காவ்யா புரொடக்சன்ஸ், கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’.
இந்தப் படம் ஐந்து நபர்களின் கூட்டு முயற்சியால் உருவாகி இருக்கிறது. அத்துடன் அந்த ஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இணைத்துக் கொண்டு படத்தையும் இயக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன்.
சமீபத்தில் வெளியான ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘சித்திரம் கொல்லுதடி’ கதையை இயக்கியவர் இவர்தான்.
குறும்பட உலகில் இருந்து வெள்ளித் திரைக்கு அடியெடுத்து வைத்துள்ள இவரது இரண்டாம் படம்தான் ‘என் பெயர் ஆனந்தன்’.
இந்தப் படத்தில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ‘ஏமாலி’, ‘காதல் கண் கட்டுதே ’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
மனோ ராஜா ஒளிப்பதிவு செய்ய; விஜய் ஆண்ட்ரூஸ் படத் தொகுப்பை கவனிக்கிறார். ‘சீமைத் துரை’, ‘நெடுநல் வாடை’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜோஸ் பிராங்க்ளின் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசனுக்கு த்ரில்லர் மிகவும் பிடித்த ஏரியா என்பதாலோ என்னவோ, ‘என் பெயர் ஆனந்தன்’ படத்தையும் முழு நீள த்ரில்லராகவே உருவாக்கியுள்ளார். ஆனால், ஆச்சர்யம் என்னவென்றால் த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக் களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாடகம், தெருக் கூத்து கலைகளை பின்னணியாக கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.
அதுமட்டுமல்ல, இந்தப் படம் தமிழையும், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றியும் அமைக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு ஆச்சர்யம். தமிழ்நாடு முழுதும் இந்த கதை குறித்த தேடல், ஆராய்ச்சியில் ஈடுபட்ட இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன், இந்தப் படத்தை த்ரில்லர் பாணியில் உருவாக்கியிருப்பது நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும்.
அதுமட்டுமல்ல மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு புது முயற்சியாக க்ளைமாக்ஸுக்கு சற்று முன்பாக 12 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி ஒன்றும் இடம் பெறுகிறது. காதல் பற்றிய பாடலாக இருந்தாலும் வழக்கமான பாடல்கள் போல் இல்லாமல் உணர்வு பூர்வமான பாடலாக இருக்கும்.
படத்தின் உயிர் நாடியாக இருக்கப் போகும் இந்தப் பாடல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெவ்வேறு உணர்வுகளை அளிக்கப் போகிறது. மேலும் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்ட நிலையில் படத்தின் ஒவ்வொரு கேரக்டரையும் உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீதர்.
இன்னும் ஒரு புதிய முயற்சியாக ஹாலிவுட் படங்களில் பிரபல திரைக்கதை ஆலோசகராக பணியாற்றும் மைக் வில்சன் என்பவருடன் கலந்து விவாதித்து புதிய பாணியிலான திரைக்கதையை உருவாக்கி உள்ளார்கள் என்பது இந்தப் படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.
மதுரை, திருவண்ணாமலை மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.. போஸ்ட் புரொடக்சன் இறுதிக் கட்டத்தில் இருக்கும் இந்தப் படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.