full screen background image

அருண் விஜய் மீண்டும் போலீஸ் அவதாரமெடுக்கும் புதிய படம் ‘சினம்’

அருண் விஜய் மீண்டும் போலீஸ் அவதாரமெடுக்கும் புதிய படம் ‘சினம்’

தமிழ் சினிமாவில் சமீபமாக  வெகு நேர்த்தியான படங்களால் வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘சினம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

Movie Slide Pvt Ltd நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. பாலக் லால்வாணி இப்படத்தின் நாயகியாக நடிக்க, நடிகர் காளி வெங்கட் மிக முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’, ‘சகா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபீர் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத் தொகுப்பு செய்கிறார். மைக்கேல் கலை இயக்கம் செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டை இயக்கம் செய்கிறார். மதன் கார்க்கி, பிரியா ஏக்நாத் இருவரும் பாடல்களை எழுதுகிறார்கள். பவன் டிசைனிங்கை மேற்கொள்கிறார்.

தேசிய விருது பெற்ற இயக்குநரான G.N.R. குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார்.

‘குற்றம்-23’ என்னும் மாபெரும்  வெற்றிப் படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம்  ‘குற்றம்-23’-ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக் குழு.

‘சினம்’ என்னும் தலைப்பு பற்றியும், படம் பற்றியும் நாயகன் அருண் விஜய் பேசும்போது, “எப்போதும் எந்தவொரு விஷயத்திலும், எந்தவொரு தொழிலும்  கோபம்  எனும் பண்பு எதிர்மறையானதாகவே  அடையாளப்படுத்தப்படும். கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச் சினம் அப்பாடியானதொன்று அல்ல.

பல நேரங்களில் கோபமானது பல  விசயங்களில் சரியானதாக இருக்கும்.  தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத் தர சினம் என்பது அவசியமாகவே இருக்கும்.

இப்படத்தின் கதை நாயகன் அப்படியான சினம் கொண்டவன். இயக்குநர் G.N.R.குமரவேலன் மிக அற்புதமாக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். அவரது திட்டமிடலும், திறமையும் வியக்கும்படி உள்ளது. அவரது அபார ஒருங்கிணைப்பில் படத்தின் படப்பிடிப்பு முதல் நாள் முதல் வெகு அருமையாக நடந்து வருகிறது. வரும் நவம்பர் 8-ம் தேதி முதல் இப்படத்தின்  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது…” என்றார்.

Our Score