நீலம் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் கதிர், ‘கயல்’ ஆனந்தி, யோகிபாபு, லிஜிஸ் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’.
இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.
இது பற்றி படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில், “பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம். முதல் படம் ‘மாலை நேரத்து மயக்கம்’.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். எனக்கு அதிகமாக கிராமத்து வாழ்க்கை பற்றி பரிச்சயமும் இல்லை. எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான் எனது குரு. அவரிடமிருந்து கற்றுக் கொண்ட விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்க வைத்திருக்கிறது.
எனக்கு சில எழுத்தாள நண்பர்கள் இருக்கிறார்கள். வாசிப்பு அனுபவமும் கொஞ்சம் உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் இயக்குநர் மாரி செல்வராஜ்.
‘பரியேறும் பெருமாள்’ கதையைக் கேட்டவுடன் இந்த கதைக்கு நாம் வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கடவேண்டும் என்கிற எண்ணம் வந்தது.
இதன் படப்பிடிப்பு முழுக்க, முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும் பகுதிகளில்தான் நடந்தது. அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள், தெருக்கள், வெயில், மனிதர்கள், விலங்கினங்கள் அனைத்தையும் அப்படியே படம் பிடிக்க வேண்டும். கூடவே ஒரு அழகியலும் இருக்க வேண்டும் என்கிற ஆசையும் ஏற்பட்டது.
கதைக் களம், அதன் வேகம்.. இதற்கு ஈடுகொடுக்க கிம்பல் என்னும் தொழில் நுட்பத்தை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன்.
40 கிலோ எடை கொண்ட கிம்பல் கேமரா உபகரணங்களை தோளில் சுமந்து கொண்டு முழுப் படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும், படம் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. பட்ட சிரமத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது.
அந்தக் கிராமத்து நிலமும், மக்களும், வாழ்வியலும் தினம் தினம் என்னை உற்சாகமூட்டியதும், தயாரிப்பாளர் பா. இரஞ்சித் அண்ணனின் ஒத்துழைப்பும், இயக்குநர் மாரி செல்வராஜின் ஒத்துழைப்பும் சவாலான வேலையை செய்து முடிக்க பெரும் உதவியாக இருந்தது.
எந்த இடத்திலும் அந்த நிலத்தின் கலர் மாறாமல் அதை அப்படியே கொண்டு வர முயற்சி செய்திருக்கிறோம். மனிதர்களோடு விலங்குகளும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றன. அவற்றை படம் பிடிக்க கிம்பல் போன்ற உபகரணம் பெரிதும் உதவியிருக்கிறது.
‘பரியேறும் பெருமாள்’ குடும்பத்தோடு பார்க்கக் கூடிய அழகான ஒரு படமாக வந்திருக்கிறது. திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும், அழகையும் இந்த படத்தில் பெரிதும் எதிர்பார்க்கலாம்…” என்றார் பெருமையுடன்..!
இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.