ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட், பத்ரி கஸ்தூரிடன் இணைந்து, ‘பிளாக் டிக்கெட்’ கம்பெனி சார்பில் வி. ராஜலட்சுமி தயாரித்துள்ள திரைப்படம் ‘ஆர்.கே.நகர்’.
இந்தப் படத்தில் வைபவ், சனா அல்தாஃப் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
மேலும், அஞ்சனா கீர்த்தி, சந்தானபாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ பிரபாகரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா மற்றும் சில முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இசை – பிரேம்ஜி அமரன், ஒளிப்பதிவாளர் – எஸ்.வெங்கடேஷ், படத் தொகுப்பு – பிரவீன் கே.எல்., எழுத்து, இயக்கம் – சரவண ராஜன்.
இந்தப் படத்தில் ‘பப்பர மிட்டாய்’ என்ற ஒரு சென்சேஷனல் பாடலை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் பிரேம்ஜி.
ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது யூ டியூப் பார்வைகள் மற்றும் ஹாஷ் டேக் மூலம் மட்டுமே வரையறுக்கப்படுவதில்லை. மக்களை உடனடியாக முணுமுணுக்க, பாட வைப்பதிலும், விழாக்களில் ஒலிபரப்புவதிலும் இருக்கிறது.
இந்தப் பாடல் இப்போது கல்லூரி மாணவர்களிடமும், டீனேஜர்களிடமும் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. ரயில் பயணங்களில் குழுவாக இணைந்து பாடி மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இதுவொரு சம்பிரதாயமான கானா பாடல். அந்த ட்ரெண்ட் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. காஞ்சனா லோகன் எழுதிய எளிமையான பாடல் வரிகளும், கானா குணா அதை பாடிய விதமும் நிச்சயமாக அதை ஒரு வெற்றி பாடலாக்கி இருக்கிறது.
இந்தப் பாடல் பற்றிப் பேசிய இயக்குநர் சரவண ராஜன், “பிரேம்ஜி இசைத் திறமை மிகுந்த ஒரு கலைஞர். மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு இசையமைப்பாளராகவே நான் அவரை உணர்கிறேன்.
இன்றைய ட்ரெண்டில் இருப்பது அவரின் பலம். அவருடைய வெளித்தோற்றத்துக்கு மாறாக, பிரேம்ஜி மிகவும் தீவிரமான இசையமைப்பாளர். பின்னணி இசை கோர்ப்பில் பிரேம்ஜி மிகச் சிறந்தவர். அவருக்கு ஒரு இசையமைப்பாளராக கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை ஆர்.கே.நகர் நிச்சயம் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்…” என்றார்.