full screen background image

“பீட்டா’வுக்கு ஆதரவாகவே ‘மெரினா புரட்சி’ படத்தை  முடக்க நினைத்தார்கள்” – இயக்குநரின் அதிர்ச்சி தகவல்..!

“பீட்டா’வுக்கு ஆதரவாகவே ‘மெரினா புரட்சி’ படத்தை  முடக்க நினைத்தார்கள்” – இயக்குநரின் அதிர்ச்சி தகவல்..!

கடந்த 2017-ம் ஆண்டு சென்னஐ மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகத்து மக்கள் தன்னெழுச்சியாக ஒன்று கூடி, வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர்.

இந்த மாபெரும் போராட்டம், ‘மெரினா புரட்சி’ என்ற பெயரில் இப்போது படமாக தயாராகியுள்ளது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்கியுளார். யூடியூப் ‘புட் சட்னி’ புகழ் ராஜ்மோகன், மெரினா புரட்சியில் பங்கெடுத்த நவீன், சுருதி மற்றும்  பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்திற்கு, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத் தொகுப்பு செய்துள்ளார். அல்ருஃபியான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் தணிக்கை அதிகாரிகளால் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டு, ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு, பின் நீதிமன்ற கதவுகளை தட்டி ஒரு வழியாக சென்சார் (U) சான்றிதழ் பெற்று இப்போதுதான் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்த வலி மிகுந்த பயணம் குறித்து இயக்குநர் எம்.எஸ்.ராஜ் பல தகவல்களை பத்திரிகையாளர்களிடத்தில் பகிர்ந்து கொண்டார்.

Press Meet 01

“2017-ம் ஆண்டு சென்னஐ மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர். மெரினாவில் பல லட்சம் பேர் ஒன்று கூடினாலும், அவர்களை இங்கே ஒன்று கூடும்படி தன்னெழுச்சியாக வரவழைத்தது வெறும் 18 இளைஞர்கள்தான். மற்றபடி நடிகர்களோ எந்த இயக்கத்தை, அமைப்பை சேர்ந்தவர்களோ அல்ல.. அந்த 18 பேருக்கும் என்ன நோக்கம், மக்களை எப்படி திரட்டினார்கள், வெற்றிகரமாக இந்த போராட்டத்தை எப்படி முடித்தார்கள் என இதில் கூறியுள்ளோம். 

இந்த ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டது யார்.. அதன் பின்னால் உள்ள அரசியல் என்ன.. இந்த போராட்டத்தை ஒடுக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. அதை இளைஞர்கள் சாமர்த்தியாக எப்படி முறியடித்தார்கள்.. கடைசி நாள் போராட்டம் வன்முறைக் களமாக மாறியதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்  என்கிற உண்மையெல்லாம் மக்களுக்கு தெரிய வேண்டும் என்கிற நோக்கத்தில் தீவிரமாக புலனாய்வு செய்தே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்.

_70A8342

இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் பீட்டா அமைப்புதான் என்றும், நாட்டு மாடுகளை அழிப்பதுதான் பீட்டாவின் குறிக்கோள் என்றும் நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் பீட்டாவின் நோக்கம் அதுவல்ல.

பீட்டா இங்கே களமிறங்கியதே இன்னொரு தீவிரமான விஷயம் ஒன்றுக்காக. அதற்காக அவர்களுக்கு பல கோடி ரூபாய் எங்கே இருந்து கிடைத்தது..? அந்த பணத்தை கொண்டு எந்தெந்த அரசியல்வாதிகளை, எந்தெந்த நடிகர், நடிகைகளை அவர்கள் விலைக்கு வாங்கினார்கள், அதன் மூலமாக அவர்களை எப்படி தூண்டிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக இந்த தடையை வாங்கினார்கள் என்பதை இந்தப் படத்தில் புட்டுப்புட்டு வைத்துள்ளோம்.

_70A8496

இதன் பின்னணியில் ஒரு பிரபல நடிகை இருந்துள்ளதை இதில் அடையாளம் காட்டியுள்ளோம். அவரைப் பற்றிய உண்மை தெரியவரும்போது படம் பார்ப்பவர்களுக்கு இவரா அவர் என்கிற அதிர்ச்சி நிச்சயம் ஏற்படும்.

காரணம், ஜல்லிக்கட்டு மற்றும் பீட்டா விவகாரத்தில்  குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே நமக்கு எதிரானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் நமக்கு நன்கு தெரிந்த இன்னும் பலர் இதன் பின்னனியில் இருப்பது வெளியே தெரியவே இல்லை. குறிப்பாக நமது ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டும் என கூறி முக்கிய காரணமாக இருந்தவர்கள் இரண்டு தமிழர்கள்தான். அவர்கள் யாரென்பதை  அதை இதில் பகிரங்கப்படுத்தி இருக்கிறோம்.  

இதனாலேயே இந்தப் படத்திற்கு இங்கே சென்சார் சான்றிதழ் தரவே மறுத்தார்கள். மறு சீராய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டு அங்கே படம் பார்த்த நடிகை கௌதமியும் இதேபோன்று சில காரணங்களை சொல்லி கையை விரித்துவிட்டார். 

_70A8427

வேறு வழியின்றி நீதிமன்றத்தின் கதவைத் தட்டினோம். இந்த வருடம் ஜனவரி 7-ம் தேதி படத்தை பார்த்துவிட்டு சான்றிதழ் வழங்கவேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம்.

ஆனால் ஜன-17-ம் தேதி இரண்டாவது மறு சீராய்வு குழு நடிகை ஜீவிதா தலைமையில் படத்தை பார்த்துவிட்டு சில இடங்களில் காட்சிகளை நீக்கும்படி கூறினார்கள் ..ஆனால் இந்தப் படத்தில் உண்மை அப்படியே இருக்கட்டும்.. பொய் என எதை நீங்கள் நினைக்கிறீர்களோ அதை மட்டும் நீக்கி விடுங்கள் என உறுதியாக கூறினோம்.

இந்தப் படத்தை பார்த்த அதிகாரிகள் ‘மத்திய அரசு’ என்கிற வார்த்தை வரும் இடங்களை எல்லாம் மியூட் செய்ய கூறிவிட்டனர். அப்படி சுமார் 18 இடங்களில் நாங்கள் மியூட் செய்துள்ளோம். ஆனால் அதன் பிறகும் உடனே சான்றிதழ் அளிக்காமல் காலம் தாழ்த்தி இதோ இப்போது மே மாதம்தான் சான்றிதழை வழங்கியுள்ளனர். 

_70A8266

எந்த காரணத்தை கொண்டும் மத்திய அரசையும், பீட்டாவையும் விமர்சிக்கும் இந்தப் படத்தை வெளியாகவிடாமல் தணிக்கையின்போதே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்றுதான் சிலர் திட்டமிட்டு காய்களை நகர்த்தினார்கள். ஆனால் நீதிமன்றம் இதில் தலையிட்டதால் இனி படத்தை வெளியிடுவதை தடை செய்ய முடியாது என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது. 

இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள தமிழனரான ஜேசு சுந்தர மாறன் என்பவர் இந்தப் படத்தை வெளியிடுவதற்காகவே ஜெ ஸ்டியோஸ் எனும் நிறுவனம் துவங்கி அதன் மூலமாக கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், உள்ளிட்ட 11 நாடுகளில் சிறப்புக் காட்சியாக இந்தப் படத்தை திரையிட்டார்.

அனைத்து இடங்களிலும் படம் பார்த்தவர்கள் எங்களுக்கு ஆதரவான குரலையே எழுப்பினார்கள். இங்கிலாந்தில் இந்தப் படத்தை திரையிடுவதற்கு பீட்டா எதிர்ப்பு தெரிவித்தபோது, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என கூறி அதை பிரிட்டன் அரசு ஏற்க மறுத்துவிட்டது. 

அதேபோல சிங்கப்பூரில் இந்தப் படத்தை இந்த வருடம் மாட்டுப் பொங்கலன்று வெளியிட்டுவிடவேண்டும் என தீவிரமாக செயல்பட்டோம்.. ஆனால் இங்குள்ள அதிகார வர்க்கத்தினர் சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு அழுத்தம் கொடுத்து தமிழர்கள் மொத்தமாக ஒரே இடத்தில் ஒன்று கூடினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை காரணம் காட்டி திரையிட விடாமல் செய்தனர். அப்படியும் போராடி அன்றைய தினம் ஒரு காட்சியை திரையிட்டோம்.

எங்களுடைய நீண்ட நெடிய போராட்டத்தின் பயனாக இதோ இந்த மே மாத இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறோம். 82 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படம் காலகாலத்திற்கும் உலகமே வியந்து பார்த்த நம் தமிழர்களின் மெரினா போராட்டம் குறித்து நினைவலைகளை அடுத்து வரும் தலைமுறையினர் மத்தியில் எழுப்பிக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு வரலாற்று பதிவாக இந்தப் படம் இருக்கும்…” என்கிறார் இயக்குநர் எம்.எஸ்.ராஜ்.

 

Our Score