RPM பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ‘கருத்துக்களை பதிவு செய்.’
இந்தப் படத்தில் ‘கலையுலகின் இலட்சிய நடிகர்’ என்று போற்றப்பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகங்கள்தான்.
ஒளிப்பதிவு – மனோகர், இசை – கணேஷ் ராகவேந்திரா, பாடல்கள் – சொற்கோ, கலை இயக்கம் – மனோ, படத் தொகுப்பு – மாருதி, நடன இயக்கம் – எஸ்.எல்.பாலாஜி, தயாரிப்பு மேற்பார்வை – D.P.வெங்கடேசன், கதை திரைக்கதை வசனம் – ராஜசேகர், இணை தயாரிப்பு – J.S.K. கோபி, இயக்குநர் – ராகுல் பரமஹம்சா.
இயக்குநர் ராகுல் பரமஹம்சா ஏற்கெனவே ‘ஜித்தன்-2’, ‘1 A.M.’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர்.
சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. அப்படி ஏமாற்றப்பட்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்திறார்..? அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார்…? என்பதே இந்தக் ‘கருத்துகளை பதிவு செய்.’ திரைப்படம்.
கடந்த வாரம் இந்தக் ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம் சென்சாருக்காக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் படத்தைப் பெரிதும் பாராட்டியிருக்கிறார்கள். இப்படத்திற்கு சென்சாரில் ‘U/A’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
“படத்தைப் பார்த்த சென்சார் போர்டு தலைமை அதிகாரி ‘இம்மாதிரியான படங்கள் இந்தக் காலத் தலைமுறைக்கு மிகவும் அவசியம்’ என்று சொல்லி பாராட்டினார்..” என்கிறார் படத்தின் இயக்குநரான ராகுல் பரஹம்சா.
‘கருத்துகளைப் பதிவு செய்’ திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகிறது.