“ஒரு படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், தரமான கதையம்சம். அதற்கு சிறந்த உதாரணமாக எங்களின் ‘உள்குத்து’ இருக்கும்” என்கிறார் தயாரிப்பாளரும், பி.கே.பிலிம் பேக்டரி நிறுவனத்தின் நிறுவனருமான ஜி.விட்டல் குமார்
‘திருடன் போலீஸ்’ வெற்றி திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் ராஜூ – தினேஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘உள்குத்து’.
முழுக்க, முழுக்க நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டிருக்கிறது.
மாபெரும் வெற்றி பெற்ற ‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு தினேஷ் மற்றும் நந்திதா ஜோடி இந்த ‘உள்குத்து’ படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“ஒரு முதன்மை தயாரிப்பாளராக நான் தயாரிக்கும் முதல் படம் இந்த ‘உள்குத்து’தான். இதற்கு முன் என்னுடைய நண்பர் ‘கெனன்யா பிலிம்ஸ்’ ஜெ.செல்வகுமாரோடு இணைந்து ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இணை தயாரிப்பு செய்தேன்.
ஒரு படத்தை தயாரிப்பது சவாலான காரியம் என்றால், தரமான கதையம்சம் கொண்ட படத்தை தயாரிப்பது உணர்வுபூர்வமான காரியம். அப்படி ஒரு தரமான படமாக எங்களின் ‘உள்குத்து’ உருவாகி இருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
நிச்சயமாக ‘உள்குத்து’ படத்திற்கு பிறகு தினேஷ் அதிரடி கதாநாயகர்களின் பட்டியலில் இடம் பெறுவார். மே 12-ம் தேதி வெளியாகும் எங்களின் ‘உள்குத்து’ படத்தை நல்லதொரு வெற்றி படமாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகின்றோம்.
மேலும் ‘உள்குத்து’ படத்தை வெளியிடும் அபினேஷ் இளங்கோவன், படத்தை சரியான விதத்தில் ரசிகர்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க பிரம்மாண்ட விளம்பர யுக்திகளை கையாள இருக்கிறார். அவரோடு இணைந்து பணியாற்றுவது எனக்கு பெருமையாக இருக்கின்றது…” என்று உற்சாகமாக கூறுகிறார் தயாரிப்பாளரும், பி.கே.பிலிம் பேக்டரி நிறுவனத்தின் நிறுவனருமான ஜி.விட்டல் குமார்.