நடிகரும், இயக்குநருமான பிரபு தேவா தனது ‘பிரபுதேவா ஸ்டூடியோஸ்’ சார்பில் ஒரே நேரத்தில் 3 படங்களை தயாரிப்பது தெரிந்ததே…
அதில் ஒரு திரைப்படம் ‘வினோதன்’. அறிமுக நடிகர் வருண் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் விக்டர் ஜெயராஜ் இயக்குகிறார்.
வித்தியாசமான கதைகளுக்கு மூல ஆதாரமே அந்தக் கதாபாத்திரத்தின் அமைப்புதான். நாயகனின் பாத்திரமோ, நாயகியின் பாத்திரமோ எந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கிறதோ அந்த அளவுக்கு படமும் ரசிகர்களை சென்றடையும் என்பது நிதர்சனமான உண்மை.
அந்த வகையில் பிரபு தேவா தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்றான இந்த ‘வினோதன்’ திரைப்படம் அறிவிக்கப்பட்டபோதே முக்கியத்துவம் பெற்று விட்டது.
இந்தப் படத்தை பற்றி அறிமுக இயக்குநர் விக்டர் ஜெயராஜ் கூறும்போது, “பொதுவாக தமிழ்ப் படங்களில் மனரீதியான கதாபாத்திரங்களை பற்றி விவரிக்கும்போது, அந்த கதாபாத்திரங்கள் சரியாக சித்தரிக்கப்படவில்லையோ என்ற மனத்தாங்கல் என்னிடத்தில் உண்டு. அந்தக் குறையை இந்த ‘வினோதன்’ நிவர்த்தி செய்யும்.
‘வினோதன்’ வித்தியாசமான மனநிலை உள்ள ஒரு மனிதனை பற்றியும் அவனது வினோதமான பழக்கங்களையும் பற்றிய உண்மை கதை. இத்திரைப்படத்தில் நாயகனின் குணாதிசயம் தமிழ் படங்களில் இதுவரை பார்த்திராதது.
இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறவர் மறைந்த நகைசுவை நடிகர் ஐசரி வேலனின் பேரன் வருண் ஆவார். இவர் நடிப்புத் துறையில் முறையாக அனைத்துவித பயிற்சிகளையும் பெற்றவர். இவர் ஏற்கெனவே, எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில் வெளிவர தயாராக உள்ள ‘நைட் ஷோ’ படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
வருணுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கவே அவரை நான் சந்தித்தேன். அந்த நேரத்தில்தான் நான் வினோதன் கதையை எழுதி கொண்டு இருந்தேன். இவரை சந்தித்ததில் இருந்தே அந்த கதாபாத்திரத்தை பற்றி யோசிக்கும்போது அவரது முகம்தான் எனக்கு நினைவில் வர ஆரம்பித்தது. இருந்த போதிலும் மற்றவர்களும் என் கருத்தை ஆமோதிக்கட்டும்.. முக்கியமாக தயாரிப்பாளர் பிரபு தேவா ஓகே சொன்னால் போதும் என்று காத்திருந்தேன்.
‘நைட் ஷோ’ படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்த பின்னர் என் கருத்தே அனைவரது கருத்தாக இருக்கிறது என்பதை அறிந்தபோது எனக்கு பெரிய நிம்மதி. தயாரிப்பாளர் பிரபு தேவா சாரும் ‘செலக்சன் சூப்பர்’ என்றவுடனே நான் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக பணி புரிய ஆரம்பித்தேன்.
இசை அமைப்பாளராக இமான், பாடலாசிரியராக மதன் கார்க்கி என்று எனக்கு பெரிய பலத்தை சேர்த்துக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் பிரபு தேவா. கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த ‘வினோதன்’ படம் மூலமாக என்னை இயக்குனராக உயர்த்திய பிரபு தேவா சாருக்கு நான் மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் நான் பெரும் வெற்றி, என்னைப் போன்ற புதிய இயக்குனர்களுக்கு எதிர்காலத்தில் பிரபு தேவா ஸ்டுடியோஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் வாய்ப்பு தர உந்துதலாக இருக்கும் என்பதே என் பொறுப்பு உணர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது..” என்று நம்பிக்கையுடன் கூறினார்.