‘அசால்ட் சேது’ என்னும் கதாப்பாத்திரம் மூலம் தேசிய விருதை தட்டிச் சென்ற பாபி சிம்ஹாவிற்கு, சமீபத்தில் வெளியான ‘இறைவி’ திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்று தந்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, இவர் நடிப்பில் வெளியான ‘கோ-2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது மட்டுமின்றி, வர்த்தக ரீதியாகவும், வணீக ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கிறது.
இப்படி தொடர்ந்து வெற்றி பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கும் பாபி சிம்ஹா தற்போது ‘வல்லவனுக்கும் வல்லவன்’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘அசால்ட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் பாபி சிம்ஹாவே தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான விஜய் தேசிங்கு இயக்கியிருக்கிறார்.
தயாரிப்பு துறையில் தொடர்ந்து தரமான வெற்றி படங்களை ரசிகர்களுக்கு வழங்கி வரும் ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனத்தோடு இணைந்து ‘அசால்ட் புரொடக்ஷன்ஸ்’ இந்த ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சாலை’ புகழ் ஷிவதா மற்றும் பூஜா தேவாரியா முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர் கருணாகரன் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கும் இந்த அதிரடி படத்தின் டீசர், வருகின்ற ஆகஸ்ட் 2-ம் தேதியன்று வெளியாகிறது.
‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தில் பாபி சிம்ஹா பதினோறு கெட்டப்பில் நடித்து வருகிறார் என்பது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, சுமார் பதினைந்து வருடம் கழித்து சென்னையை அடுத்து உள்ள பழவேற்காடு ஏரியில் படமாக்கப்பட்டிருக்கும் தமிழ் படம் இதுதான். நடிகர் அஜித் குமார் நடித்த ‘சிட்டிசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புதான் இங்கு கடைசியாக படமாக்கப்பட்ட தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.