full screen background image

கொடி – சினிமா விமர்சனம்

கொடி – சினிமா விமர்சனம்

சம காலத்திய தமிழகத்தின் அரசியலை அலசிப் போடுகிறது இந்த ‘கொடி’ திரைப்படம். ‘காக்கிசட்டை’, ‘எதிர்நீச்சல்’ என்று இரண்டு பக்கா கமர்ஷியல் ஹிட்டுகளை கொடுத்த இயக்குநர் துரை செந்தில்குமார் மூன்றாவது படமாக முற்றிலும் டிராக் மாறி அரசியல் படமான இதைக் கொடுத்திருக்கிறார். இதனை ஏற்றுக் கொண்ட இயக்குநர் தனுஷுக்கும், தயாரிப்பாளர் வெற்றிமாறனுக்கும் நமது நன்றிகள்.

பொள்ளாச்சியில் வசிக்கும் கருணாஸ் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. ஆனால் அவர் உறுப்பினராக இருக்கும் ஜனநாயக கட்சியின் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். அக்கட்சியின் தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது தீராத பாசம் கொண்டவர். அரசியல், அரசியல், அரசியல் என்றே 24 மணி நேரமும் அலைந்து கொண்டிருக்கும் கருணாஸுக்கு இரட்டை குழந்தைகள்.. ஒருவன் கொடி. இன்னொருவன் அன்பு.

இதில் கொடி அரசியல் ஆர்வத்துடனும், அன்பு அதற்கு நேர்மாறாக அம்மா பிள்ளையாகவும் வளர்கிறான். சிறு வயதிலேயே கொடிக்கு மேடைகளில் பேசுவதற்கு வாய்ப்புகளை வாங்கிக் கொடுக்கிறார் அப்பா கருணாஸ்.

அந்தப் பகுதியில் பாதரசம் கழிவுகளை வெளிப்படுத்தும் ஒரு ஆலை அமைந்திருக்கிறது. இதனால் அக்கம்பக்கம் வசிப்பவர்களில் பெரும்பாலோருக்கு கேன்சர் நோய் ஏற்படுகிறது. இதையடுத்து கருணாஸின் கட்சியினர் அந்த ஆலையை மூடும்படி கோரிக்கை வைத்து போராடுகிறார்கள்.

இந்தப் போராட்டத்தை பெரும் போராட்டமாக்க நினைத்த கருணாஸ் அந்த ஆலை முன்பாகவே தீக்குளித்து செத்துப் போகிறார். இதனால் அவரது குடும்பமே அனாதையாகிறது.

இப்போது கொடி வளர்ந்து வாலிபனாகி அதே கட்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறார். அன்பு பக்கத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.

கொடியுடனேயே ஒரே வகுப்பில் படித்தபடியே மேடைகளிலும் சரிக்கு சரி பேசி தன்னை வளர்த்துக் கொண்ட ருத்ரா என்னும் த்ரிஷா கொடியின் எதிர்க்கட்சியும் தற்போதைய ஆளும் கட்சியுமான குடியரசு கட்சியில் பரபரப்பான பேச்சாளராக இருக்கிறார். ஆனாலும் எல்லை தாண்டிய காதல் போல், கட்சி தாண்டிய காதலாக கொடிக்கும், ருத்ராவுக்கும் இடையே காதல் தொடர்கிறது.

இன்னொரு பக்கம் அன்புவுக்கும் முட்டை பிஸினஸ் செய்து வரும் அனுபமா பரமேஸ்வரனுக்கும் இடையில் மோதலில் உருவான நட்பு, மெதுவாக காதலாக மாறியிருக்கிறது.

அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான நமோ நாராயணன் தேர்தலில் நிற்கும்போது கொடுத்த படிப்புச் சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரிய வந்ததால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்கிறது. இதனால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது.

இந்த நேரத்தில் அன்புவின் காதலியான அனுபமா தனது வீட்டில் நடத்தும் முட்டை தொழிற்சாலையில் சாதாரண லகான் முட்டையை டீத்தூளில் முக்கியெடுத்து கலர் சாயம் பூசி கடைகளுக்கு விற்பனை செய்வதை அன்பு பார்த்துவிடுகிறான். இதற்குக் காரணம் கேட்க.. தனது அக்கா குழந்தை உட்பட பல சின்னக் குழந்தைகள் பாதரச ஆலையின் கழிவுகளால் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு உதவுவதாகவே இந்த வேலையைத் தான் செய்வதாகவும் சொல்கிறார்.

