அருள் மூவீஸ் பி. கே . சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘களம்’ படத்தை புதுமுக இயக்குநர் ராபர்ட்.S.ராஜ் இயக்கி உள்ளார். சூபீஷ் K சந்திரன் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத, முகேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரகாஷ் நிக்கி இசையமைத்துள்ளார்.
ஒரு வீட்டை மையமாகக் கொண்ட இப்படத்தில் ஆறு முக்கிய கதாபாத்திரங்களாக ‘வெண்ணிலா கபடி குழு’ ஸ்ரீநிவாசன் , ‘சுட்ட கதை’ நாயகி லக்ஷ்மி பிரியா, ‘கோலி சோடா’ மதுசூதனன், SS Music பூஜா, ஹம்ஜத் மற்றும் கனி ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குநர் ராபர்ட் இப்படத்தின் கதை பற்றி கூறும்போது, “இப்படம் வழக்கமான திரைக்கதையிலிருந்து வித்தியாசமாக இருக்கும். இக்கதை எந்த வகையானது என்று கணிப்பது கஷ்டம். இப்படத்தின் கதைக் கருதான் இப்படத்தை இயக்க தூண்டியது. இது நல்ல தரமானப் படமாக அமைய இரவு பகலென உழைத்திருக்கிறாோம். இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை மகிழ்விக்கும்” என்றார். இவர் ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கரின் இணை இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
கதாதிரியர் சூபீஷ் K சந்திரன் இக்கதையை பற்றி குறிப்பிடும்பொழுது, “இக்கதை முழுக்க முழுக்க பார்வையாளர்களின் நிலையில் இருந்து எழுதப்பட்ட கதை. எளிதில் புரியக்கூடியதாகவும், நிறைய ஆச்சரியமூட்டும் விஷயங்களுடன் படமாக்கப்பட்டுள்ளது” என்றார்.
“ஒரு வீட்டுக்குள்ளே பல வித்தியாசமான கோணங்கள் காட்டப்பட வேண்டியதாயிற்று, அது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்..” என்றார் ஒளிப்பதிவாளர் முகேஷ்.
கலை இயக்குநர் செந்தில் ராகவன் கூறுகையில், “இக்கதையில் வரும் வீட்டை பழமையானதாகவும், புதுப்பொலிவுடனும் காட்ட வேண்டியிருந்தது, அதற்காக அதிக உழைப்பும் தேவைப்பட்டது…” என்றார்.
இப்படம் தங்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என நம்பிக்கையாக இருக்கின்றனர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீநிவாசன், மற்றும் லக்ஷ்மி பிரியா ஆகியோர்.
“குறுகிய காலத்தில் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஜனவரி மாதம் திரைக்கு வரும்” என உறுதிபடக் கூறினார் தயாரிப்பாளர்.