Third Eye Creations என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் M.D.விஜய் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘மரிஜூவானா’.
இந்தப் படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும், ஆஷா பார்த்தல் என்ற புதுமுகம் நாயகியாகவும் நடித்துள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், மன்னை சாதிக், பிஜிலி ரமேஷ் மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – எம்.டி.ஆனந்த், ஒளிப்பதிவு – பாலா ரோசையா, இசை – கார்த்திக் குரு, பாடல்கள் – காதல் வேந்தன், படத் தொகுப்பு – எம்.டி.விஜய், கலை இயக்கம் – டி.சரவணன், நடன இயக்கம் – பிரவீன் குமார், டிஸைன்ஸ் – பாலசுப்ரமணியம், சண்டை இயக்கம் – சரண், புகைப்படங்கள் – ஜூட், உடை வடிவமைப்பு – கெஸியா, தயாரிப்பு நிர்வாகம் – ஜி.ஏழுமலை, மக்கள் தொடர்பு – பிரியா.
‘தேர்டு ஐ கிரியேஷன்’ எம்.டி.விஜயிடம் இருந்து தமிழ் தாய் கலைக் கூடத்தின் சார்பில் எஸ்.ராஜலிங்கம் மற்றும் மைதீன் ராஜா இருவரும் வாங்கி வெளியிடுகிறார்கள்.
படத்தின் கதாநாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது, “என்னுடைய முதல் படமான ‘அட்டு’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அப்படத்தின் உடல்மொழி இதில் தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.
மேலும், இந்த ‘மரிஜூவானா’ படத்தில் நான் காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பதால் காவல் துறையில் பணிபுரியும் என் அண்ணனுடன் எட்டு நாட்கள் உடன் இருந்து கற்றுக் கொண்டேன். இப்படம் சமூக அக்கறை கொண்ட படம். நாயகியும் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆனால், எங்கள் இருவருக்கும் காதல் காட்சிகளும் இருக்கிறது…” என்றார்.
படத்தின் இயக்குநரான எம்.டி.ஆனந்த் பேசும்போது, “இது என்னுடைய முதல் படம். இது சைக்கோ, திரில்லர் டைப் திரைப்படம். ஒரு மனிதன் அதிகமான போதைக்கு அடிமையானால் என்ன விளைவு நடக்கும் என்பதுதான் இப்படத்தின் கதை. ஏழ்மையில் இருக்கும் குழந்தைகளை அவர்களை வாட்டுகின்ற வறுமைதான் தவறு செய்யத் தூண்டுகிறது என்ற கருத்தையும் இந்தப் படத்தில் கூறியிருக்கிறோம்.
‘மரிஜுவானா’ என்பது நமது ஊரின் போதைப் பொருளான ‘கஞ்சா’வைக் குறிப்பது. படத்தில் நாங்கள் ‘கஞ்சா’வை நேரடியாக காட்டவில்லை. இலையையும் சாணத்தையும் வைத்துதான் காட்சிப்படுத்தியிருக்கிறோம்.
உண்மை சம்பவங்களைத்தான் படமாகியிருக்கிறோம். பெண்களுக்கான பாதுகாப்பை சமூகம் கொடுக்க வேண்டுமா..? அல்லது அது அவர்களின் பெற்றோருடைய பொறுப்பா…? ஒருவன் தவறான பாதைக்கு செல்வதற்கு யார் காரணம்..? என்று யோசித்தால், என்னைப் பொறுத்தவரை பெற்றோர்கள்தான் அதற்கெல்லாம் முழு காரணம்.
பெண்கள் குறிப்பாக 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். ஆனால், சென்சாரில் ‘A’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ’52 காட்சிகளை நீக்கினால்தான் ‘A’ சான்றிதழை கொடுக்காமல் இருப்போம்’ என்றார்கள்.
ஆனால், ‘ஒரு இளைஞன் பெற்றோர்களுக்குத் தெரியாமல் என்னென்ன தவறுகளைச் செய்கிறான் என்பதைக் காட்சிப்படுத்தினால் மட்டும்தான் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். அதை விளக்கிக் கூறி வேண்டுமானால் U/A சான்றிதழாவது கொடுங்கள்’ என்று கேட்டோம். ஆனால் சென்சாரில் அதற்கும் மறுத்துவிட்டார்கள். ஆனால், கதை மற்றும் காட்சிகள் குடும்பத்துடன் பார்க்கும்படியாக இருக்கும்…” என்றார்.
படத்தை வெளியிடவிருக்கும் தமிழ்த் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் பேசும்போது, “இப்படத்தை வெளியிட நான் தேர்ந்தெடுத்ததற்கு படத்தின் கதைதான் காரணம். இதற்கு முன்பு உள்ள தலைமுறை இளைஞன் எப்படி இருந்தான். இப்போதுள்ள இளைஞன் எப்படி இருக்கிறான் என்பதைக் கூறும் படம் இது.
இப்போதுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செலவுக்கு கொடுக்கும் பணத்தை எந்த மாதிரியான விஷயங்களுக்கு செலவு செய்கிறார்கள் என்பதை கவனிக்கத் தவறி விடுகிறார்கள். குழந்தைகள் பாதிப்பிற்கு ஆளாகும்போதுதான் தெரிகிறது. ஆகையால், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக இப்படத்தை எடுத்திருக்கிறோம். வரும் 2020 பிப்ரவரி மாதத்தில் 200 திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்…” என்றார்.