தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரி உடன் இணைந்து, தனது சொந்த நிறுவனமான ஸ்வேத் குரூப் நிறுவனத்தின் சார்பில் ‘ஜருகண்டி’ என்ற படத்தை தயாரித்துள்ளார் நிதின் சத்யா.
இத்திரைப்படத்தில் நிதின் சத்யாவின் மிக நெருங்கிய நண்பரான ஜெய் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
‘ஜெகோபிண்டே சொர்க்க ராஜ்ஜியம்’ என்கிற மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடித்த ரெபா மோனிகா ஜான், இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.
மேலும், ரோபோ சங்கர், டேனியல், இளவரசு, போஸ் வெங்கட், அமித், ஜெயக்குமார், ஜி.எம்.குமார், நந்தா சரவணன், காவ்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், இசை – போபோ சசி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – ரெமியன், நடன இயக்கம் – அஜய் ராஜ், சதீஷ், பாடல்கள் – கங்கை அமரன், உமா தேவி, சந்துரு, சண்டை இயக்கம் – டான் அசோக், உடை வடிவமைப்பு – ஷில்பா வும்மிட்டி, உடைகள் – வாசு, தயாரிப்பு நிர்வாகம் – என்.சுப்பு, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, டிசைன்ஸ் – Fuze Creative.
இந்த படத்தின் மூலம் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய பிச்சுமணி, இயக்குநராக தமிழ்ச் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகிறார்.
ஆக்ஷன் மற்றும் பொழுது போக்கு படமான இந்த படத்தில் தான் மட்டும் வசதி, வாய்ப்புடன் வாழ, போலி ஆவணங்களை வைத்து நிதி நிறுவனத்தில் கடன் வாங்குபவராக நடித்திருக்கிறார் நடிகர் ஜெய்.
இத்திரைப்படம் வரும் அக்டோபர் 25-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் நிதின் சத்யா, பத்ரி கஸ்தூரி, நாயகி ரெபா மோனிகா, நடிகர் டேனியல், இயக்குநர் பிச்சுமணி, நடிகர் ஜெயக்குமார், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநர் ரெமியன், சண்டை இயக்குநர் டான் அசோக், நடன இயக்குநர் அஜய் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான நிதின் சத்யா, “சமீபத்தில் மிகப் பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் தனது ‘ஜருகண்டி’ படமும் நிச்சயமாக வெற்றி பெறும்…” என நம்பிக்கை தெரிவித்தார்.
நிதின் சத்யா இது குறித்து கூறும்போது, “இது ஒரு தயாரிப்பாளரின் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதையும் தாண்டி, சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் லிஸ்டில் ‘ஜருகண்டி’யும் நிச்சயம் இணையும்.
முதலில், சமீபமாக நல்ல படங்களாக ரிலீஸ் ஆகி, ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதை பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனித்துவமான கதைகளை ரசிகர்கள் கொண்டாடும் விதம் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையை தருவதோடு, ‘ஜருகண்டி’ இந்த சீசனில் ரிலீஸ் ஆவதற்கு மிகப் பொருத்தமான படம் என உறுதியாக நம்ப வைக்கிறது…” என்றார்.
அவரது மிக நெருங்கிய நண்பரும், நாயகனுமான நடிகர் ஜெய் பற்றி நிதின் சத்யா கூறும்போது, “இந்தப் படத்தின் மூலம் ஜெய் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பது இந்த படத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை. உண்மையில், அவர் முன்பு இருந்ததைவிட அதிக பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டார். படப்பிடிப்பு முழுவதும் நல்ல முறையில் நடக்க முழு ஒத்துழைப்பை கொடுத்தார். அவர் தன்னை ஒரு சிறந்த நடிகனாக மேம்படுத்த மிகவும் முயற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார்.” என்றார்.
மற்ற நடிகர்கள் பற்றி நிதின் சத்யா கூறும்போது, “படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை முழுக்க முழுக்க ரசிக்க வைக்கும். ரெபா மோனிகா ஜான் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் ட்ரெண்டியாக நடித்திருக்கிறார், இது உடனடியாக பார்வையாளர்களை ஈர்க்கும். டேனியல் ஆன்னி போப், ரோபோ ஷங்கர், இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார் என எல்லோரும் அவர்களின் தனித்துவமான பாணியில் நடித்து நிரூபித்துள்ளனர். போபோ சசி இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது, அவரது பின்னணி இசையும் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.