நடிகை திரிஷாவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மோகினி’. மேலும், பூர்ணிமா பாக்கியராஜ், யோகி பாபு, சுவாமிநாதன், ஆர்த்தி கணேஷ் மற்றும் ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரஷே் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் மாதேஷ் இயக்கியிருக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில் படம் பற்றி விரிவாகப் பேசினார் இயக்குநர் மாதேஷ்.
“என்னுடய முந்தைய படங்களின் வரிசையில் தற்போது மிக பெரிய படைப்பாக உருவாகியுள்ள படம் இந்த ‘மோகினி’தான். இப்படம் சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது.
இந்த ‘மோகினி’ படம் Horror பட வரிசைகளில் மிகவும் மாறுபட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘காதலன்’ படத்தில் ‘முக்காலா முக்காபுல்லா’ பாடலில் பிரபு தேவா தலை இல்லாமல் ஆடும் காட்சி முதல் இன்று பாகுபலிவரை விஷூவல் எபெக்ட்ஸ் மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது. அதே போன்று இப்படத்திலும் நிறைய விஷூவல் எபெக்ட்ஸ் காட்சிகள் உள்ளன.
ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படம் வந்துள்ளது. நிச்சயமாக படம் வெகுஜன மக்களிடம் எளிதாக சென்றடையும். மக்கள் எதிர்பார்க்கும் அனைத்துமே இப்படத்தில் உள்ளது. படத்தில் இடம் பெறும் 80 சதவிகித காட்சிகள் வெளிநாட்டில்தான் படமாக்கப்பட்டுள்ளன.
படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இப்படத்தில் த்ரிஷா சண்டை காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் டிரெயிலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போன்று படத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்..” என்றார் நம்பிக்கையோடு..!
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் குமார் பேசும்போது, “சிங்கம்-2’ படத்திற்கு பிறகு எங்களது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் இது.
‘மோகினி’ படத்தின் கதையை மாதேஷ் சார் என்னிடம் கூறும்போதே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
தற்போது பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக ‘Horror’ படங்களுக்கும் வரவேற்பு கிடைக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தின் கதை ஒரு வீட்டினுள் அல்லது ஒரு சிறிய இடத்தினுள் மட்டுமே நகரும் களம் கிடையாது.
இக்கதை லண்டனில் நடந்த ஒரு நிகழ்வை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிக பெரிய காட்சியமைப்புகள் படத்தில் உள்ளன. படத்தில் 55 நிமிடங்களுக்கு Visual Effects காட்சிகள் மிக அருமையாக வந்துள்ளது.
த்ரிஷா இப்படத்தின் கதாநாயகியாக நடித்தது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். தமிழ்ச் சினிமாவின் மிகப் பெரிய கதாநாயகிகளில் த்ரிஷாவும் ஒருவர். இப்படத்தின் கதை முழுவதுமே த்ரிஷாவை மையமாக கொண்டே நகரும்.
படத்தில் பணி புரிந்த யோகி பாபு மற்றும் சுவாமிநாதனின் காமெடி காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. படத்தில் பங்கு கொண்ட அனைத்து கலைஞர்களும் தங்கள் பணிகளை மிக சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.
இயக்குநர் மாதேஷ் சொன்ன கதையைவிடவும், இப்போது படம் பத்து மடங்கு சிறப்பாக வந்துள்ளது. தற்போது படத்தின் post production வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படம் சென்சாருக்கு திரையிட தயாராக உள்ளது. பிப்ரவரியில் படம் வெளியாகும்…” என்றார்.