நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் அவருடைய 59-வது படத்துக்கு, ‘தெறி’ என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.
இந்த படத்தை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.தாணு தயாரிக்கிறார். அட்லி இயக்கி வருகிறார். இத்தனை நாட்களும் படத்துக்கு பெயர் சூட்டப்படாமல்தான் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது.
கார்த்திகை தீப நாளான இன்று இந்தப் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ‘தெறி’ படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், சுனைனா ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நடிகை மீனாவின் மகள் நைனிகா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிறாள்.
படப்பிடிப்பு சென்னை மற்றும் கோவாவில் நடைபெற்றது. பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.
‘தெறி’ என்றால் ‘தெறித்தல்’ என்று அர்த்தம். ‘தெறிச்சு ஓடணும்டா’ என்று பேச்சு வழக்கில் பயன்படுத்துவார்கள். அஜீத் தனது ‘வேதாளம்’ படத்தில் ‘தெறிக்க விடலாமா’ என வசனம் பேசி இருப்பார். இதை வைத்து அஜீத்தின் பட விளம்பரங்களில் ‘தெறி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தனர். இப்போது விஜய் தன் படத்துக்கு ‘தெறி’ என்று தலைப்பிட்டுள்ளார். தலைப்பும், படத்தின் டைட்டில் வடிவமைப்பும் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
முன்னதாக இந்தப் படத்தின் தலைப்பு ‘தாறுமாறு’ என்று வைக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தியை பரப்பி வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.