சூர்யாவின் 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கடைக்குட்டி சிங்கம்.’
இந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அத்தை, மாமா, முறைப் பெண்கள், சொந்த ஊர், விவசாயம், ஊர் திருவிழா, ஜல்லிக்கட்டு, சிலம்பம் என்று நமது பாரம்பரியம், வாழ்வியல் பற்றிய உன்னதமான படைப்பாக உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த திங்கள்கிழமையன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதுவரையிலும் நடைபெற்ற சினிமா இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் நடக்காத ஒரு விஷயம் இந்த விழாவில் நடைபெற்றது.
நமது கிராமங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தாம்பூல தட்டுகளில் மாமன் சீர் எடுத்து வருவது வழக்கம். அப்போது அவர்களில் ஆண்கள் அனைவரும் பட்டு வேட்டி சட்டை மற்றும் பெண்கள் பட்டு சேலை உடுத்தி மகிழ்ச்சியோடு ஊர் சுற்றி வருவார்கள்.
அதே போல் இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, நாயகி சாயீஷா, ப்ரியா பவானி ஷங்கர், நடிகர்கள் சத்யராஜ், சூரி, விஜி, பானுப்ரியா, ஸ்ரீமன், இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்ட படத்தில் நடித்த 25-க்கும் மேற்பட்ட நடிகர்கள் இணைந்து பூ, பழங்கள் மற்றும் ‘கடைக்குட்டி சிங்கம்’ பாடல் சிடி அடங்கிய தாம்பூல தட்டுகளை எடுத்து வந்தார்கள்.
மதுரையிலிருந்து வந்திருந்த புகழ் பெற்ற நையாண்டி மேளக்காரர்கள் மற்றும் தப்பாட்டகாரர்கள் இசைத்தபடியே வர படக் குழுவினர் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி 9 வகையான தாம்பூல தட்டோடு சத்யம் தியேட்டரை சுற்றி மேடைக்கு வந்தார்கள்.
இதைப் பார்த்த விழாவுக்கு வந்த சினிமா ரசிகர்களுக்கு இதுவொரு இன்ப அதிர்ச்சியாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. கண்ணுக்கினிய அழகிய காட்சியாகவும், நமது ஊர் மற்றும் கிராமங்களில் நடக்கும் கலர்புல்லான கலாச்சார நிகழ்வு போல் சிறப்பாகவும் இருந்தது. அதன் பிறகுதான் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஆரம்பமானது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நமது சொந்த ஊரையும், உறவுகளையும் நியாபகபடுத்தியது மட்டும் அல்லாமல். நமது ஊரில் வேட்டி, சட்டையில் ஆண்களும், பட்டு சேலையில் பெண்களும் ஒன்றாக சேர்ந்து குடும்பமாக இனைந்து சந்தோஷத்துடன் ஊரை வலம் வந்து, எதிரே காணும் ஊர்க்காரர்களை உறவு முறை சொல்லி நலம் விசாரித்து மகிழ்ச்சியுடன் செல்லும் அந்த நிகழ்வை ஞாபகப்படுத்தியது என்பதுதான் உண்மை.
அதே போல் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நாயகன் கார்த்தி கதர் வேட்டி, சட்டை அணிந்தே நடித்துள்ளார். அவரை போலவே படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் கதராடையே வழங்கப்பட்டுள்ளது.
நெசவாளர்களின் நலன் கருதி படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் நெசவாளர்கள் தயாரித்த கதராடை அவர்களிடம் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி நெசவாளர்களின் நலன் கருதி ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலிருந்தே கதராடைகளையே பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் கலாச்சாரம், பண்பு என அனைத்தையும் காக்க வேண்டிய நேரமிது. இதனால் இந்தக் காலகட்டத்துக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ போல் ஒரு படம் அவசியம் தேவையாய் இருக்கிறது.