‘தல’ அஜித்குமார் நடித்த ‘வேதாளம்’ படம் வரும் 10-ம் தேதி, தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.
இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து இருக்கிறார். தங்கை வேடத்தில் லட்சுமி மேனன் நடித்துள்ளார். சிவா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இவர், ஏற்கெனவே ‘சிறுத்தை’, ‘வீரம்’ ஆகிய படங்களை இயக்கியவர்.
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மேற்பார்வையில், அவருடைய மருமகள் ஐஸ்வர்யா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். உலகம் முழுவதும் 1,200 தியேட்டர்களில், இந்த படம் திரையிடப்பட இருக்கிறது.
இந்தப் படம் பற்றி இன்றைய ‘தினத்தந்தி’க்கு இயக்குநர் சிவா அளித்திருக்கும் பேட்டியில் “இந்தப் படம் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டது..” என்று சொல்லியிருக்கிறார்.
அவர் மேலும் பேசுகையில், “இது, அவருடைய 56-வது படம். மற்ற படங்களில் இல்லாத – ‘வேதாளம்’ படத்தில் மட்டுமே உள்ள சிறப்பு அம்சம், அஜித்தின் கடுமையான உழைப்பு. மற்ற 55 படங்களிலும் இந்த அளவுக்கு கஷ்டப்பட்டு நான் உழைத்ததில்லை என்று அவரே சொல்லியிருக்கிறார். கொல்கத்தா ரோட்டில் அவர் ஓடியதையும், இத்தாலி கப்பலில், ‘ரிஸ்க்’ ஆன காட்சியில் நடித்ததையும் என்னால் மறக்க முடியாது.
இந்தப் படத்தில் மிக வித்தியாசமாகவும் நடித்திருக்கிறார் அஜித். செம ‘லோக்கல்’ ஆக ஒரு தோற்றத்திலும், மிக துணிச்சலான இன்னொரு தோற்றத்திலும் அவர் வருகிறார். இது இரட்டை வேடமா.. என்பது, ‘சஸ்பென்ஸ்.’
இதுவரை வெளிப்படுத்தியிராத நடிப்பு திறமையை ‘வேதாளம்’ என்ற கதாபாத்திரத்தில் அஜித் வெளிப்படுத்தி இருக்கிறார். அஜித் ஜோடியாக சுருதிஹாசன் நடித்து இருக்கிறார். கொல்கத்தாவில் வேலை பார்க்கிற பெண்ணாக அவர் வருகிறார். அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருக்கிறார்.
இது நிச்சயம் பேய் படம் அல்ல. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஜனரஞ்சகமான படம். அதேபோல் இது, ‘டான்’ படமும் அல்ல. படத்தில் நிறைய நகைச்சுவை காட்சிகள் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் உள்ளன. படத்தில் திடீர் திருப்பங்களும் இருக்கும். இது, பெண்களுக்கான படம் என்றும் சொல்லலாம்.
அண்ணன்-தங்கை பாசம்தான் ‘வேதாளம்’ படத்தின் அடிநாதம். நிஜ வாழ்க்கையில் அஜித், பெண்கள் மீது அதிக மரியாதை உள்ளவர். அவருடைய உண்மையான சுபாவத்தையே இந்த படத்தின் கதாபாத்திரமாக்கி இருக்கிறேன். அதனால், அவர் கதாபாத்திரத்துடன் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரம், இப்படி நமக்கு ஒரு அண்ணன் நமக்கில்லையே என்று படம் பார்க்கும் பெண்களை நினைக்க தோன்றும். படம் மனதை தொடுகிற மாதிரி இருக்கிறது என்று இதுவரையிலும் படத்தினை பார்த்தவர்கள் கூறினார்கள்.
அஜித் ‘டப்பிங்’ பேசியபோது படத்தைப் பார்த்தார். முழு படத்தையும் பார்த்துவிட்டு, மகிழ்ச்சியுடன் கை குலுக்கி பாராட்டினார். ‘வீரம்’ படம் பார்த்து விட்டு, ‘நாம் அடுத்ததாக உடனே படம் பண்ணலாம் சிவா’ என்றார். ‘வேதாளம்’ படத்தைப் பார்த்துவிட்டும் அதையேதான் சொன்னார். அடுத்த படம் எப்போது என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்…” என்றார் இயக்குநர் சிவா.