தமிழ் சினிமாவில் திகில் வகை படங்களும் உண்டு, காமெடி வகை படங்களும் உண்டு. ஒன்று பயத்தை ஏற்படுத்தும், மற்றொன்று பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். ஆனால் சமீபகாலமாக இந்த இரண்டையும் ஒன்றாக இணைத்து பல படங்கள் மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அந்த வரிசையில், தற்போது அனைவரையும், முக்கியமாக குழந்தைகளை பயம் கலந்த நகைச்சுவையோடு மகிழ்விக்க வருகிறது, விகோசியா மீடியா தயாரிப்பில், S.T.குணசேகரன் இயக்கியுள்ள ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ திரைப்படம்.
இந்தப் படத்தில் நிதின் சத்யா, ரேஷா ராஜா ஜோடியாக நடித்திருக்கிறார்கள். மேலும் யோகிபாபு, சிங்கம் புலி, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.
“கடந்த சில காலமாக நகைச்சுவைக்கும், திகிலுக்கும், மக்கள் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலை தற்போது மாறி, இரண்டையும் ஒன்றாக இணைத்து தயாரிக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரேவற்பு இருக்கிறது.
அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு இந்த ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ திரைப்படம் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. திகிலுக்கும், நகைச்சுவைக்கும் எந்த விதத்திலும் பார்வையாளர்களுக்கு பஞ்சம் இருக்காது.
பாண்டி என்னும் குரங்கு கதாப்பாத்திரத்தை சுற்றிதான் இந்த படம் நகரும். எதிர்பாராதவிதமாக இறந்து போன நபரின் ஆவியான இந்த பாண்டி, அவரை சுற்றி இருக்கும் நபர்களுக்கு கொடுக்கும் தொல்லைகளை திகில் கலந்த நகைச்சுவையோடு இந்த படத்தில் கூறி உள்ளோம். சுரேஷின் ஒளிப்பதிவும், சுகுமாரின் இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது” என்கிறார் படத்தின் கதாநாயகனான நிதின் சத்யா.
2016-ம் வருடம் சத்யாவிற்கு கண்டிப்பாக ஸ்பெஷல்தான். காரணம், தற்போது வெளியாக உள்ள ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ மற்றும் ‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகம் படத்திலும் அவர் நடித்திருப்பதுதான்.
முழுக்க முழுக்க குழந்தைகளை கவரக் கூடிய இந்தத் திரைப்படம் வரும் மே 13-ம் தேதி வெளியாகிறது.