விஷயம் அன்பு மூலமாக கொடிக்கு செல்கிறது. அந்த பாதரச ஆலையின் முன்பாகத்தான் தனது தந்தை தன் கண் முன்பாக தீக்குளித்து இறந்தது கொடிக்கு நினைவில் இருப்பதால் இந்த விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டி பிரச்சினையில் இறங்குகிறார்.

ஆலை மூடப்பட்டபோது இந்த்த் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த மாரிமுத்து 200 கோடி ரூபாயை லஞ்சமாக வாங்கிக் கொண்டு ஆலையின் சுத்திகரிப்பு பணிகள் முடிந்துவிட்டன என்று சர்டிபிகேட் கொடுத்த தகவல்கள் அனைத்தும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கிடைத்த ஆவணங்கள் மூலமாக கொடியின் கையில் சிக்குகிறது.

இதனை வைத்து தனது தலைவரிடம் நியாயம் கேட்கிறார் கொடி. அந்தப் பணத்தில் பாதி பங்கு கட்சிக்கும், தனக்கும் கிடைத்துவிட்டதை சொல்லி இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கும்படி சொல்கிறார் தலைவர். இதே நேரம் எதிர்க்கட்சியில் ருத்ராவுக்கு இடைத் தேர்தலில் நிற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

தனது காதலியிடம் பாதரச ஆலை பற்றிய விஷயத்தை கொடி சொல்ல.. அதை அவர் தனக்குச் சாதகமாக்கும்விதமாக தன்னுடைய கட்சியின் பிரச்சார மேடையில் சொல்லிவிடுகிறார். இதனால் கோபமான கொடியின் கட்சித் தலைமை அவரை கடுமையாக கண்டிக்கிறது. இதனால் கோபமான கொடியும் ருத்ராவுடன் சண்டைக்கு போகிறார்.

அதே நேரம் கொடியை சமாதானப்படுத்த அவரையே தனது கட்சியின் வேட்பாளராகவும் நிறுத்துகிறது கொடியின் கட்சி. தேர்தல் களத்தில் உண்மையான காதலர்கள் இருவரும் போட்டிக்கு நிற்க இந்த விஷயம் அரசல், புரசலாக இரண்டு கட்சிக்குள்ளும் பரவ.. த்ரிஷாவுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.

இந்த நேரத்தில் தனியாக சந்திக்க வேண்டும் என்று கொடியை அழைக்கிறார் ருத்ரா. இருவரும் சந்தித்துப் பேசுகையில் தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறாய் என்று சொல்லி த்ரிஷாவே  கொடியை கொலை செய்துவிடுகிறார்.

இதையடுத்து தொகுதி முழுவதும் கொடிக்கு அனுதாப அலை வீச.. த்ரிஷா தந்திரமாக கொடியின் தம்பி அன்புவை தங்களது கட்சிக்கு இழுத்து அவரையே சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்க வைக்கிறார். எப்படியும் நாங்கள் தோற்றுவிடுவோம் என்பது உறுதியானதால் எதிர்க்கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் போக, எதிர்ப்பே இல்லாமல் மிக எளிதாக சட்டமன்ற உறுப்பனராகிறார் அன்பு.

இப்போது அவரது முதல் வேலை தனது அண்ணன் கொடியை கொலை செய்தவரை கண்டுபிடிப்பதும்.. அந்த பாதரச ஆலையின் கழிவுகளை சுத்திகரிப்பு செய்வதுதான்.. இதற்கு த்ரிஷா அவ்வப்போது தடையாக இருக்க இதனை எப்படி முறியடித்து செய்து காட்டுகிறார் என்பதும் கொலையாளி த்ரிஷாதான் என்பதை அவரால் கண்டறிய முடிகிறதா என்பதும்தான் இடைவேளைக்கு பின்னான திரைக்கதை.

கடந்த 2011-ம் ஆண்டு புதுவையை ஆண்ட என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த கல்யாண சுந்தரம் பிளஸ்டூ தேர்வில் தனக்குப் பதிலாக வேறு ஒருவரை எழுத வைத்து இந்த ஆள் மாறாட்டம் தெரிந்தவுடன் பிடிபட்டு தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் போலி படிப்பு சான்றிதழ்களை வழங்கியதாக டெல்லி போலீஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்கள். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மீதும் போலி சான்றிதழ் சர்ச்சை எழுந்துள்ளது. இதேபோல் சர்ச்சைக்குரிய பெண் அமைச்சரான ஸ்மிரிதி இரானியும் போலியான கல்விச் சான்றிதழை சமர்ப்பித்திருப்பதாக போலீஸே அறிக்கை கொடுத்திருக்கிறது. ஆக மொத்தம்.. இந்தியாவில் லஞ்சம், ஊழல் கலாச்சாரத்திற்கு அடுத்து மிக முக்கியமான விஷயமாக இந்த போலி சான்றிதழ் விவகாரமும் இருக்கிறது.

இதையும் இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். பள்ளிப் படிப்பை முடிக்காமலேயே கல்லூரி படிப்பை முடித்ததாக சர்டிபிகேட் கொடுத்து மாட்டிக் கொள்கிறார் நமோ நாராயணா.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, திருப்பூரில் சாய ஆலைகள், பெப்சி மற்றும் கோக் ஆலைகள் என்று மக்களை பாதிக்கும் விஷயங்களை உள்ளடக்கிய பல நிறுவனங்களிடமிருந்து அனைத்து அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் கையூட்டு வாங்கிக் கொண்டு, அவர்களை எதிர்த்து போராடுவதுபோல போக்குக் காட்டி பிரச்சினையை மெல்ல, மெல்ல அமுங்கிப் போகும்படி செய்திருக்கிறார்கள்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலோருக்கு ஏதாவது ஒரு வகையில் உடல் உபாதைகள் ஏற்பட்டு அந்த வட்டாரத்தில் இறப்பு விகிதங்கள் அதிகமாகவே இருக்கின்றன. இன்னமும் பலர் நடைப்பிணமாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் அரசியல் கட்சிகள் ஒரு நாள் கூத்தாக ஒரு போராட்டத்தை நடத்திவிட்டு சென்றுவிடுகிறார்கள். அவ்வளவுதான்..!

உலகத்தில் இரண்டாவது மிகப் பெரிய இயற்கை கேடு பாதரசக் கழிவுகள்தான் என்று ஐ.நா. அமைப்பு சொல்கிறது. அப்பேர்ப்பட்ட கழிவுகளால் இன்றைக்கும் பல அப்பாவிகள் கேன்சர் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கின்றனர். இன்னும் பலர் உயிருடன் போராடி வருகிறார்கள். இது பற்றிய ஒரு விழிப்புணர்வை இந்த கமர்ஷியல் திரைப்படத்தின் மையக் கருவாக கையாண்டிருப்பதற்கு இயக்குநருக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள்..!

தனுஷ் முதன்முதலாக இரு வேடத்தில் நடித்திருக்கிறார். இரண்டுமே வேறு வேறு கேரக்டர் ஸ்கெட்ச். ஒருவர் தைரியசாலி. மற்றவர் அதைரியசாலி. மற்றைய படங்களை போலவே இந்த இரண்டு ஸ்கெட்ச்சுகளை வைத்து பல காட்சிகள் எழுதப்பட்டுள்ளன. சண்டை காட்சிகளும் ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

தனுஷ் கொடியாக வில்லத்தனம் நிறைந்த கட்சிக்காரனாகவும், வீறாப்பு பிடித்த மகனாகவும், கட்சியின் உண்மைத் தொண்டனாகவும், கலக்கலான காதலனாகவும், இரக்க குணம் உள்ளவனாகவும் பல்வேறுவிதமான குணாதிசயங்களை தனது உடல் மொழியால் நடித்திருக்கிறார்.

இதற்கு நேர் மாறாக அன்பு என்னும் தனுஷ், அப்பாவியாக.. அம்மாவின் செல்லமாக.. பயந்த சுபாவம் உள்ளவராக.. காதலிக்கு கட்டுப்படும் காதலனாக என்றெல்லாம் தனக்கான கேரக்டரில் கச்சிதமாக வாழ்ந்திருக்கிறார்.

மாஸ் ஹீரோவுக்கான தீம் மியூஸிக்குடன் சற்றே ஸ்டைலான நடை, உடை, பாவனையுடன் தனுஷ் தனது ‘கொடி’யை இதில் நிலை நாட்டியிருக்கிறார். தொடர்ந்தால் சந்தோஷம்தான்..!

த்ரிஷா இந்தப் படம்தான் தனக்கு முதல் படம் என்பதுபோல நடித்திருக்கிறார். தனது அரசியல் சதிகளை காதல் போர்வைக்குள் அடுக்கடுக்காக நகர்த்திக் கொண்டே போவதும், கொடியை காதல் பேச்சாலேயே அடக்குவதும்.. நமோ நாராயணனிடம் சீறித் தள்ளுவதும்.. தன்னை பெண் என்கிற ஒரே காரணத்துக்காக ஏகடியம் பேசுபவர்களை திட்டம் போட்டு பழி வாங்குவதுமாக இப்போதைய பல உண்மை அரசியல் பெண் புலிகளை அடையாளம் காட்டுகிறார் த்ரிஷா. அவருடைய கோபத்திற்கும், ஆக்ரோஷத்திற்கும் பொருத்தமான வாய்ஸும், உடல்கட்டும் அவரிடத்தில் இல்லை என்பதுதான் ஒரே மைனஸ்.

மலையாள வரவான புதுமுகம் அனுபமா பரமேஷ்வரின் இன்னொரு பக்கம் கலக்கியிருக்கிறார். வெகு சில நடிகைகளுக்கே குளோஸப் காட்சிகள் அற்புதமாக இருக்கும். இவருக்கு அது மிக அழகாக இருக்கிறது. நடிப்பில் குறையே வைக்காமல் “யார்ரா இந்த பாப்பா…?” என்று கேட்க வைத்திருக்கிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் அலட்டல் இல்லாத யதார்த்தமான கட்சித் தலைவராகவும், இன்னொரு பக்கம் விஜயகுமார் குடியரசு கட்சித் தலைவராகவும் நடித்திருக்கிறார்கள். எஸ்.ஏ.சி.யின் நடிப்புக்குத்தான் நிறைய சான்ஸஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.  கருணாஸ் கொஞ்ச நேரமே வந்தாலும் நெகிழ வைக்கிறார். தனது மகனின் வளர்ச்சிக்காக அவர் செய்யும் முன்னேற்பாடுகளெல்லாம் அப்பாவி தமிழனை அடையாளம் காட்டுகிறது.

வழக்கம்போல பாசமான அம்மாவாக சரண்யாவும், தோள் கொடுத்த தோழனுக்கு நன்றிக் கடன் காட்டும் நண்பனாக காளி வெங்கட்டும் நடித்திருக்கிறார்கள். காளி வெங்கட் கடைசியாக த்ரிஷாவின் கதையை முடிக்கும்போது பேசும்பேச்சு அவர் செய்ததையே நியாயப்படுத்திவிட்டது.

வெங்கடேஷின் ஒளிப்பதிவு, பிரகாஷ் மப்புவின் படத் தொகுப்பு இதையும் தாண்டி சந்தோஷ் நாராயணனின் இசையும் ஒலித்திருக்கிறது. பாடல்களைவிடவும் பின்னணி இசையே தனுஷை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறது. ‘வேட்டை போட்டு கொண்டாடு’ தனுஷ் ரசிகர்களுக்காகவும், ‘சிறுவாசம் காத்தாட’ பாடலை மெலடி ரசிகர்களுக்காகவும் போட்டு சமன்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர்.

மற்றைய மாநில மொழி படங்களை போல தமிழில் நேரடியாக எந்தவொரு அரசியல் கட்சியையும் தாக்கி சினிமாக்கள் வெளிவரவே முடியாது. ஆனால் கேரளாவில் கட்சி, அரசியல் என்றால் இன்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியையும், காங்கிரஸ் கட்சியின் கொடியையும் தைரியமாக காட்டுவார்கள். அவற்றின் பெயரைக்கூட பயன்படுத்துவார்கள். ஆனால் தமிழில் அவ்வளவு தைரியமான தயாரிப்பாளர் இதுவரையிலும் யாரும் இல்லாததால் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்று இதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இந்த அளவுக்காச்சும் பேசினார்களே என்று நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்..!

த்ரிஷாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை பார்க்கும்போது புலவர் இந்திரகுமாரி, வளர்மதி, கோகுல இந்திரா, சசிகலா புஷ்பா, விஜயதாரணி போன்ற தற்போதைய கட்சி சார்பானவர்கள் நினைவுக்கு வந்து தொலைகிறார்கள். அந்த அளவுக்கு திரைக்கதையை தற்போதைய அரசியல் உலகத்துடன் தொடர்புபடுத்தி எழுதியிருக்கிறார் இயக்குநர்.

இவருக்கு உறுதுணையாக வசனம் எழுதிய வசனகர்த்தா அமிர்தராஜுக்கும் நமது பாராட்டுக்கள். “மக்களுக்கு சேவை செய்யணும்னா ஒருத்தனும் பத்து பைசாகூட தர மாட்டான்.. ஆனால் லஞ்சமா கொடுக்கணும்னா லட்சம், லட்சமா அள்ளிக் கொடுப்பான்..” என்ற ஒரு வசனமே இந்தியாவின் தற்போதைய நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

திரைக்கதையின் பல டிவிஸ்ட்டுகள்தான் படத்தைத் தாங்கியிருக்கின்றன. த்ரிஷா – கொடி காதலை இப்போதிலிருந்து துவக்காமல் முதலிலேயே இருப்பது போல காட்டி நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். காதலன் சொன்ன ரகசியத்தை த்ரிஷா மேடையில் சொல்வதும், அதைத் தொடர்ந்த சம்பவங்களும், கொடியின் கொலையும் அதிர்ச்சி ரகம்தான்.

ஆனால் தம்பி திடீரென்று அண்ணனின் குணத்தில் மாறி, அடிதடியிலும், அடாவடியிலும் இறங்குவது எதிர்பாராத டிவிஸ்ட். இதற்கு மருத்துவரை சாட்சிக்கு அழைத்திருப்பது இயக்குநரின் டேலண்ட்.

த்ரிஷா செல்போன் டவரின் மேல் ஏறி நின்று கொண்டு மாவட்டச் செயலாளருக்கு முதல்வரையே சப்போர்ட் செய்ய வைத்து டிராமா போடுவது.. பின்பு மாவட்டச் செயலாளரையே அவரது வாயால் தன்னை வேட்பாளராக அறிவிக்க வைப்பது.. கொடியின் மரணத்திற்கு ஈடு கட்டுவதுபோல அன்புவை தங்கள் கட்சிக்கு இழுத்து வந்து அவரை வேட்பாளராக்குவது.. தான் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகியதால் நியமன எம்.பி. பதவி வேண்டும் என்று கட்சித் தலைவரிடம் தைரியமாக கேட்பது.. கூடவே மாவட்டச் செயலாளர் போஸ்ட்டையும் வாங்கிக் கொண்டு த்ரிஷா தனது தெனாவெட்டை காட்டுவது.. இன்ஸ்பெக்டரிடம் டிராமா போட்டு அவரை காட்டிக் கொடுத்து சாகடிப்பது… என்று படத்தின் கதையை முழுக்க, முழுக்க அரசியல் திரைக்கதைகளால் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். இதனாலேயே படத்தை அதீதமாக ரசிக்க முடிந்திருக்கிறது.

தனுஷின் கேரியரிலேயே இயக்குநர் செல்வராகவனைத் தவிர்த்து ‘இது இயக்குநர் படம்’ என்று பெயரெடுத்திருப்பது இந்தப் படம்தான். அந்தப் பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமாருக்கு நமது வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..!

இந்தக் ‘கொடி’யை நிச்சயம் நம்பிப் போகலாம்.. ஏமாற்றவில்லை. ஆனால் புதிய விழிப்புணர்வு ஒன்றை நமக்கு உணர்த்துகிறது.

அதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்..!

Our Score