அபுண்டு ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட்(ABBUNDU STUDIOS-P-LTD) என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘எங்கே அந்த வான்’.
படத்தில் நாயகி கமலியாக ஆனந்தி நடிக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் அனைவராலும் பாராட்டுப் பெற்ற ஆனந்திக்கு, இப்படம் மேலும் ஒரு மகுடம் சேர்க்கும்.
ஆனந்திக்கு ஜோடியாக ரோஹித் சரப் அறிமுகமாகிறார். இவர் ஹிந்தியில் பரபரப்பாக ஓடிய ‘ஹிச்கி’(HICHKI) படத்தில் நடித்துள்ளார். மேலும், ஷாருக்கான் நடித்த ‘டியர் சிந்தகி’ படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிப்பதற்காக தமிழ் மொழியை சிறிது கற்றுக் கொண்டு நடித்திருக்கிறார்.
இவர்களுடன் பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
குறும்படம் மற்றும் விளம்பர படங்களுக்கு இசை அமைத்து வரும் தீனதயாளன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவு – ஜெகதீசன் லோகயன், படத் தொகுப்பு- ஆர்.கோவிந்தராஜ், கலை இயக்கம் – தியாகராஜன், பாடல்கள் – யுகபாரதி, மதன் கார்க்கி, கார்த்திக் நேத்தா, நடன இயக்கம் – பாப்பி சதீஷ், மக்கள் தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு நிர்வாகம் – ஏ.ஜெய் சம்பத், தயாரிப்பு – அபுண்டு ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட்.
லிங்குசாமி, உதயசங்கர் போன்ற பிரபல இயக்குநர்களிடம் பணிபுரிந்த ராஜசேகர் துரைசாமி முதன் முறையாக இந்தப் படத்தை இயக்கியதன் மூலமாக தமிழில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் ராஜசேகர் துரைசாமி பேசுகையில், “ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய, புதிய காதல்கள் உதயமாகும்… அறிமுகமாகும்… நம் மனசுக்கு இதமாக சுகமளிக்கும். அப்படி ஓர் காதல் படைப்புதான் இப்படம். காதலை தேடிய ஒரு பெண்ணின் கவிதையாய் படைக்கப்பட்டிருக்கிறது இந்த ‘எங்கே அந்த வான்’ திரைப்படம்.
திருவையாற்றில் பிறந்து சாதாரண பள்ளியில் படித்து… சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்ந்து மேற்படிப்பு படிக்கிறார் கமலி. அப்போது அவளின் வாழ்க்கையில் ஒரு அசாத்தியமான காதலும் சேர்ந்து பயணிக்கிறது. அதன் பின்னான கதைதான் இத்திரைப்படம்..” என்றார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், கோபிசெட்டிபாளையம், சென்னை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் உச்சக்கட்ட காட்சி டெல்லியில் படமாக்கப்பட்டுள்ளது.