அஹிம்சா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இரண்டாவது திரைப்படம் ‘மே 22 – ஒரு சம்பவம்.’.
இந்த ‘மே 22 – ஒரு சம்பவம்’ கடந்த காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சார்ந்த சில உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம்.
‘மே 22 – ஒரு சம்பவம்’ திரைப்படம் மூன்று படங்களின் தொடர்ச்சியாக உருவாகும் படங்களில் ஒன்றாகும். இதற்கு முன்பாக உலகத்திலேயே இரண்டு இயக்குநர்கள் மட்டும்தான் இந்த முறையில் படங்களை இயக்கியுள்ளனர்.
முதலாவதாக இந்தியாவின் அடையாளமாகத் திகழ்ந்த வங்காள இயக்குநர் சத்யஜித்ரே உலகின் மிக முக்கிய படங்களாக இன்றும் கருதப்படும் ‘அபு சன்சார்’, ‘பதேர் பாஞ்சாலி’, ‘அபு டிரியாலஜி’ என்று மூன்று படங்களை இயக்கினார். அடுத்ததாக போலந்து இயக்குநர் ‘ரெட்’,’ ‘புளு’, ‘வொய்ட்’ என்று முன்று படங்களை டிரியாலஜியாக இயக்கினார்.
இந்த முறையில் ‘ஜல்லிக்கட்டு 5-23 Jan-2017’, ‘பசுமை வழிச் சாலை’, ‘மே-22 ஒரு சம்பவம்’ என மூன்று மக்கள் போராட்டங்களை மையப்படுத்திய திரைப்படங்களை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சந்தோஷ் கோபால்.
இதில் ‘மே 22 – ஒரு சம்பவம்’ திரைப்படம் ராஜீவ்காந்தி படுகொலை சம்பந்தமான படமாக இருக்கும் என்று தெரிகிறது. ஏனெனில் 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதிதான் தமிழகத்தில் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து மே 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்தது. தொடர்ந்து 3 நாட்கள் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இதைத்தான் படமாக்கியிருக்கிறார்கள் போலத் தோன்றுகிறது.
இந்த ‘மே 22 – ஒரு சம்பவம்’ திரைப்படத்தின் முதல் போஸ்டர் கடந்த ஜனவரி 24-ம் தேதியன்று ஸ்விட்சர்லாந்து நாட்டில், டாவோஸ்ஸில் உள்ள புகழ் பெற்ற உலக பொருளாதார மன்றத்தில்(World Economic Forum – WEF) வெளியிடப்பட்டது. உலக பொருளாதார மன்றம்(WEF) உலகளாவிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சுயாதீனமற்ற பொது நல அமைப்பு ஆகும்.
தமிழ்நாட்டில் பல சமுதாய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், ‘மே 22 – ஒரு சம்பவம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது முக்கியதுவம் வாய்ந்தது.
இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் கோபால் மற்றும் தயாரிப்பாளர் நிருபமா சந்தோஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சந்தோஷ் கோபால் இயக்குநராக அறிமுகமான ‘ஜல்லிக்கட்டு 5-23 Jan-2017’ என்னும் திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.