இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த்.
இவர் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார்.
‘புறம்போக்கு’ படத்தில் பணியாற்றியபோது விஜய் சேதுபதிக்கும், ரோகாந்த்துக்கும் நல்ல புரிதல் காரணமாக நட்பு உருவானது. அதேநேரம் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் விஜய் சேதுபதியை அழைத்து, “ரோகாந்த்திடம் உங்களுக்கேற்ற கதை ஒன்று இருக்கிறது…” என கூறி கேட்க வைத்தார். விஜய் சேதுபதிக்கு அந்த கதை பிடித்துப்போக அப்போதே ரோகாந்த்திடம் ஓகே சொல்லிவிட்டார்.
விஜய் சேதுபதி பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் தற்போது இந்தப் படத்திற்கு ஏற்ற தேதிகளை ஒதுக்கியுள்ளார். இந்தப் படத்தில் தனது கேரக்டருக்காக தோற்றத்தையும் மாற்ற இருக்கிறார்.
மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘பேட்ட’, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சைரா’ என மிகப் பெரிய படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதியின் இந்த புதிய படமும் மிகப் பெரிய பட்ஜெட்டில் விஜய் சேதுபதிக்கேற்ற மாஸ் படமாக உருவாக இருக்கிறது.
இந்தப் படத்தில் பங்குபெறும் பிற நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறது.