தமிழ்த் திரையுலகில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ‘38 வயதினிலே’ படம் மூலமாகத் துவக்கிய நடிகை ஜோதிகா அடுத்து நடித்திருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’.
‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மாதான் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘பசங்க-2’ படத்தைத் தயாரித்த நடிகர் சூர்யாவின் 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு – எஸ்.மணிகண்டன், இசை – ஜிப்ரான்.
ஜோதிகா இந்தப் படத்தில் பிரபாவதி என்ற ஆவணப்பட இயக்குநரா நடித்திருக்கிறாராம். படத்தில் புல்லட் தவிர, வேற ஒரு வாகனத்தையும்ம் அவங்க ஓட்டுவாங்க.
நெடுஞ்சாலை பயணத்தில் மருமகள் ஒருத்தி தன்னுடைய மாமியாரையும் அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
படம் வரும் செப்டம்பர் 15-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி நடிகை ஜோதிகா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசும்போது, “இந்தக் கதை எப்படி ஒரு ஆணிடம் இருந்து வந்தது என இப்போதுவரையிலும் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.
எனக்கு ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரோடு இணைந்து நடிக்கும்போது சிறிது பயமாகத்தான் இருந்தது.
முதல் நாள் படபிடிப்பு ஒரு படகில் நடைபெற்றது. அப்போது என்னால் சரியாக வசனத்தை கூறி நடிக்க முடியவில்லை. அப்போது அவர்கள் மூவரும்தான் என்னை Comfort zone-க்கு கொண்டுவந்தார்கள். நான் ஊர்வசியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
நான் படத்தில் புல்லட் ஓட்டி நடிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது. இதற்காக சூர்யா எனக்கு 2 நாட்கள் புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். அதன் பிறகு மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஷீபா என்ற பயிற்சியாளரும் எனக்கு பயிற்சி அளித்தார்.
நான் என் மகள் தியாவை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்து சென்று டிராப் செய்தபோது அவளுக்கு பெருமையாக இருந்தது. ஆனால் என் மகன் தேவ்வுக்கு சூர்யாதான் எப்போதும் ஹீரோ…. ‘நாச்சியார்’ படத்தின் மூலம் நான் தேவ்வுக்கு ஹீரோவாக தெரிவேன் என்று நம்புகிறேன்.
நான் தற்போது சூர்யாவோடு ரெகுலராக ஜிமுக்க்கு சென்று வருகிறேன். இப்போது நான் என்னோடு நடித்த சக நடிகர்களைவிட ஐந்து வயதாவது இளமையாக தெரிவேன் என்று நம்புகிறேன்.
பெண் எழுத்தாளர்கள் யாரும் அறியாத ஹீரோக்கள். அவர்களுக்கு யாருமே தற்போது முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இயக்குநர் சுதா கொங்காராவுக்கு மாதவன் வாய்ப்பு கொடுத்தது நல்ல விஷயம். அவர் வாய்ப்பு கொடுத்ததால்தான் ‘இறுதி சுற்று’ என்று ஒரு படம் வெளிவந்து வெற்றி பெற்றது. இந்த நிலை மாற வேண்டும்..” என்கிறார் ஜோதிகா.