S3 பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் ‘ஜாம்பி’ படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பாடலாசிரியர் கார்த்தி.கே. பேசும்போது, “ஜாம்பி’ மாதிரியான படம் எடுப்பது எளிதல்ல. ஹாலிவுட் படத்தில் இருக்கும் தொழில் நுட்ப வசதி இங்கு கிடையாது. ஆனால், அதே தரத்தில் இந்த படத்தை எடுத்திருப்பதில் மகிழ்ச்சி. ஒரு மாற்றத்திற்காக குத்துப் பாடல் வைத்திருக்கிறோம். ‘பார்ட்டி’ பாடல் நன்றாக வந்துள்ளது…” என்றார்.
இயக்குநர் சிவா பேசும்போது, “ஹாலிவுட் படங்களைப் பார்க்கும்போது இடையிடையே சிறு, சிறு நகைச்சுவை காட்சிகளும் இருக்கும். அதேபோல், இப்படத்திலும் ஹாலிவுட் படத்திற்கு இணையாக அமைந்திருந்த நகைச்சுவையைக் கண்டு களித்தேன். யோகிபாபுவின் நகைச்சுவை நன்றாக அமைந்திருக்கிறது…” என்றார்.
இசைக் காட்டேரி பிரேம்ஜி பேசும்போது, “நான் எப்போதும் முரட்டு சிங்கிள்தான். யோகி பாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ரீரெக்கார்டிங் செய்யும்போது அவரின் நகைச்சுவையைப் பார்த்துத் தனியாக சிரித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அபிமான நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கும் படத்திற்கு இசையமைத்ததில் மகிழ்ச்சி. இறுதிக் காட்சியில் அமைந்த சண்டைக் காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு பட்டப் பெயர் மாறிக்கொண்டேயிருக்கும். அதேபோல்தான் இந்த படத்திற்கு ‘இசை காட்டேரி’ என்று வைத்துக் கொண்டேன்…” என்றார்.
நடிகை யாஷிகா ஆனந்த் பேசும்போது, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் ஒளிப்பதிவாளரின் பணிதான் முக்கியமானது. அந்தப் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு கோணத்திலும் கேமராவை வைத்து கடினமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
அதேபோல் நடன இயக்குநர் எனக்கேற்றவாறு நடனம் அமைத்துக் கொடுத்தார். இந்தப் படத்தில் நான் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். ஆனால் ஆபாசமாக நடிக்கவில்லை. நானும் குரூப்பாக நின்னு நடிச்சிட்டுத்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். எப்படி நடித்தால் நீண்ட நாள் இந்தச் சினிமாவுலகத்தில் இருக்கலாம் என்று தெரியும். அதுபோலத்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வேடத்திற்காக மேக்கப் போடுவதற்கு எனக்கு மூன்று மணி நேரமானது.. இரவு, பகலாக படப்பிடிப்பு நடந்தது. படக் குழுவினர் அனைவரும் ஒரு குடும்பம் போல பணியாற்றினோம்…” என்றார்.
இயக்குநர் பொன்ராம் பேசும்போது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான வசந்தும், முத்துக்குமாரும் எனது நண்பர்கள். இப்படத்தை நானும் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் என்னால் இயலவில்லை. பேய் படத்திற்கு நகைச்சுவை நன்றாக இருந்தால்தான் படம் வெற்றியடையும். அந்த வகையில் இந்தப் படத்தில் பேய் படமாக இல்லாமல் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். இன்று யு டியூப் அனைவரையும் சென்றடைந்திருக்கிறது. என்னுடைய மூன்று படங்களுக்கு விஷ்ணு பணியாற்றியிருக்கிறார். இப்படம் ஒரு புது முயற்சி என்று கூறலாம். இதுபோல அவர்கள் பல படங்கள் எடுக்க வேண்டும்…” என்றார்.
இயக்குநர் புவன் நல்லான் பேசும்போது, “யோகிபாபு எனக்காக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஒரு நல்ல கூட்டணி அமைந்ததில் மகிழ்ச்சி. ‘ஜாம்பி’ மாதிரியான படம் எடுக்கும்போது தொழில்நுட்ப கலைஞர்களின் உதவி பெரும்பங்கு வகிக்கும். அது இந்த படத்தில் எனக்கு நன்றாக அமைந்திருக்கிறது…” என்றார்.
தயாரிப்பாளர் வசந்த் பேசும்போது, “யோகிபாபு எங்களுக்கு உறுதுணையாக இருந்தார். ‘தர்பார்’ படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் இந்த விழாவிற்கு வர இயலவில்லை. இப்படத்தில் நடித்தவர்கள் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்களே..” என்றார்.
விழாவின் இறுதியில், ‘றெக்க’ படத்தின் இயக்குநர் சிவா இசைத் தகட்டை வெளியிட்டார். இயக்குநர் பொன்ராம் டிரெய்லரை வெளியிட்டார்.