கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற அரசியல் த்ரில்லரான ‘கோ’ படத்தைத் தந்த எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் தங்களின் ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் நிறுவனத்தின் மூலம் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான அரசியல் படத்தைத் தருகிறார்கள். அதுதான் ‘கோ-2’.
தேசிய விருது பெற்ற நடிகர்களான பாபி சிம்ஹாவும் பிரகாஷ் ராஜும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். பாபி சிம்ஹா இதுவரையிலும் செய்திருக்காத புதிய வேடம். “இது எனக்கே புதிய அனுபவம்… வேறு ஒரு உயரத்துக்கு என்னைக் கொண்டு போகும்,” என்கிறார் பாபி சிம்ஹா. படத்தின் நாயகியாக நிக்கி கல்ராணி. வெற்றிப் படங்களின் நாயகி. இந்தப் படத்தில் அவருக்கு மிக முக்கிய வேடம். படம் முழுக்க வருகிறாராம்.
பால சரவணனை வெறும் காமெடிக்காக மட்டும் பயன்படுத்தாமல், ஒரு முக்கிய வேடத்தைத் தந்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சரத். “இந்தப் படத்தின் ஹைலைட்டாக அவரது பாத்திரம் இருக்கும்..” என்கிறார் சரத். “மீடியா மற்றும் அரசியல் களத்தில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய கதையை இந்த ‘கோ 2’-ல் சொல்லியிருக்கிறேன்..” என்கிறார் இயக்குநர் சரத்.
உலகிலேயே பிரிக்க முடியாதவை என்ன தெரியுமா…? அரசியலும் மீடியாவும்தான். “அரசியல் தளத்தில்தான் மீடியாவின் சக்தி கட்டியெழுப்படுகிறது..” என்று பி.பி.சி. நிருபர் ஃப்ராஸுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சன் சொன்னது உலகப் பிரசித்தி பெற்றதாகும். இதை அடிப்படையாக வைத்துதான் தமிழ் சினிமாவிலும் வெற்றிப் படங்களை உருவாக்கியுள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், ‘கோ-2’ குறித்த எதிர்ப்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. அந்த எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வரும் மே 6-ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது ‘கோ-2’.
‘கோ-2’ சரவெடிக்காக காத்திருங்கள்!