தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்ட படம் ‘தாதா 87’.
லோக்கல் தாதாவாக களம் இறங்கி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் என தடம் பதித்தார் சாருஹாசன்.
இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருந்தார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தின் டீசர் வெளியான நேரத்தில் ‘தாதா 87’ பட டீசரும் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றதோடு உலகளவிலும் ட்ரெண்டானது.
இப்படத்தினை பார்த்த பலரும் சாருஹாசனை மட்டுமே வைத்து ஏன் ஒரு முழு நீள தாதா படமாக உருவாக்கக் கூடாது என கேட்டுக் கொண்டனர். இதனை மனதில் வைத்து பலம் என்பது உடல் வலிமையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, அது மூளையையும் வைத்து முடிவு செய்யப்படுவது. சத்ரியனாக இருப்பது மட்டும் முக்கியமல்ல சாணக்கியனாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து சாருஹாசனை மீண்டும் இயக்குகிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி.
உள்ளூரில் சாமான்யனாக தாதாவாக இருக்கும் ஒருவர் தன் புத்தியின் பலத்தை கொண்டு உலக அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை எவ்வாறு பிடித்து முதன்மை இடத்தை அடைகிறார் என்ற பின்னணியில் இப்படம் உருவாகிறது.
தற்போது 90 வயதிலும் உலக அளவில் நடிக்கிற நடிகர் என்ற பெருமை பெற்ற சாருஹாசன், நடிப்பில் உலக நாயகன் என்ற பெயர் பெற்ற கமல்ஹாசன் போல் வயதில் உலக நாயகன் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார்.
முன்னணி நடிகர், நடிகையினர் மற்றும் மக்கள் மனதில் இடம்பெற்ற பழம் பெரும் நடிகர், நடிகையினர் அனைவரும் ரசிக்கும் வண்ணம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
லாக் டவுன் நாட்களுக்கு முன் ‘தாதா 87-2.0’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 7 நாட்கள் நடைபெற்றது.
சாருஹாசன், மற்றும் முக்கிய வேடத்தில் நடிக்கும் மைம் கோபி மற்றும் கூத்துப் பட்டறையைச் சேர்ந்த பலர் நடித்த முக்கிய காட்சிகள் அப்போது படமாக்கப்பட்டன.
லாக் டவுன் தடை நீக்கத்திற்கு பின் அரசின் கட்டுப்பாட்டுகளோடு தேவையான படக் குழுவினரோடு சென்னை, கேரளா மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
‘தாதா 87’, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்திற்கு பின் இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி மூன்றாம் முறையாக மீண்டும் இயக்குநர் விஜய் ஸ்ரீஜியுடன் இப்படத்தில் இணைகிறார். ஒளிப்பதிவை கோபி கவனிக்கிறார். விரைவில் இப்படத்தின் டீசர் வெளிவரவுள்ளது.