full screen background image

பழம் பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சுவின் ஆவணப் பட வெளியீட்டு விழா

பழம் பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சுவின் ஆவணப் பட வெளியீட்டு விழா

தமிழ்த் திரையுலகின் பெருமைமிக்க பழம் பெரும் இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு பற்றிய ஒரு ஆவணப் படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

இந்த ஆவணப் படத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்ச் சினிமாவின் மூத்தக் கலைஞர்களும், சாதனையாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் பஞ்சு அவர்களின் மூத்த மகனான பிருத்விராஜ் விழாவிற்கு வந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் வரவேற்றார். இவர் 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் புற்றுநோய் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_0202

விழாவில் இயக்குநர் விக்ரமன் பேசுகையில், “இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு அவர்கள் தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்த்தனர். புராண படங்கள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில், ‘பராசக்தி’ மாதிரியான ஒரு படத்தை தைரியமாக இயக்கி வெளியிட்டு சாதனை படைத்தனர்.

அது மட்டுமின்றி, இயக்குநர் என்றாலே ஈகோ கண்டிப்பாக இருக்கும். இயக்குநராக இருந்தாலும் இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை. அப்படியிருக்கையில், இவர்கள் இருவரும் இத்தனை ஆண்டுகாலம் ஒற்றுமையாக இருந்து தமிழ் சினிமாவிற்கு வைர கிரீடம் சூட்டியிருக்கிறார்கள்..” என்றார்.

kutti padmini

நடிகை குட்டி பத்மினி பேசுகையில், “நடிப்பை வெளிக்கொண்டு வருவதில் பஞ்சு அவர்களைவிட சிறந்த இயக்குநர் வேறு எவரும் இருக்க முடியாது. எனக்கு இப்போது அறுபது வயதானாலும் ‘குழந்தையும், தெய்வமும்’ படத்தைப் பற்றி இன்னும் எல்லோராலும் பேசப்படுவதற்கு காரணம் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள்தான்…” என்று கூறினார்.

avm kumaran

தயாரிப்பாளர் AVM குமரன் பேசுகையில், “நான் Line Producer-ஆக கிருஷ்ணன் பஞ்சுவிடம் பணியாற்றியிருக்கிறேன். என்னிடம் காட்சிகளை காண்பித்து அதைப் பற்றி என்னிடம் கருத்துக்களை கேட்டுதான் தேர்வு செய்வார். நிறை, குறை எதுவாக இருந்தாலும் நான் அவரிடம் கூறிவிடுவேன். அதை அவர் ஒரே மாதிரியாகத்தான் எடுத்துக் கொள்வார்.

அது மட்டுமல்லாமல் பஞ்சு அவர்கள் படப்பிடிப்புக்கு முதல்நாளே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து மறுநாள் எடுக்கப் போகும் காட்சிகளை பற்றி நன்றாக திட்டமிட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மேற்பார்வை செய்து விட்டுதான் படப்பிடிப்பு எடுக்க ஆரம்பிப்பார்..” என்றார்.

IMG_0850

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “இந்த ஆவணப் படம் மிகப் பெரிய பொக்கிஷம். எந்தவிதமான கதையாக இருந்தாலும் அதை நன்றாக செய்வதே அவர்களின் பலம். மேலும் குடும்பத்தில் கணவன், மனைவி அன்யோன்யம் இருந்தால்தான் இவ்வளவு பெரிய சாதனைகளை செய்ய முடியும்…” என்று அவருக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசினார்.

mahendiran

எழுத்தாளர் மகேந்திரன் பேசுகையில், தந்தைக்கு பெருமை சேர்க்கும்விதமாக இந்த ஆவணப் படத்தை தயாரித்த பஞ்சு அவர்களின் மகன்களை பாராட்டினார். “கிருஷ்ணன் பஞ்சு அவர்களிடம் நான் பணிபுரிந்தது எனக்குக் கடவுள் கொடுத்த வரம்..” என்றும் கூறினார்.

p.vasu

இயக்குநர் P.வாசு பேசும்போது, “நான் இயக்குநராக பேசுவதைவிட மாணவனாக பேசவே ஆசைப்படுகிறேன். இன்று நான் இங்கு நிற்பதற்கு கிருஷ்ணன் பஞ்சு அவர்களை பார்த்து வளர்ந்ததுதான் காரணம். நான் படித்த படிப்பு சினிமா, ஆனால் படித்த கல்லூரி கல்லூரி கிருஷ்ணன் பஞ்சுதான்..” என்று அவர்களுக்கு பெருமை சேர்த்தார்.

எழுத்தாளர் ஞாநி பேசும்போது, “ஒரு சினிமா படம் எப்படி எடுக்க வேண்டும் என்று வழிமுறையை கற்றிக் கொடுத்தவர்கள் கிருஷ்ணன் பஞ்சு. அவர்கள் சினிமாவிற்கு அளித்த பங்களிப்பை அவர்கள் ஆவணப் படம் மூலம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்ச்சி. இதே மாதிரி திரைத் துறையை சார்ந்த மேதைகளை பற்றி திரைப்பட சங்கம், இயக்குநர் சங்கம் போன்றவர்கள் தயாரிக்க வேண்டும். மேலும், அப்படி எடுக்கப்படும் படங்கள் மேதைகளை வாழும் காலத்திலேயே எடுக்க வேண்டும்…” எனவும் கூறினார்.

sasi

இயக்குநர் சசி கூறுகையில், “தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் இவற்றைத் தாண்டி தொழில் முறையிலும் ஒன்றாக இருப்பது அரிதான விஷயம். அதை இரண்டு மணி நேரத்தில் அழகாக காட்டிய தனஞ்செயனுக்கு பாராட்டு…” என்று கூறினார்.

