ரியாலிட்டி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜேந்திரன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘வென்று வருவான்’.
இதில் புதுமுக நாயகன் வீரபாரதி. சமீரா, எலிசபெத் சூரஜ், ராஜாராணி பாண்டியன், காதல் சுகுமார். நெல்லை சிவா. வையாபுரி. கிரேன் மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜெயச்சந்திரன், இசை – முரளி கிருஷ்ணன், பாடல்கள் – நிகரன், முத்துவீரா, படத் தொகுப்பு – ஆர்.எஸ். சதீஸ்குமார். தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – விஜேந்திரன்.
படம் பற்றி இயக்குநர் விஜேந்திரன் கூறும்போது “இது ஒரு கிராமத்துக் கதை. அம்மா மகன் பாசப் போராட்டத்தை உருக வைக்கும்விதத்தில் கூறுகிறது இப்படம்.
செய்யாத 8 கொலைகளுக்கு நாயகன் மீது கொலைப் பழி விழுகிறது. தூக்கு மேடைவரை போகிறான். அதற்குள் தான் தன் தாய் பாடும் ஒரு பாடலை இறுதி விருப்பமாகக் கேட்க விரும்புகிறான். அவனது தாய் வரவழைக்கப்படுகிறாள். அவள் அந்த ஊரில் நல்லதோ கெட்டதோ எந்த நிகழ்வாக இருந்தாலும். பாட்டுப் பாடும் பழக்கம் உள்ளவள். அவளோ அப்போது. உடல் நலிவுற்று கண் பார்வையும் இழந்து இருக்கிறாள். இருந்தாலும் தன் மகனின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு பாடலைப் பாடுகிறாள்.
அது கேட்பவர்களின் செவியில் விழுந்து இதயம் உருக்கும் பாடல். அவள் பாடிய பின் எல்லாமே திசை மாறுகிறது. அப்படி என்ன அந்தப் பாடலில் இருந்தது..? அதன் பிறகு கொலைப் பழி சுமந்தவனுக்கு என்ன ஆனது..? என்பதே படத்தின் முடிவு..” என்கிறார் இயக்குநர் விஜேந்திரன்.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் பாடல் மிக அற்புதமாக வந்திருக்கிறதாம். பாடல் காட்சியையும் பரபரப்பாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளதாம்.
இதன் படப்பிடிப்பு சென்னையிலும் பெரம்பலூர் பகுதி திருவாலக்குறிச்சி கிராமத்திலும் நடைபெற்றுள்ளது.
அம்மா, மகன் பாசத்துக்கு புதிய பொழிப்புரை எழுதியுள்ள ‘வென்று வருவான்’ படம் இம்மாதம் 26-ம் தேதி வெளியாகிறது.