க காலத்தில் நடிகர், நடிகைகள் எல்லாம் நட்புடன் இருந்தோம். என்ன பிரச்சினை என்றாலும் எங்களுக்குள் பேசித் தீத்துக் கொண்டோம். ஆனால் இன்றிருக்கும் இளைய நடிகர்கள் நட்புக்கு மரியாதை கொடுக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.
நடிகர்களுக்கு நான் ஒண்ணே ஒண்ணு சொல்றேன். எதுவாக இருந்தாலும் நமக்குள்ளேயே பேசித் தீத்துக்கலாம். மேலே பார்த்து எச்சில் துப்புனா, அது நம்ம முகத்து மேலதான் விழும். இது அவங்களுக்குப் புரியணும். ஏன்னா எல்லாருமே இங்க நடிகராக முடியாது. நடிகர்களாக ஒரு சிலரால் மட்டுமே இருக்க முடியும். சில நடிகர்கள் யோசித்து, நடிப்பார்கள். சிலர் யோசிப்பார்கள். ஆனால் நடிக்க மாட்டார்கள்…” என்றார்.













