ஸ்ட்ரீட் லைட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜோ ஜியாவானி சிங் தயாரித்து, படத்தில் வில்லனாகவும் நடித்து, இயக்கியிருக்கும் சிங்கப்பூர் தமிழ்த் திரைப்படம் ‘டான் கீ’.
ஜாக் எனும் கதாபாத்திரத்தில் முரளி ராம் கதாநாயகனாக நடித்துள்ளார். சிங்கப்பூரின் பிரபல பாப் பாடகியும், மாடலிங்குமான நபீஸா பேகம் ஜலாலுதின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், இரண்டாம் கதாநாயகியாக ஷ்ரீன் காஞ்ச்வாலா, ஹபிபி, விக்கி, பிரபு, கதிரேசன்ராஜ், சாவித்திரி ஆகியோருடன் நடன இயக்குநர் தினா, ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இயக்குநர் ஜோ ஜியாவானி சிங் இப்படத்தில் சிங்கப்பூரின் மிகப் பெரிய டானாக, ஏஸ்(ACE) எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு – சலீம் பிலால், இசை – பிரவீன், சரவணன், பாடல்கள் – அருண் காமராஜா, உமாதேவி, நோவா, ஷாரிகா, படத் தொகுப்பு – ராமகிருஷ்ணன், சதீஷ்குமார், கலை இயக்கம் – சரவணன் அபிராமன், நடன இயக்கம் – தினா, சண்டை இயக்கம் – ‘ஸ்டன்னர்’ ராம், கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் – ஜோ ஜியோவானி சிங்.
டான் கீ படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஜோ ஜியாவானி சிங், “இது சிங்கப்பூர் கேங்ஸ்டர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றிய திரைப்படம்.
காதலியால் ஏமாற்றப்பட்டு, வேலையும் இல்லாமல், வருமானமும் இன்றி, பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நாயகன் ஜாக், சிங்கப்பூரில் இருக்கும் தனது உறவினர்ஒருவரைச் சந்தித்து வேலை கேட்கிறான்.
ஆனால் அவரோ சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். எனினும் வேறு வழியின்றி அவரிடத்தில் வேலை செய்து படிப்படியாக பெரிய கேங்ஸ்டராகிறான் ஜாக்.
ஒரு சமயத்தில் ஒரு பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்தும்போது அவள் மிகப் பெரிய டானின் மகள் என்று தெரிய வருகிறது.. இது இதுவரையிலும் சந்தித்திருக்காத பல பிரச்சினைகளில் அவனை மாட்டிவிடுகிறது. அதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் திரைக்கதை.
இப்படத்தில் 4 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சிங்கப்பூரிலேயே இரு கட்ட படப்பிடிப்பாக 50 நாட்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. சண்டைக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் மிக பிரம்மாண்டமான செலவில் படமாக்கப்பட்டுள்ளன…” என்றார்.