full screen background image

ZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’

ZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’

இந்தியாவின் வெகுவேகமாக வளர்ந்து வரும் ஓடிடி(OTT) தளமான ZEE-5-ல், ஏற்கனவே வெளியாகி வெற்றியடைந்த தமிழ் தொடர்களான ‘திரவம்’, ‘ஆட்டோ சங்கர்’, ‘போஸ்ட்மேன்’ ஆகியவற்றை தொடர்ந்து, தற்போது ரசிகர்களை ஈர்க்கும்வண்ணம் ‘ஃபிங்கர் டிப்’ என்னும் திரில்லர் தொடரை வழங்க இருக்கிறது.

பிரபல திரைப்பட இயக்குநரான விஷ்ணுவர்த்தன் இந்தத் தொடரைத் தயாரித்திருக்கிறார். அறிமுக இயக்குநரான சிவாகர் இத்தொடரை இயக்கியிருக்கிறார்.

இந்தத் தொடரில் அக்சரா ஹாசன், அஷ்வின் காகுமனு, காயத்ரி, சுனைனா, மதுசூதனன் ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களினால் ஏற்படும் தவறான விளைவுகளை மையப்படுத்தி ஐந்து புதிரான கதைகளைக் கொண்ட இந்தத் தொடர், வருகின்ற ஆகஸ்ட் 21-ம் தேதி ZEE-5 இணையத்தில் வெளியிடப்படுகிறது.

‘ஃபிங்கர் டிப்’ என்னும் இத்தொடர், ஒரு ஸ்வைப் அல்லது ஒரு சமூக வலைத்தள பதிவு எப்படி ஒரு பயனாளரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடக் கூடும் என்பதையும், அவர்களது சௌகரியங்களைவிட்டு நகர்த்தி, ஒரு தாங்க முடியாத சமூக அழுத்தத்தை அவர்கள் மேல் திணித்து விடுகிறது என்பதையும் மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

ஒவ்வொரு எபிசோடும், நடைமுறையில் நமது பழக்கத்தில் உள்ள ஒரு அப்ளிகேஷனுடன் ஒப்பிடக் கூடிய வகையில், கற்பனையான அம்சங்கள் நிறைந்த ஒரு ‘ஆப்’பை உருவாக்கி, மனிதனுடைய இருட்டான, எதிர்மறை உணர்வுகளான பேராசை, தீராத கோபம் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்தத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘பிங்கர் டிப்’ தொடரில் பங்கேற்ற அனைத்து நடிகர், நடிகைகளும், தொழில் நுட்பக் கலைஞர்களும், ஜீ-5 நிறுவனத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை அக்சரா ஹாசன் பேசும்போது, “பல தரமான அசலான தமிழ் படைப்புகளை உருவாக்கிவரும் ZEE-5 நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தற்போது சமூக வலைத்தளங்கள் நமது அன்றாட வாழ்வின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்ட நிலையில், அதன் தவறான விளைவுகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை எற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இத்தொடரில் நடிக்கும்பொழுது நான் அடைந்த மகிழ்ச்சியை, இத்தொடரை பார்க்கும் ரசிகர்களும் அடைவார்கள் என நம்புகிறேன்…” என்றார்.  

இத்தொடரின் இயக்குநரான சிவாகர் பேசும்போது, “அசலான புதிய நிகழ்ச்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் இந்தக் காலச் சூழலில், அதன் முன்னோடியாகத் திகழும் ZEE-5 உடன் இணைந்து பணியாற்றுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

பரபரப்பான திரில்லர் தொடரான இந்த ‘ஃபிங்கர் டிப்’ தொடர், உங்களை வெகுவாக ஈர்க்கும். யோசிக்க வைக்கும். அதேசமயம் உங்களை மகிழ்ச்சியடையவும் செய்யும்..” என்றார். 

ஜீ-5 நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் பிரிவின் தலைவரான அபர்ணா அசரேகர் பேசும்போது, “சமூக வலைத்தளங்களுடன் நாம் அன்றாடம் தொடர்பில் இருக்கிறோம். அதனுடைய எண்ணிலடங்கா நன்மைகளையும் அனுபவித்து வருகிறோம். ஆயினும் அதன் ஊடுருவும் தன்மையும், ஆளுமையும் சில எதிர்மறை பயன்களையும் கொண்டிருக்கிறது.

அத்தகைய ஒரு கதையான இந்த ‘ஃபிங்கர் டிப்’ இணையத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக, ரசிகர்களை ஈர்க்கும்வண்ணம் படைக்கப்பட்டிருக்கிறது. எங்களது முந்தைய அசல் தமிழ் நிகழ்ச்சிகள் தனித்துவமான வரவேற்பினைப் பெற்றிருக்கும் நிலையில், இந்தத் தொடருடன் எங்கள் பிராந்திய மொழி நிகழ்ச்சிப் பங்களிப்புகளை மேலும் வலுப்படுத்துவோம் என்று நம்புகிறோம்…” என்றார்.

ZEE-5 நிறுவனமானது உலகளாவிய பறந்து விரிந்திருக்கும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மற்றும் செய்தி, ஊடக குழுமமான  ZEE எண்டர்டைன்மென்ட் எண்டர்ப்ரைஸஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணையத் தளப் பிரிவாகும்.

ZEE-5 நிறுவனம் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒடியா, போஜ்பூரி, குஜராத்தி, பஞ்சாபி ஆகிய 12 மொழிகளில், 80-க்கும்மேற்பட்டதொலைக்காட்சி சேனல்கள், மற்றும் 1 லட்சம் மணி நேர தேவைக்கேற்ற நிகழ்ச்சிகளைத் தயாரித்தும், விநியோகித்தும் வருகிறது.

இத்தளம், அசல் பிராந்திய மொழி நிகழ்ச்சிகளையும், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், நாடகங்கள், நேரலை மற்றும் உடல் நலம் – சுகாதாரம் ஆகிய வாழ்க்கை முறை சார்ந்த நிகழ்சிகளையும் வழங்கி வருகிறது.

மேலும் ZEE-5, 11 தேடுமொழிகளில், நிகழ்ச்சிகளை தரவிறக்கம் செய்யத்தக்க வசதி, வாய் மொழி தேடல் மற்றும் தடையற்ற காணொளி என்ற பெருமிதமிக்கப் பின்னணியை கொண்டிருக்கிறது.

Our Score