m.n.rajam

நடிகை M.N.ராஜம் பேசுகையில், “கிருஷ்ணன் பஞ்சு அவர்கள் எனக்கு வழிகாட்டி மட்டுமல்ல, தெய்வம். N.S.K. அவர்களின் நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்த என்னை ‘இரத்தக் கண்ணீர்’ படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கிருஷ்ணன் பஞ்சு. அப்படம் பாதி முடிவடைந்த நிலையில் என்னை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று சர்ச்சை எழவே, அந்த பெண்ணை நீக்கினால் எங்களையும் நீக்கி விடுங்கள் என்று கிருஷ்ணன் பஞ்சு அவர்கள் திடமாக கூறிவிட்டார்கள். அன்று அவர்கள் அப்படி கூறவில்லையென்றால் நான் என்ன ஆகியிருப்பேனோ தெரியவில்லை. இதன் பின்பு அவர்கள் இயக்கிய அனைத்து படங்களிலும் எனக்கு ஏதாவது ஒரு கதாபாத்திரம் கொடுத்துவிடுவார்கள்…” என்றார் நன்றிப் பெருக்கோடு..!

IMG_0235

நடிகர் மோகன்V.ராம் பேசும்போது, கிருஷ்ணன் பஞ்சு இருவரும் பணிபுரிந்த விதம் பற்றியும், அவர்கள் காட்சி பலகை அமைத்தவிதம் பற்றியும், படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பாக திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவர்களாக திகழ்ந்தனர் என்று புகழாரம் சூட்டினார்.

அது மட்டுமல்லாமல், சிவாஜிகணேசன் அவர்களுக்கு செவாலிய விருது வழங்கும் விழாவிற்கு வந்திருந்த கிருஷ்ணனை பார்த்தவுடன் அனைவரின் முன்னிலையிலும் நடிகர் திலகம் சிவாஜி, கிருஷ்ணனின் காலில் விழுந்து வணங்கினார் என்று தன் மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.

aaroordoss

எழுத்தாளர் ஆரூர்தாஸ் அவர்கள், கிருஷ்ணன் பஞ்சு அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி பகிர்ந்து  கொண்டார். மேலும், தான் சினிமாவிற்கு வந்தது பற்றியும், தன்னுடைய வசனத்தை பேசி நடிக்காத நடிகர், நடிகைகளே கிடையாது என்றும், அது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் கூறினார். தனஞ்செயன் என்றால் அர்ஜுனன் என்றும், தனக்குத் தானே செய்பவன் என்றும் இந்த ஆவணப் படத்தின் இயக்குநரான தனஞ்செயனை பாராட்டினார்.

sivakumar

நடிகர் சிவகுமார் பேசுகையில், கடந்த 40 வருடங்களாக 4 தலைமுறையை வைத்து படம் எடுத்த கிருஷ்ணன் பஞ்சு அவர்களை பற்றி 2 மணி நேரத்தில் அழகாக கொடுத்த தனஞ்செயனை பாராட்டிப் பேசினார். மேலும் ‘உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டார்.

IMG_0250

நடிகர் சூர்யா பேசுகையில், “உலகில் உள்ள சினிமா படம் எடுக்கும் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் இந்த ஆவணப் படத்தை பார்க்கும்போது நான் என்ன செய்தேன் என்ற கேள்விதான் என்னுள் எழுகிறது. அதுமட்டுமின்றி, கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் நான் விளையாடி இருக்கிறேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.. அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமுடைய நல்ல மனிதராக இருக்க வேண்டும். இந்தச் சமுதாயத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய வேண்டும்..” என்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

dhananjayan

இயக்குநர் தனஞ்செயன் அவர்கள் பேசுகையில், இப்படம் எடுப்பதைப் பற்றி பஞ்சு அவர்களின் மூன்றாவது மகன் அபிமன்யு முதலில் என்னிடம் பேசினார். “இப்படத்தை முடித்த பிறகு, இன்னும் பல சாதனையாளரின் ஆவணப் படங்களை இயக்க ஆவலாக உள்ளேன்..” என்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

மேலும், “இயக்குநர் சுபாஷ் அவர்களும் இந்த ஆவணப் படத்தில் கிருஷ்ணன் பஞ்சு அவர்களை பற்றி பகிர்ந்திருக்கிறார். ஆனால், இன்று அவர் நம்மிடையே இல்லை. இப்படம் எடுத்து முடிக்கும் முன்பே அவர் இம்மண்ணை விட்டு மறைந்து விட்டார். அவருக்கும் இந்த நேரத்தில் அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்…” என்று கூறினார்.

இறுதியாக பேசிய பஞ்சு அவர்களின் மூன்றாவது மகனான அபிமன்யூ இப்படத்திற்கு பக்கபலமாக இருந்தவர்களுக்கு நன்றி கூறினார். பின்பு, அப்பாவின் 33-வது நினைவு நாளான இன்று இப்படம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

“ஒவ்வொரு வருடமும் இதே நாளில் சிறந்த எடிட்டர் மற்றும் இயக்குநருக்கான விருதுகளை கிருஷ்ணன் பஞ்சு என்ற பெயரில் வழங்கப்படும்…” என்றும் தெரிவித்தார். அதனை நடிகர் சிவகுமார் அவர்கள்தான் வழங்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நடிகர் சூர்யா எடிட்டர் கே.எஸ்.விக்னேஷ் அவர்களுக்கும், BOFTA-வின் மாணவர்களுக்கும் நினைவுப் பரிசினை வழங்கினார்.

Our Score