நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெரும். அப்படி யாராலும் மறக்க முடியாத வடிவேலுவின் வசனம் ‘படித்தவுடன் கிழித்து விடவும்..!’
இந்த வசனத்தை தலைப்பாக கொண்டு ஒரு புதிய படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தை I கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான செலவில் தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் R.உஷா.
படத்தில் கூல் சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மற்றும் பான் பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். வில்லனாக S.M.T.கருணாநிதி அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவு – வாசு, இசை – நிரோ பிரபாகரன், பாடல்கள் – மாஷா சகோதரிகள் மற்றும் அபிநந்தன், கலை – இன்ப ஆர்ட் பிரகாஷ், சண்டை இயக்கம் – ஸ்டன்ட் கோட்டி, படத் தொகுப்பு – முத்து முனியசாமி, மக்கள் தொடர்பு – மணவை புவன், இணை தயாரிப்பு –சுரேஷ் குமார், சேரமணி ஸ்ரீதர், தயாரிப்பு – R.உஷா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – செ.ஹரி உத்ரா. இவர் ஏற்கனவே மீத்தேன் திட்டத்தால் விவசாய நிலங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை மையமாக வைத்து ‘தெரு நாய்கள்’ என்ற படத்தை இயக்கியவர்.
இத்திரைப்படம் பற்றி இயக்குநர் ஹரி உத்ரா பேசும்போது, “இன்று பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் சில விஷயங்களை செய்வதோடு விட்டுவிடுகிறோம். அப்படி விட்டு விடுகிற ஒரு முக்கியமான விஷயம் இன்று நாம் வாங்கும் செல்போனிற்குகூட செய்கிறோமே இன்சூரன்ஸ் அதுதான்.
அதைப் பற்றிய ஒரு சிறு பயணம்தான் இந்த ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ திரைப்படம். இன்சூரன்ஸ் இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அப்படி நாம் செய்யும் இன்சூரன்ஸ் தொகையை வாங்க நாமும் முறையிடுவது இல்லை. சம்மந்தப்பட்ட கம்பெனிகளும் அதை மக்களுக்கு திருப்பிக் கொடுக்க முன் வருவதும் இல்லை. இதனால் கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் பணம் வங்கிகளில் முடங்கியுள்ளன.
அப்படி ஒரு அரசியல்வாதியால் இன்சூரன்ஸ் மோசடி செய்யப்பட்டு இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களின் துணை கொண்டு எப்படி அந்த அரசியல்வாதியை பழி வாங்கியது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக திரைக்கதை அமைத்துள்ளோம்.
பிளாஸ்டிக் தொழிற்சாலை கதையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளதால் மன்னார்குடி பகுதியில் மிக பிரம்மாண்டமான செலவில் பிளாஸ்டிக் தொழிற்சாலை செட் அமைத்து படமாக்கினோம்.
90 சதவீதம் படப்பிடிப்பு இரவில் மட்டுமே நடத்தியிருக்கிறோம். அதற்காக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட் ஹீலியம் என்ற புதுவகையான கேமராவில் CP3 எனும் லென்ஸை பயன்படுத்தியுள்ளோம். அது இரவு நேர படப்பிடிப்பு காட்சிகளை மிக துல்லியமாக படம் பிடித்துள்ளது.
படப்பிடிப்பு மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது” என்றார் இயக்குநர் செ.ஹரி உத்ரா.