ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் படம் ‘நோட்டா.’
தெலுங்கில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த படங்களான ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ படங்களில் நாயகனாக நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தின் மூலமாக தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.
நாயகியாக மெஹ்ரீன் பிர்ஸாடா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சத்யராஜ், சன்சனா நடராஜன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நாயகன் விஜய் தேவரகொண்டா, நடிகர்கள் சத்யராஜ் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் சன்சனா, யாஷிகா, இயக்குநர் ஆனந்த் சங்கர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., படத் தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, “அரிமா நம்பி’யில் கொஞ்ச நேரமே நான் வந்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும்விதமாக நடிக்க வைத்து இயக்குநர் ஆனந்த் ஷங்கர் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தார். இதிலும் அதேபோல ஒரு கேரக்டரை கொடுத்துள்ளார்.
‘மிலிட்டரி’ படத்திற்குப் பின் பல வருடங்கள் கழித்து அண்ணன் சத்யராஜுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவிடம் எனக்கு தெலுங்கு தெரியாதது போல கொஞ்ச நாள் ஏமாற்றினேன். அதன் பின் அவருக்கு உண்மை தெரியவந்தபோது செல்லமாக என்னை திட்டினார். இந்தப் படத்திற்கு தமிழில் அவரே அற்புதமாக டப்பிங் பேசியிருக்கிறார்..” என்றார்.
நடிகர் நாசர் பேசும்போது, “இந்தப் படத்திற்காக ரொம்ப நாள் கழித்து ஒரு அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளேன். நடிப்பு என்கிற விஷயத்தை சுவைக்கின்ற படமாக இது இருக்கும்.
‘இருமுகன்’ படத்தில் என்னை ரொம்பவும் மெதுவாக வசனங்களை பேச சொன்னார் இயக்குநர் ஆனந்த் சங்கர். இந்தப் படத்திலும் அப்படி ஏதாவது சொல்வாரோ என பயந்தேன்.. ஆனால் நான் நினைத்து வைத்தது போலவே இந்தப் படத்தில் பேச சொல்லிவிட்டார்.
இது அரசியல் படம் என்பதால் இதில் நாங்கள் அவ்வப்போது ஒரு காட்சியை படமாக்கி முடிக்கும்போதும் வெளியிலும் அதேபோல நிகழ்வு நடந்ததுதான் எங்களுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது…” என்றார்.
இந்த நிகழ்வில் நடிகை சன்சனா பேசும்போது, “குறும் படத்தில் நடித்துவிட்டு, அடுத்ததாக வெப் சீரிஸில் நடித்திருந்த என்னை எப்படியோ கண்டுபிடித்து இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார் ஆனந்த் சங்கர். அதேபோல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் என்னை நம்பியதற்கு நன்றி” என்றார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசும்போது, “ஆனந்த் சங்கரை பொறுத்தவரை பாடல்களை குறைத்து பின்னணி இசையில் கவனம் செலுத்துவார். எனக்கும் அதே அலைவரிசை என்பதால் எளிதாக செட்டாகி விட்டோம்.
இந்தப் படத்தின் பின்னணி இசையை கவனிப்பவர்கள், இவர் வித்தியாசமான முயற்சிகளை பண்ணுவார் என்று என் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பிப்பார்கள். நாம் எதிர்கொண்ட, நம்மை பாதித்த விஷயங்களை இதில் ஆரம்பம் முதல் என்ட் கார்டுவரை விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்…” என்றார்.
நடிகர் சத்யராஜ் பேசும்போது, “நடப்பு அரசியலை அதிரடியாக படமாக எடுக்கும் தைரியம் இயக்குநர் மணிவண்ணனுக்கு மட்டுமே இருந்தது. ‘அமைதிப்படை’, ‘கோ’ என அரசியல் படங்களில் புதிய பாணியை புகுத்தியது போல இந்தப் படத்திலும் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர்.
எனக்கு பொதுவாகவே வேறு மொழியில் பேசி நடிப்பதுதான் கொஞ்சம் கஷ்டமான விஷயம். நண்பன் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக தெலுங்கை தமிழில் எழுதி வைத்துக் கொண்டு ஈஸியாக பேசிவிடலாம் என நினைத்தேன். ஆனால் ஒருநாள் முழுவதும் முயன்றும் என்னால் ஒரிஜினல் தெலுங்கில் பேச முடியவே இல்லை.
