கே.சி.பொகாடியா. பாலிவுட்டில் மிகவும் பிரபலமான இயக்குநர். அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், சன்னி தியோல், ஷாரூக்கான், மிதுன் சக்ரவர்த்தி என்று பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து படங்களை இயக்கியவர்.
இவர் 1990-ம் ஆண்டு இயக்கிய ‘Aaj Ka Arjun’ என்ற ஹிந்திப் படத்தில் அமிதாப்பச்சன் நடித்திருந்தார். இத்திரைப்படம் அமிதாப்பின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சூப்பர் ஹிட்டானது.
மேலும், ‘Pyar Jhukta Nahin’, ‘Teri Meherbaniyan’, ‘Aaj ka Arjun’ and ‘Naseeb Apna Apna’ போன்ற புகழ் பெற்ற படங்களையும் கே.சி.பொகாடியா தயாரித்து, இயக்கியுள்ளார். இந்தியத் திரையுலகில் மிகக் குறுகிய காலக்கட்டத்தில் 50 திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் என்கிற பெருமையையும் உடையவர் கே.சி.பொகாடியா.
கடந்த பல ஆண்டுகளாக படங்களை இயக்கி வரும் இயக்குநர் பொகாடியா இதுவரையிலும் 18 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
இவர் கடைசியாக 2015-ம் ஆண்டு உருவாக்கியிருந்த ‘Dirty Politcs’ என்கிற ஹிந்தி திரைப்படம் இந்தியா முழவதும் சர்ச்சையைக் கிளப்பிய திரைப்படமாகும்.
தற்போது 70 வயதைத் தொட்டிருக்கும் இவர், BMB Music And Magnetics Limited என்ற நிறுவனத்தின் சார்பில் ‘ராக்கி தி ரிவென்ஞ்’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். இந்தப் படம் ஒரு நாயை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் நாயகனாக சந்தோஷ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ஈஷான்யா நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரம்மானந்தம், நாசர், சாயாஜி ஷிண்டே, ஓ.ஏ.கே.சுந்தர், ராஜா, சுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – அஜ்மல்கான், படத் தொகுப்பு – பி.லெனின், இசை – பப்பிலஹரி, சரண் அர்ஜூன், பாடல்கள் – ஏ.ஆர்.பி.ஜெயராம், தயாரிப்பில் உதவி – எஸ்.ஆர்.சாப்லட், இணை தயாரிப்பு – ரேணு ஜெடியா, வெளியீடு – எம்.ஜி.ஆர். பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் – கே.சி.பொகாடியா.
படம் பற்றி இயக்குநர் கே.சி.பொகாடியா பேசும்போது, “படத்தின் நாயகனான சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. ஒரு விபத்தில் காயம்பட்ட ஒரு நாய்க் குட்டிக்கு மருத்துவ சிகிச்சை அளித்து அதனைக் காப்பாற்றி, அதற்கு ‘ராக்கி’ என்று பெயர் வைத்து தானே வளர்த்து வருகிறார் சந்தோஷ். அவரது மனைவியும் ராக்கியை ஒரு குழந்தை போல பார்த்துக் கொள்கிறாள்.
ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறையின் துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் அதனைச் சேர்த்து பயிற்சி பெறவும் வைக்கிறார் சந்தோஷ். போலீஸ் கமிஷனர் செல்வம் கண்ணியமானவர். அவர் சந்தோஷ் மீது மகன் போல பாசம் கொண்டவர்.
எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர் இருவரும் செய்கின்ற சமூக விரோதச் செயல்களுக்காக சந்தோஷ் அவர்களைக் கைது செய்து லாக்கப்பில் அடைக்கிறார். சாயாஜி, சுந்தர் இருவரும் சந்தோஷின் உதவியாளர்களான ராஜா, சேகர் இருவரையும் கைக்குள் போட்டுக் கொண்டு லாக்கப்பில் இருந்து தப்பி ஓடி விடுகின்றனர்.
இதையறியும் சந்தோஷ் கொதிப்படைகிறார். அவர்களைக் கைது செய்ய தேடிப் போகிறார். அப்போது ராக்கியும் அவருடன் செல்கிறது. இந்த நேரத்தில் எம்.எல்.ஏ. சாயாஜி ஷிண்டே, சுந்தர், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சேகர் ஆகிய நால்வரும் சேர்ந்து கூட்டுச் சதி செய்து சந்தோஷைக் கொலை செய்து விடுகின்றனர்.
இதன் பின்பு இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சேகர் இருவரும் கமிஷனர் செல்வத்திடம்போய், சந்தோஷைக் கொலை செய்தது யாரென்று தெரியவில்லை என்று பொய் சொல்கின்றனர்.
ஆனால், ராக்கி சந்தோஷைக் கொலை செய்த எம்.எல்.ஏ. சாயாஜி ஷிண்டே, சுந்தர், ராஜா, சேகர் ஆகிய நால்வரையும் எப்படி கண்டுபிடித்து பழிக்குப் பழி வாங்குகிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை…” என்றார்.
இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 12-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது.