“சினிமா உயிருடன் இருப்பது சிறு முதலீட்டுப் படங்களால்தான். அதனால் சிறிய பட்ஜெட் படங்கள் நிறைய வர வேண்டும்…” என்று அபிராமி ராமநாதன் விடாயுதம் பட விழாவில் பேசினார்.
ஸ்ரீநாகராஜா சர்ப்ப யக்ஷி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் புதிய பேய் படம் ‘விடாயுதம்’. இதில் ஹீரோவாக ராம் சரவணன் நடித்திருக்கிறார். நாயகியாக ஆஸ்கார் விருது பெற்ற படமான ‘ஸ்லம்டாக் மில்லியனர்‘ படத்தில் நடித்த தன்வி லங்கோர் நடித்துள்ளார். நாகமானிசி இயக்கியுள்ளார்.
இந்தப் படம் ஒரு பேய்க்கும், பாம்புக்கும் இடையிலான மோதலை அடிப்படையாகக் கொண்டதாம்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குநர் நாகமானிசி, இயக்குநர்கள் ஏ.வெங்கடேசன், பாலசேகரன், ராஜ்கபூர் படத்தின் நாயகன் ராம் சரவணன், நடிகர்கள் செந்தில், ப்ரஜின், உதயராஜ், நாயகி கமலி, தயாரிப்பாளர்கள் ஜே. கே.ஆதித்யா, ஆர்.என்.ஸ்ரீஜா, மும்பை ரவிச்சந்திரன் ராஜு, இசையமைப்பாளர் மிதுன் ஈஸ்வர், சினிமா மக்கள் தொடர்பாளர்கள். டைமண்ட் பாபு, விஜயமுரளி, பெரு. துளசிபழனிவேல் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
விழா மேடையில் நிஜமான நல்ல பாம்பையும் கொண்டு வந்து வைத்து, அனைவரையும் பயமுறுத்திவிட்டார்கள்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் பேசும்போது, ”ஜாதி, மத, இன, மொழி, ஏழை, பணக்காரன் என்கிற வேறுபாடு இல்லாத உலகம் இந்த திரைப்படக் கலையுலகம்தான்.
’விடாயுதம்’ படத்தைச் சிறு முதலீட்டுப் படமாக நாகமானிசி எடுத்திருக்கிறார். ‘விடாயுதம்’ ஒரு பாம்புப் படம். நான் பாம்புப் படம் பார்க்க மாட்டேன். ஆனால் பாம்புக்கு பயப்படுவேன்.
இந்த சினிமாவுலகம் உயிருடன் இருப்பது சிறு முதலீட்டுப் படங்களால்தான். தியேட்டர்களை வாழ வைத்துக் கொண்டிருப்பது இது போன்ற சிறு முதலீட்டுப் படங்கள்தான். நமது கலையுலகம் நன்றாக இருக்க வேண்டுமெனில் இது போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் நிறைய வர வேண்டும்.
அது மட்டுமல்ல சினிமாவை. நம்பித்தான் டிவிக்களும் உள்ளன. டிவிக்களில் 90 சதவிகிதம் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள்தான் வருகின்றன. சினிமாவை நம்பி பத்து லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் நன்றாக இருக்க நிறைய சிறு முதலீட்டுப் படங்கள் வர வேண்டும்.. இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்..” என்றார்.
கில்டு அமைப்பின் செயலாளர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது. ”பாம்பு வருகிற படங்கள் நன்றாக ஓடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அந்த வரிசையில் இந்தப் படமும் நிச்சயமாக ஓடும் என்றே நினைக்கிறேன்.
இப்போது தமிழகம் முழுக்க வெள்ளமாக இருக்கிறது. இந்தத் துயரத்தில் கஷ்டப்படும் மக்களுக்கு திரைப்பட துறையின் அனைத்து துறையினரும் உதவ வேண்டும். என் சார்பில் நான் ஒரு லட்சம் வழங்குகிறேன்.
50 ஆண்டுகளாக சினிமாவை சார்ந்தவர்களே இங்கே ஆட்சி செய்து வருகிறார்கள். ஆனால் இதுவரை திரையுலகம் மக்களுக்கு நிதி உதவி செய்யவில்லை. இனிமேலாவது திரையுலகம் ஒட்டு மொத்தமாக முன் வந்து உதவ வேண்டும்.
நம் மக்களை நாம் காப்பாற்றாமல் நாம் உயிருடன் இருந்து என்ன பயன்..? பல நடிகர்கள் 25 கோடி 30 கோடி சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் வெள்ள நிவாரண நிதி மட்டும் தர மாட்டேன் என்கிறார்கள். இது என்ன நியாயம்..?” என்றார் கோபமாக.
விழாவில் படத்தின் இசையை அபிராமி ராமநாதன். இயக்குநர் தருண் கோபி, இயக்குநர் ராஜ்கபூர் ஆகியோர் இணைந்து வெளியிட பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகர் பிரஜன், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஆகியோர் பெற்று கொண்டனர்.