Take Ok Creations என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.ராஜன் தயாரிக்கும் படம் ‘மிரட்சி.’
‘ஜித்தன்’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்த நடிகர் ‘ஜித்தன்’ ரமேஷ் இந்தப் படத்தின் மூலம் சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார்.
பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய் கோஸ், சாய், சனா, நிக்கிதா, அனில் குமார் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ரவி.V, படத் தொகுப்பு – N.ஹரி, இசை – ஆனந்த், பாடல்கள், வசனம் – N.ரமேஷ், தயாரிப்பு – P.ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.வி.கிருஷ்ணா.
படம் பற்றி இயக்குநர் M.V.கிருஷ்ணா பேசும்போது, “முழுக்க முழுக்க திரில்லர் கதையாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஜித்தன்’ ரமேஷ் இதுவரையிலும் நடித்திராத ஒரு நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம்.
படத்தில் பங்கு கொண்ட ஒட்டு மொத்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் ஒரு மணி நேரம் மட்டுமே இடைவேளைவிட்டு படப்பிடிப்பை நடத்தி கிளைமாக்ஸ் காட்சிகளைப் படம் பிடித்தோம். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியது எங்களுக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டு எடுத்த அந்தக் காட்சிகளை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும்.
இந்த அதி தீவிர திரில்லர் கதையை இதுவரையில் தமிழ்ச் சினிமாவில் யாரும் பார்த்திருக்க முடியாது. இந்த ‘மிரட்சி’ திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து மிரள வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இதன் படப்பிடிப்பு முழுக்க, முழுக்க கோவா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளது…” என்றார் இயக்குநர் எம்.வி.கிருஷ்ணா.