சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் V.T. ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் படம் ‘நான் அவளை சந்தித்தபோது.’
இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார்.
மேலும், மலையாளத்தின் முன்னணி நடிகரான இன்னசன்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜி.எம்.குமார், ‘பருத்தி வீரன்’ சுஜாதா, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், ‘காதல்’ சரவணன், ‘நாடோடிகள்’ ரங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆர்.எஸ்.செல்வா, இசை – ஹித்தேஷ் முருகவேல், பாடல்கள் – அறிவுமதி, நா.முத்துக்குமார், எல்.ஜி.ரவிச்சந்தர்,நல்.செ.ஆனந்த், கலை இயக்கம் – ஜெய்காந்த், படத் தொகுப்பு – ராஜா முகம்மது, நடன இயக்கம் – சிவசங்கர், பாலகுமாரன் – ரேவதி, தினேஷ், சண்டை இயக்கம் – ஹரி தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை – ஜி.சம்பத், தயாரிப்பு – V.T.ரித்திஷ்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எல்.ஜி.ரவிசந்தர்.
இவர் ஏற்கெனவே ‘மாசாணி மற்றும் பரத் நடித்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ போன்ற படங்களை இயக்கியவர்.
படம் பற்றி இயக்குநர் ரவிசந்தர் பேசும்போது, “தமிழகத்தில் 1996-ம் ஆண்டு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திதான் இந்தப் படத்தின் கதையை உருவாக்கி உள்ளோம்.
சினிமாவில் உதவி இயக்குநராகப் பணியாற்றும் ஹீரோ, வழக்கமாக வாய்ப்பு தேடி போகும்போது வழியில் இளம் பெண்(நாயகியை) ஒருவரை சந்திக்கிறான். சென்னையில் தன் உறவினரின் வீட்டிற்கு வந்தவள் அட்ரஸை தொலைத்துவிட்டு வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறாள்.
ஹீரோ அவரை காப்பாற்றி அவளின் ஊர்வரை கொண்டு போய்விட போகிறான். போன இடத்தில் ஊர்க்காரர்கள் இவர்கள் இருவரையும் காதலர்கள் என தவறாக நினைக்கிறார்கள்.
இதன் பின்னர் என்ன நடக்கிறது..? நாயகன், நாயகி என்ன ஆனார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை. படம் முடிந்து வெளியே வரும்போது அனைவரின் மனதிலும் ஒரு ஆழமான உணர்வினை இத்திரைப்படம் கொடுக்கும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், பாபநாசம், மாயவரம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் இம்மாதம் 27-ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது…” என்றார் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர்.