பிரபல பட வெளியீட்டு நிறுவனமான ‘தி வைப்ரண்ட் மூவிஸ்’ இந்தாண்டும் சில முக்கிய படங்களை வெளியிடவுள்ளதாம்.
இது பற்றி அந்நிறுவனத்தின் தலைவர் வெங்கடேஷ்ராஜா வெளியிட்டுள்ள செய்தியில், “2014-ம் வருடம் ‘தி வைப்ரண்ட் மூவிஸ்’ நிறுவனத்தின் சார்பில் வெளியிட்ட ‘வெண்நிலா விடு’, ‘ஆள்’ மற்றும் ‘ரா’ படங்களுக்கு மக்கள் அளித்த ஆதரவும் அன்பும் எங்களுக்கு மிகுந்த பலமாக அமைந்தது.
இதில் ‘வெண்நிலா வீடு’ படம் சிறந்த படமாக பலரால் பாராட்டப்பட்டும், படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் மிகப் பெரிய பாராட்டுக்களையும் பெற்றுத் தந்துள்ளது.
‘ரா’ படம் இப்போது இந்தியில் மொழி மாற்றம் செய்யப்படும் அளவுக்கு பேசப்பட்டுள்ளது.
இந்தப் பெருமைகளை சுமந்த கையோடு, இந்த 2015-ம் வருடத்தில் ‘புத்தனின் சிரிப்பு’, ‘ஐவராட்டம்’ ‘CSK’ உள்ளிட்ட பல சிறந்த படங்களை எமது ‘தி வைப்ரண்ட் மூவிஸ்’ மூலமாக வெளியிடவுள்ளோம்.
சிறந்த ஜனரஞ்சகமான படங்களையும் நல்ல தரமான படங்களையும் வெளியிடுவதே எங்களது தாரக மந்திரம்.
இத்தருணத்தில் எமது ‘தி வைப்ரண்ட் மூவிஸ்’ நிறுவனத்திற்கு மக்களும், மீடியாக்களும் அளித்த அதரவிற்கும், மேலும் தொடர்ந்து தரவிருக்கும் பேராதரவிற்கும் எங்களது இதயங்கனிந்த நன்றி..” என்று தெரிவித்துள்ளார்.