‘அழகர்மலை’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படங்களுக்குப் பிறகு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.
இவருடைய நடிப்பில் தயாராகியிருக்கும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அதற்குள்ளாக தனது அடுத்த படத்தின் அறிவிப்பினையும் ஆர்.கே. வெளியிட்டுள்ளார். படத்தின் பெயர் ‘நீயும் நானும் நடுவுல பேயும்’.
சென்ற ஆண்டு வெளியாகி குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் இந்தப் படத்தை எழுதி, இயக்கப் போகிறார்.
இந்தப் படத்தில் வடிவேலுவும் நடிக்கவுள்ளதுதான் இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும். இந்தப் படம் முழுக்க, முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ளதாம். காமெடியில் கலக்கி எடுக்கும் கேரக்டரில்தான் வடிவேலு நடிக்கவிருக்கிறார்.
இன்றுவரை தொலைக்காட்சிகளில் ஆர்.கே.வும், வடிவேலுவும் நடித்த ‘எல்லாம் அவன் செயல்’, ‘அழகர்மலை’ படங்களில் இருந்து அதிகம் பார்த்து ரசிக்கும் காமெடியாக உள்ளது. இக்கூட்டணி வெற்றி பெற்ற கூட்டணியாக வலம் வந்தது. இதே கூட்டணி இப்போது மீண்டும் இந்த ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ படத்துக்காக இணைகிறது.
‘எல்லாம் அவன் செயல்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜரத்தினம் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஹீரோவுக்கு இணையான கதாநாயகி ரோலில் நடிக்க தமிழ்ச் சினிமாவின் மிக முக்கியமான ஹீரோயினுடன், பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
வரும் பிப்ரவரி மாதம் சென்னை, கேரளாவில் துவங்கி மற்றும் வெளிநாடுகள்வரையிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.