சென்னையில் குறுகிய காலத்தில் பிரபலமானது தேனாம்பேட்டையில் இருக்கும் ஹயாத் ஸ்டார் ஹோட்டல்.
இந்த ஹோட்டலில் ஷூட்டிங் நடத்த பெரிய பெரிய பிரபலங்களே ஆசைப்படுவார்கள். ஷங்கர், கே.வி.ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய மூவரும் தங்கள் படங்களின் கதை விவாதங்களையே இந்த ஹோட்டலில்தான் நடத்துவார்கள்.
‘ஐ’ படத்துக்கு ஷங்கர் இங்கே ஷூட்டிங் நடத்த விருப்பப்பட்ட போது ‘கூட்ட நெருக்கடி ஏற்படும்’ எனச் சொல்லி அனுமதி கொடுக்க மறுத்தது ஹோட்டல் நிர்வாகம்.
இப்போது ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்துக்காக ஹயாத் ஹோட்டலில் பத்தாவது தளம் வாடகைக்குக் கேட்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், ரஜினியை வைத்து ஷூட்டிங் நடத்தினால் பாதுகாப்பு தொடங்கி பல விஷயங்களில் சிக்கல் ஏற்படும் எனத் தயங்கி யோசித்து கடைசியில் அனுமதி தருவதாகச் சொல்லிவிட்டது ஹோட்டல் நிர்வாகம்.
இதற்கிடையில் நரேன் – சூரி இணைந்து நடிக்கும் ‘கத்துக்குட்டி’ படத்தின் ஷூட்டிங்கை வெற்றிகரமாக ஹயாத் ஹோட்டலில் நடத்தியிருக்கிறார்கள் அந்தப் படக் குழுவினர்.
ஹோட்டலின் ஒன்பதாவது தளத்தில் சிறப்பு அனுமதி பெற்று ஷூட்டிங் நடத்தியிருக்கிறார்கள். இந்த விஷயம் கோடம்பாக்கம் முழுக்கப் பரவி, அவங்களுக்கே இல்லைன்னு சொல்லிட்டு இவங்களுக்கு எப்படி கொடுத்தாங்கன்னு ஒரு பரபரப்பு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.