எஸ்.எஸ்.பி. ஆர்ட்ஸ் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.கோபால் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாங்க படம் பார்க்கலாம்’.
இந்தப் படத்தில் அறிமுக நடிகர் ஜிஜி நாயகனாகவும் அறிமுக நடிகை கமலி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும், லிவிங்ஸ்டன், முத்துக்காளை, கிரேன் மனோகர், நெல்லை சிவா, லொள்ளு சபா உதயா, கருணா ராதா, சேலம் ஜெய், கும்தாஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் கே.எஸ்.நேசமானவன்.
ஒளிப்பதிவு – வினோத்.ஜி, படத் தொகுப்பு – ராஜேந்திரன், நடனம் – மதுராஜ், ரமேஷ் கமல், நிர்மல், பாடகர்கள் – வேல்முருகன், சின்னப் பொண்ணு, தினேஷ்.வி, கவிதா, அய்யாத்துரை, யுகேந்திரன், பிரஷாந்தினி, கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, இயக்கம் – கே.எஸ்.நேசமானவன். தயாரிப்பு – எஸ் கோபால்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் முனீஸ்காந்த் பேசும்போது, “சினிமாக்காரன் என்கிற படத்தில் நடிக்கும்போதிலிருந்தே எனக்கு இயக்குநர் நேசமானவனை நன்கு தெரியும். நான் வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் ஒரு குடும்ப இயக்குநர் போல எனக்கு வாய்ப்பு தந்ததோடு நியாயமான சம்பளத்தையும் கையோடு கொடுத்து அனுப்புவார்.. அந்த நன்றிக்காகத்தான் இந்த விழாவில் நான் கலந்து கொண்டுள்ளேன்…” என நெகிழ்ந்தார்.
இந்தப் படத்தின் ஹீரோ ஜிஜி பேசும்போது, “இந்த படம் என்னுடைய முதல் முயற்சி.. படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இந்தப் படத்தை கமர்சியலாக, கலகலப்பாக, நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கியுள்ளோம்.. விநியோகஸ்தர்கள் எங்களைப் போன்றவர்கள் எடுக்கும் சிறிய பட்ஜெட் படங்களை வெளிவர உதவி செய்ய வேண்டும்…” என கேட்டுக் கொண்டார்.
காமெடி நடிகர் முத்துக்காளை பேசும்போது, “படங்களில் நடிக்க அழைக்கும்போது ‘அண்ணே, உங்களுக்கு இதில் முக்கியமான வேடம்’ என்று சொல்லித்தான் அழைக்கிறார்கள்.. அப்படி நடித்த எங்களது புகைப்படத்தை போஸ்டரில் போட்டால்தான் என்ன…? அதுதான் எங்களுக்கான அங்கீகாரமாக இருக்கும்.
இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சில யூ டியூப்(Youtube) சேனல்களில் நான் இறந்துபோய் இரண்டு வாரம் ஆகி விட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நான் உயிரோடுதான் இருக்கிறேன். நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன். படப்பிடிப்புகளுக்கு செல்வதைவிட, இது பற்றி விசாரித்து தினசரி வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு நான் உயிரோடு இருக்கிறேன் என பதில் சொல்வதுதான் பெரிய வேலையாக இருக்கிறது…” என வேதனையுடன் குறிப்பிட்டார்.
படத்தின் இயக்குநர் நேசமானவன் பேசும்போது, “பெருமைக்காக சொல்லவில்லை என்றாலும், என்னுடைய இயக்கத்தில் நடித்த முனீஸ்காந்த் இன்று உயர்ந்த இடத்தில் இருப்பதை கண்டு நான் சந்தோசப்படுகிறேன். என்னுடைய படத்தில் நடித்த நடிகர் ஒருவர் மிக பெரிய இடத்திற்கு வந்து விட மாட்டாரா என்று ஆசைப்பட்டேன்.. அது நடந்து விட்டது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு திரையுலக பிரபலங்களை சிறப்பு விருந்தினர்களாக நாங்கள் அழைக்கவில்லை. காரணம் பொதுவாக இது போன்ற விழாக்களில் பிரபலங்களை அழைத்து, அவர்களை பேச வைத்து அவர்களை கவனித்து அனுப்புவது மட்டுமே வேலையாக மாறிவிடும். எங்களுக்காக உழைத்த தொழில் நுட்பக் கலைஞர்களையும் அடுத்ததாக எங்கள் படத்தை திரையில் கொண்டு வருவதற்கு தங்கள் உழைப்பை கொடுக்க தயாராக இருக்கும் வினியோகஸ்தர்களையும் எங்களால் மேடையேற்றி கவுரவிக்க முடியாமல் போய்விடும்.
விழாவிற்கு வரும் பிரபலங்கள் பேசுவதால் படத்திற்கு தியேட்டர்கள் கிடைத்துவிடாது. அதற்கு வினியோகஸ்தர்களின் தயவுதான் நமக்கு தேவைப்படும். அதனாலேயே சிறப்பு விருந்தினர்கள் என யாரையும் அழைக்கவில்லை…” என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.