ஒரே பெயரில் இரண்டு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு அவை இரண்டுமே சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.
‘ஹீரோ’ என்னும் பெயரில் Tribal Arts நிறுவனம் விஜய் தேவரகொண்டா, மாளவிகா மோகனன் நடிப்பில் ஒரு படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் பெயர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷனின் நடிப்பில் பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் ஒரு திரைப்படம் இதே பெயரில் உருவாகியிருக்கிறது.
இதனால் தங்களது படமான ‘ஹீரோ’ என்கிற பெயரை சிவகார்த்திகேயன் படத்தின் தயாரிப்பாளர் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக Tribal Arts நிறுவனம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்து “அந்தப் பெயரை தாங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்” என்கிற சான்றிதழையும் தயாரிப்பாளர் சங்கத்தில் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் விளம்பரம் அதே பெயரில் வெளியானதை அடுத்து அதன் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் கொடுத்துள்ளது Tribal Arts நிறுவனம்.
இது தொடர்பாக Tribal Arts நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது :
நான் “Tribal Arts” நிறுவனம் சார்பாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன் (Mem No: 3812). எனது நிறுவனத்தின் பெயரில் கடந்த 04.07.2017- அன்று ‘ஹீரோ’ என்ற படத் தலைப்பினை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து, முறையாக புதுப்பித்து 03.06.2020-ம் ஆண்டுவரை உரிமம் பெற்றுள்ளேன் (Title Ref No : 7123).
‘ஹீரோ’ என்ற எங்களது தலைப்பில் ஆனந்த் அண்ணாமலையின் எழுத்து, இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.
இந்த சூழ்நிலையில் சில மாதங்களாக தமிழ் மொழியில் KJR studios என்கிற தயாரிப்பு நிறுவனம் ‘ஹீரோ’ என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை வைத்து படம் தயாரிப்பதாக பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.
இதனை கண்டு தயாரிப்பாளர் சங்கத்தை நாங்கள் அணுகியபோது, அவர்கள் கடந்த 2019 ஏப்ரல் 16 அன்று எங்களது தலைப்பினை பயன்படுத்திவரும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு இப்படத்தின் தலைப்பினை பயன்படுத்தக் கூடாது என்று கெளரவ செயலாளர் திரு. எஸ்.எஸ்.துரைராஜ் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பி வைத்து, கடிதத்தின் நகலையும் எங்களுக்கு கொடுத்து உறுதி அளித்தார்கள்.
ஆனால் KJR studios தயாரிப்பு நிறுவனம், தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி (02.09.2019) அன்று பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் ‘ஹீரோ’ என்ற தலைப்பில் போஸ்டர்களை வெளியிட்டனர்.
ஆகவே, இந்த கடிதத்தின் வாயிலாக KJR studios தயாரிப்பு நிறுவனத்திற்கு ADVOCATE NOTICE அனுப்பபட்டுள்ளது என்பதனை பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்…”
இவ்வாறு தனது அறிக்கையில் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.