மனோன்ஸ் சினி கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆரூரான் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காவி ஆவி; நடுவுல தேவி’.
இந்தப் படத்தில் கதாநாயகனாக ராம் சுந்தர் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். மேலும் யோகி பாபு, தம்பி ராமையா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், சிவசங்கர், வேல் சிவா, ரிஷா, சிவகாமி, வாணி, டக்ளா ராமு மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவை கணேசனும், படத் தொகுப்பை ராஜ் கீர்த்தியும், சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியையும், பாடல்களை டாக்டர் ஹிருதயா, ஜீவன் மயில் இருவரும் எழுத நடன பயிற்சியை சிவசங்கரும், சிவராக் சங்கரும் கவனித்துள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தை கே.தமிழ்செல்வன், எம்.சரவணனும், தயாரிப்பு மேற்பார்வையை ஜெ.துரையும் கவனித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கான கதையை பழம் பெரும் இயக்குநரும், தயாரிப்பாளரும், கதாசிரியருமான வி.சி.குகநாதன் எழுதியுள்ளார். படத்திற்கு வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் புகழ் மணி.
இத்திரைப்படம் பற்றி கதாசிரியர் வி.சி.குகநாதன் பேசுகையில், “இந்தப் படத்தில் காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் நடித்திருக்கும் நடிகர் யோகிபாபு அதற்காக பதினொருவிதமான கெட்டப்புகளில் வந்து நகைச்சுவையை அள்ளி தெளித்திருக்கிறார்.
மேலும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும், அவருக்கு துணையாக மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் அடிக்கும் லூட்டிகள் நகைச்சுவையில் மேலும் கலக்கும். தம்பி ராமையா வரும் காட்சிகள் அனைத்தும் அதிரடி காமெடியாக இருக்கும்…” என்றார்.
படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பரமிப்பூட்டும் வகையில் இருக்கிறதாம். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.