full screen background image

உச்சத்துல சிவா – சினிமா விமர்சனம்

உச்சத்துல சிவா – சினிமா விமர்சனம்

உச்ச நடிகர்களைத் தவிர மற்ற இரண்டாம் நிலை நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் குறையும்போது ஒன்று காத்திருக்கத் தொடங்குவார்கள்.. அல்லது கிடைக்கும் வேடத்தில் நடிப்பார்கள். இதுவும் இல்லையெனில், சொந்தமாக படமெடுத்து தங்களது திறமையை வெளிக்காட்டி இதன் மூலமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளை வரவழைப்பார்கள்.

சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்தும் இப்படித்தான் தனது சொந்தத் தயாரிப்பான ‘நம்பியார்’ படத்தை நடித்து, தயாரித்து வெளியிட்டார். அதே பாணியில் களமிறங்கியிருக்கிறார் நடிகர் கரண்.

15-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் ஹீரோவாகவே தனி ஆவர்த்தனம் செய்திருக்கும் கரண், ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ என்கிற 2011-ம் வருடம் வெளிவந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அந்தப் படமும் நன்றாகவே ஓடியது. அதன் பின்பு வந்த ‘கந்தா’, ‘சூரன்’ இரண்டும் அதிகம் ஓடாததால் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.

வடிவுடையானின் இயக்கத்தில் இவர் நடித்த ‘கன்னியும் காளையும் செம காதல்’ என்ற படம், ஒரு வருடத்திற்கு முன்பேயே தயாராகி இப்போது ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இன்னமும் அந்தப் படத்திற்கு விடிவு காலம் கிடைக்கவில்லை.

அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. நம் திறமையை காட்ட நாமளே சொந்தமாக படமெடுத்து ரிலீஸ் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் ‘சுதேசி’ படத்தை இயக்கிய ஜேப்பியின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் இந்தப் படத்தை தனது மனைவி தேவியின் பெயரில் தயாரித்து வெளியிட்டிருக்கிறார் நடிகர் கரண்.

ஹீரோவான சிவா என்னும் கரண் ஒரு கால் டாக்சி டிரைவர். தன்னுடைய தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்திருக்கும் இவர் தாய் மீது அபரிமிதமான பாசம் வைத்திருக்கிறார். நாளை 33-வது முறையாக பெண் பார்க்கப் போகும் விஷயத்தை பல முறை போனில் சொல்லி ஞாபகப்படுத்துகிறார் அம்மா.

அன்றைய இரவில் சவாரிக்கு போய்விட்டு திரும்பும் வழியில் ஒரு பெண்ணும், ஒரு வாலிபனும் பதட்டத்துடன் ஓடி வருவதையும், அவர்களை சிலர் காரில் துரத்துவதையும் பார்க்கிறார் கரண். காரில் வந்தவர்கள் ஓடி வந்த வாலிபனை சுட்டுக் கொல்கிறார்கள். அந்தப் பெண் கரணின் காரில் ஏறி அபயம் கேட்க.. அந்தப் பெண்ணை காரில் ஏற்றி பறக்கிறார் கரண். இவர்களைப் பின் தொடர்ந்தவர்கள் வந்த கார் விபத்துக்குள்ளாகிறது. அதில் பயணம் செய்தவர்கள் காயம் பட்டு பின்பு, போலீஸில் பிடிபடுகிறார்கள்.

தான் அழைத்து வரும் பெண்ணின் அழகில் மயங்கும் கரண் பார்த்த மாத்திரத்திலேயே மனதுக்குள் காதலிக்கத் துவங்குகிறார். அந்தப் பெண் ஒரு கதையைச் சொல்கிறார். தன்னுடைய காதலுக்கு தனது அப்பா எதிர்ப்பினை காட்ட.. தனது சகோதரன் பச்சைக் கொடி காட்டினார். இதனால் தனது அப்பா தன்னைத் தீர்த்துக் கட்ட அடியாட்களை அனுப்பி வைத்திருப்பதாகச் சொல்கிறார்.

இதை நம்பும் ஹீரோ அவரை காப்பாற்றியே தீருவது என்று கொள்கை முடிவெடுக்கிறார். ஹீரோயின் தனது அண்ணன் என்று சொல்பவர் இவர்களைத் தேடி வர.. பின்னாலேயே வரும் அப்பா அவரைச் சுட்டுக் கொல்கிறார்.

இப்போதும் ஹீரோயினை விட்டுக் கொடுக்காத ஹீரோ கரண் அவரை காப்பாற்றும் நோக்கத்தில் செல்ல.. பின்னாலேயே போலீஸும் துரத்துகிறது. போலீஸிடம் சொல்லி அவளது அப்பாவை பிடித்துக் கொடுக்கலாம் என்று ஹீரோ சொல்ல.. ஹீரோயின் மறுத்து ஹீரோவை ‘சற்றே தள்ளியிரும் பிள்ளாய்’ என்று சொல்லிவிட்டு காரை ரேஸ் கார் கணக்கில் ஓட்டத் துவங்க.. ஹீரோவுக்கு பயம் வந்துவிடுகிறது..!

இந்த ரேஸ் ஓட்டம் முடிவுக்கு வர ஹீரோயின் தப்பியோட நினைக்கும்போது போலீஸ் அவரைச் சுடுகிறது. குண்டு காயம்பட்டு ஹீரோயின் கீழே விழுக.. போலீஸ் ஏன் அவரைச் சுட்டது..? உண்மையில் ஹீரோயின் யார்..? இதன் பின் நடப்பது என்ன என்பதை தியேட்டருக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சற்றே விறுவிறுப்பான கதைதான். நீட்டான திரைக்கதைதான். ஹீரோ கரண்தான் படம் மொத்த்த்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார். இடைவேளைக்கு பின்பு காட்சிக்கு காட்சி டிவிஸ்ட்டுகள் அணிவகுக்கும்போது திரைக்கதையில் வேகம் பிடிக்கிறது.

புதிய கேரக்டர் ஸ்கெட்ச்சுடன் இன்ஸ்பெக்டர் இளவரசுவும், அவரது கூட்டணியினரும், போட்டுக் கொடுக்கும் போலீஸாக ரமேஷ் கண்ணாவும், போதை இன்ஸ்பெக்டராக வருபவரும் கவனத்தை ஈர்க்கிறார்கள். மிக டீஸண்ட்டாக போலீஸ் மிடுக்குடன் பேசும் இளவரசு, அதே நாகரிகத்துடன் ரமேஷ் கண்ணாவிடம் போனிலேயே மிரட்டுவதுகூட அழகுதான்.

சிகரெட், மது அருந்தும் காட்சிகளில் அதெல்லாம் கூடாது என்று சப் டைட்டில் போடுவதுபோல, கார் ஓட்டும்போது செல்போனில் பேசக் கூடாது என்பதற்கும் சப் டைட்டில் போடணும் போலிருக்கு..! கரண் போனில் பேசிக் கொண்டே கார் ஓட்டும் காட்சியில் நமக்கு ‘பதக் பதக்’ என்று இருக்கிறது.

படத்தின் துவக்கத்தில் வரும் ஒரு சீன் ‘என்னடா இது துவக்கத்திலேயே இப்படியா’ என்ற கேள்வியை எழுப்பினாலும் இன்றைய சமுதாயத்திற்கு தேவையான மிக முக்கியமான ஒரு விஷயத்தைத்தான் அதில் சொல்லியிருப்பதால் பாராட்டலாம். ஆனாலும் அந்தக் காட்சி கொஞ்சம் நீளம்ண்ணே.. அதேபோல் ஞானசம்பந்தன் காட்சியிலும் படத் தொகுப்பாளர் கத்திரியை போட்டிருக்கலாம்.

படத்தில் மிகப் பெரிய குறை நேஹா என்கிற ஹீரோயின். எந்தப் பக்கம் பார்த்தாலும் அவரை ரசிக்க முடியவில்லை. எத்தனை திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் கரண். அவருக்குத் தெரியாததா..? ஆனாலும் ஏன் இப்படி தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. நடிப்பும் வரவில்லை. கரணுக்கும் ஈடு கொடுக்கவில்லை. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் புண்ணியத்தில் கொஞ்சம் பார்க்கலாம். அவ்வளவுதான்..!

கரண் சிறந்த நடிகர்தான். அதில் சந்தேகமில்லை. காட்சிக்கு காட்சி எந்த இடத்திலும் இயக்கத்தில் இடர்களே இல்லாமல் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் கரண். கரணின் பண்பட்ட நடிப்பில் மிமிக்ரி ஆக்டிங் சூப்பர். இப்படியொரு நடிகருக்கு ஏன் நல்லதொரு கேரியர் கிடைக்காமலேயே இருக்கிறது என்று தெரியவில்லை.

கடைசிவரையிலும் முகத்தைக் காட்டாமலேயே ரேணுகா, கரணின் அம்மாவாக வாய்ஸ் கொடுத்திருக்கிறார். குரலே நடிப்பைக் காட்டுகிறது. இவர்கள் இல்லாமல் நடுவில் போதை மருந்தை விற்பனை செய்யும் நரேன் டீமின் செயல்பாடுகள் பற்றிய போர்ஷன் மிக அழகு. அதைப் படமாக்கியவிதமும் அழகு.

இருந்தாலும் மருத்துவக் கல்லூரியில் படிக்கிற தங்கையின் படிப்பு செலவுக்காக போதை மருந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறேன் என்று அந்தப் பையன் சொன்னாலும், அவனுடைய தங்கையை ஏதோ 9-ம் வகுப்பு மாணவி போல காட்டியிருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. இதேபோல் அவர் நாளை பெண் பார்க்கப் போகும் இடத்திற்கே நடுராத்திரியில் சுவர் ஏறிக் குதித்திருக்கிறார்கள் என்றெல்லாம் திரைக்கதை எழுதுவது டூ மச்சால்ல இருக்கு..?

வித்யாசாகரின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.. சண்டை காட்சிகளில் மிகவும் முனைப்பாக நடித்திருக்கிறார் கரண். கனல் கண்ணனின் முதல் பாடல் காட்சியும், அதைத் தொடர்ந்த சண்டை காட்சியும்கூட நேரத்தை வீணாக்கிவிட்டன. படத் தொகுப்பாளர் கார் சேஸிங் காட்சிகளை கொஞ்சம் பதட்டத்துடன் நறுக்கியிருக்கிறார் போலும். அவைகள் மட்டுமே பயமுறுத்தியிருக்கின்றன.

நரேன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியதுபோல் மீதமிருக்கும் அனைத்தையும் சீரியஸாகவே படமாக்கியிருந்தால் படத்தின் தன்மை மாறியிருக்கும். இப்போது ஏதோ கமர்ஷியல் படம் செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

கரண் ஸார்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..!

Our Score