full screen background image

சித்தி கெளதமியுடன் சண்டையெல்லாம் இல்லை – ஸ்ருதிஹாசன் அறிக்கை..!

சித்தி கெளதமியுடன் சண்டையெல்லாம் இல்லை – ஸ்ருதிஹாசன் அறிக்கை..!

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் திரைப்படம் ‘சபாஷ் நாயுடு’. இந்த படத்தில் அவருடைய மகள் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்திலும், கமலின் துணைவி கௌதமி ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

sabash naidu - Tamil

இது ஒன்று போதாதா..? உட்கார்ந்த இடத்தில் இருந்தே ‘கதை’ எழுதும் மீடியாக்கார்கள் சிலர் கவுதமிக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் இடையில் சண்டை.. கவுதமி கொடுக்கும் ஆடைகளை ஸ்ருதிஹாசன் போட மறுத்து செட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் கமல்ஹாசன் யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் முழிக்க.. படப்பிடிப்பே நின்று போனது என்கிற ரீதியிலெல்லாம் இஷ்டத்திற்கு ‘கதை’ எழுதி வெளியிட்டார்கள்.

ஆனால் இவை அனைத்தும் வெறும் கட்டுக்கதைகள்தான் என்று சொல்லி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

இந்த வதந்திகளை பற்றி ஸ்ருதிஹாசனின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “தனெக்கென்று ஒரு தனி ஸ்டைல்… தனக்கென்று ஒரு தனி டிசைன் என தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையேதான் பின்பற்ற விரும்புகிறார்.

ஒவ்வொரு படங்களிலும், தன்னுடைய ஆடை அலங்காரம் மீதும், தன்னுடைய தோற்றத்தின் மீதும் அதிக அக்கறை கொண்ட ஸ்ருதி, அதனை பற்றி தயாரிப்பாளர்களிடமும், இயக்குநர்களிடமும் கலந்து பேசுவது வழக்கம்.

‘சபாஷ் நாயுடு’ படத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளரும் மாடர்ன் பெண்ணாகவும், துடுக்கான பெண்ணாகவும் நடிக்கிறார் ஸ்ருதி. இதனை நன்கு கருத்தில் கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப சில ஆடைகளை வடிவமைத்து கொடுத்து இருக்கிறார் கௌதமி.

ஒரு ஆடை வடிவமைக்கப்பட்டதும் அதை இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரிடம் காண்பித்து கருத்துகள் கேட்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் கௌதமி வடிவமைத்த ஆடைக்கு சில யோசனைகளை அவர்கள் கூற, அதற்கு ஏற்றார்போல், கதாப்பாத்திரத்தோடு கனகச்சிதமாக பொருந்தும் ஆடையை கௌதமி வடிவமைத்து கொடுத்திருக்கிறார்.

ஸ்ருதியும் கௌதமியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வாழக்கூடிய ஒரு  மாடர்ன் பெண் எப்படி இருப்பாரோ, அதே போல் ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் இருப்பார்.  

சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் ஸ்ருதி – கௌதமி இருவர்கள் இடையே நிலையான அன்பு இருந்து வருகிறது. ஸ்ருதியும் சரி, அவருடைய தந்தையும் சரி.. இருவருமே மிகவும் அழகான உறவைத்தான் தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஸ்ருதியின் பிறந்த நாள் விழாவில் கௌதமி பங்கேற்று தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது..” என்கிறது அந்த அறிக்கை..!

இப்படியெல்லாம் அறிக்கை விடச் சொல்லி எந்த அறிவாளி ஆழ்வார்பேட்டை ஆண்டவனுக்கு அட்வைஸ் செஞ்சது..?

‘எழுதின்னா எழுதிட்டுப் போங்கப்பா’ன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கிறதைவிட்டுட்டு, இதுக்கெல்லாம் போய் கவனத்தைத் திசை திருப்பி தன்னுடைய பொன்னான நேரத்தை செலவிடணுமா என்ன..?

Our Score