தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர் தனுஷ் – நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது.
இருவரும் இணைந்து நடித்த ‘படிக்காதவன்’, ‘உத்தமபுத்திரன்’, ‘மாப்பிள்ளை’, ‘வேலையில்லா பட்டதாரி-1&2’ ஆகியவை வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இதனால்தான் இந்த ஜோடி தமிழ் சினிமாவின் ராசியான ஜோடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த ராசியான ஜோடியை மீண்டும் ஒருமுறை இணைத்திருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி.
இவர் தற்போது உருவாக்கி வரும் ‘எழுமின்’ திரைப்படத்தில் நடிகர் விவேக் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தற்காப்புக் கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயாணி இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு முக்கியமான பாடலை, தனுஷ் பாடிக் கொடுத்திருக்கிறார்.
பாடலாசிரியர் தமிழணங்கு எழுதிய ‘எழடா.. எழடா…’ எனத் தொடங்கும் அந்தப் பாடலுக்கு கணேஷ் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
நடிகர் விவேக், படத்தின் திரைக்கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் உத்வேகம் பொருந்திய இப்பாடலை, தனுஷ் பாடினால்தான் சரியாக அமையும் என பரிந்துரைத்திருக்கிறார். அதன்படியே தனுஷ் இந்தப் பாடலை பாடியதாக சொல்கிறார் இயக்குநர் V.P.விஜி. மேலும், இந்த பாடலுக்கு மட்டுமல்லாமல், படத்திற்கும் தனுஷின் குரல் பலம் சேர்த்திருப்பதாக கூறுகிறார் அவர்.