ஆனால் இந்தப் படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவோ, அழகான தமிழ் உச்சரிப்புடன் வசனங்களை பேசியதுடன் நாலு பக்க வசனங்களை ஞாபகமாக வைத்து பேசுவது பார்த்து பிரமித்து போனேன். ரொம்ப நாளாகவே எந்த மேக்கப்பும் இல்லாமல் இயல்பான கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை இதில் நிறைவேற்றி வைத்துவிட்டார் ஆனந்த் சங்கர்..” என்றார்.
இயக்குநர் ஆனந்த் சங்கர் பேசும்போது, “இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் தயாரானவுடன் நாயகனாக யார் என்கிற கேள்வி எழுந்தது.. காரணம் இதில் ஹீரோவைத் தவிர மற்றவர்களுக்கும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது.
அப்போதுதான் தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ என கலக்கலான வெரைட்டியான படங்களின் மூலம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விஜய் தேவரகொண்டா உருவாகிக் கொண்டு இருந்தார்.
தமிழ் ரசிகர்களும் சப் டைட்டிலுடன் அவரது படங்களை பார்த்து ரசிக்க ஆரம்பித்தனர். ஏன் இவரையே தமிழ் பேச வைக்கக் கூடாது என முடிவு செய்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் சொன்னேன்.. அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் பச்சைக்கொடி காட்டவே விஜய் தேவரகொண்டாவை சந்தித்து கதை சொன்னேன்.
முதலில் அரைமணி நேரம் கதை சுருக்கத்தை மட்டும் சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் அன்று மாலையே என்னை அழைத்து முழுக்கதையும் சொல்லுங்கள் என கூறியபோதே இந்தப் படத்தின் கதாநாயகன் இருக்கையில் அவர் அமர்ந்துவிட்டார்.
மொழி தெரியாத ஹீரோ என்பதால் வசனங்களை எதுவும் அவர் மாற்ற சொல்லாமல் நடித்து எனக்கு வசதியாக இருந்தது. படத்தில் அவரது தமிழ் உச்சரிப்பு எந்தவித மாறுபாடும் கண்டு பிடிக்க முடியாதவாறு அவ்வளவு நேச்சுரலாக இருக்கிறது.
அதேபோல சத்யராஜ் சாரும் முதலில் தயங்கினார். ஆனால் கதை கேட்டதும் டபுள் ஒகே சொல்லிவிட்டார். கதாநாயகியாக நடித்துள்ள மெஹ்ரீன் பிர்ஸாடாவை படம் வெளியான பின் யாரந்த பொண்ணு என நிச்சயம் கேட்பார்கள். அதேபோல ‘அருவி’ படம் பார்த்துவிட்டு அதன் ட்ரெய்லரை பார்த்ததுமே எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தாதான் இந்தப் படத்திற்கும் எடிட்டர் என முடிவுசெய்துவிட்டேன்.. ட்ரெய்லருக்குக்கூட நான் ஐடியா எதுவும் கொடுக்கவில்லை.. அவர் போக்கிலேயே விட்டுவிட்டேன்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இங்கிருந்தபடியே மாசிடோனியாவில் உள்ள 72 இசைக் கலைஞர்களை வைத்து வீடியோ ஸ்கிரீன் மூலமாக பின்னணி இசை அமைத்து அதிர வைத்துள்ளார். இரண்டு த்ரில்லர் படங்கள் இயக்கியிருந்தாலும் இது போன்ற ட்ராமா பாணி படம் இயக்குவதுதான் எனக்கு பிடிக்கும். அதனால்தான் 48 நாட்களிலேயே இந்தப் படத்தை என்னால் எளிதாக முடிக்க முடிந்தது…” என்றார்.
நாயகன் விஜய் தேவரகொண்டா பேசும்போது, “முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில் அதை கவனிக்காமல், ‘எண்ணித் துணிக கருமம்’ என்கிற திருக்குறளை திரும்பத் திரும்ப மனப்பாடம் பண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன்.
இயக்குநர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது. இந்தப் படம் குறித்து டிவிட்டரில் அடிக்கடி ‘மரண வெயிட்டிங்’ என கமெண்ட் போடப்பட்டு இருந்தது. அதேபோல நானும் இந்தப் படத்திற்காக மரண வெயிட்டிங். இந்தப் படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்லவேண்டும் என்பதுதான் என் ஆசை…” என்றவர் திருக்குறள் ஒன்றை அழகாக சொல்லி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
இந்தப் படம் வரும் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.