full screen background image

“விநியோகஸ்தரின் சூழ்ச்சியால் மொத்தப் பணத்தையும் இழந்து கடனாளியானேன்..” – ஆண் தேவதை இயக்குநர் தாமிரா குமுறல்..!

“விநியோகஸ்தரின் சூழ்ச்சியால் மொத்தப் பணத்தையும் இழந்து கடனாளியானேன்..” – ஆண் தேவதை இயக்குநர் தாமிரா குமுறல்..!

‘ரெட்டச்சுழி’ படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குநர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு ‘ஆண் தேவதை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஒரு வழியாக இந்தப் படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸானது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப் படம் சென்றது என பல காரணங்களால் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது ‘ஆண் தேவதை’.

இந்நிலையில் இந்தப் படத்தை வெளியிடுவதற்குள் தாங்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டோம், எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்பட்டோம் என தனது மனக்குமுறல்களை பத்திரிகையாளர்களின் முன்னிலையில் வெளிப்படுத்தினார் இயக்குநர் தாமிரா.

“எனது ‘சிகரம் சினிமாஸ்’ நிறுவனத்துடன் பக்ருதீன், முஸ்தபா மற்றும் குட்டி என எனது மூன்று நண்பர்களையும் தயாரிப்பாளர்களாக சேர்த்துக் கொண்டு ஒரு பைசாகூட வட்டிக்கு வாங்காமல் இந்தப் படத்தை எடுத்து முடித்தோம். 

கடந்த மார்ச் மாதம் தணிக்கை செய்யப்பட்ட இத்திரைப்படம் திடீரென்று ஏற்பட்ட வேலை நிறுத்தத்தால் ஜூலை மாத வெளியீட்டிற்கு ஆயுத்தமானது. தொலைக்காட்சி உரிமம் ஒரு நல்ல விலைக்கு விற்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமை நியாயமான விலைக்குப் போனாலே போட்ட காசு கைக்கு வந்துவிடும் என்கிற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது.

aan devathai-movie-poster-4

இந்த நிலையில் இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை திருச்சியை சேர்ந்த மாரிமுத்து என்கிற விநியோகஸ்தர் வாங்குவதற்கு முன் வந்தார். அவர் திருச்சி மாவட்ட விநியோகஸ்தர் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பதால் இவரை நம்பி ஒன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு விலை பேசி ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயும், பாடல் வெளியீ்டடின்போது 25 லட்சத்தையும், மீதி பணத்தை படத்தின் வெளியீ்ட்டு தேதிக்கு முன்னதாகவும் தருவதாக சொன்னார்.

ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முன் பணமாக வெறும் 41 லட்சம் ரூபாயை மட்டுமே எங்களது வங்கிக் கணக்கில் செலுத்தினார். ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதியன்று படத்தின் பாடல் வெளியீட்டு விழாவினை நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அப்போது கலைஞர் அவர்கள் உடல்நலமில்லாமல் இருந்ததினால் அந்த விழா தள்ளிப் போனது. மீண்டும் ஆகஸ்ட் 10-ம் தேதியன்று திட்டமிட்டோம். அந்த நேரத்தில் கலைஞர் காலமானதால் விழா மேலும் தள்ளிப் போனது.

பாடல் வெளியீட்டு விழா நடத்தாததால் தன்னால் இரண்டாவது தவணை பணத்தைத் தர இயலவில்லை என்று சொல்லி பாடல் வெளியீட்டு விழாவினை ஆகஸ்ட் 31-ம் தேதி என்று சொல்லிவிட்டு ஆகஸ்ட் 27-ம் தேதியன்றஉ மொத்தப் பணத்தையும் தந்துவிடுவதாகச் சொன்னார்.

இதற்கிடையே பட வெளியீட்டிற்கான தேதி அறிவிக்கும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் திடீரென இமைக்கா நொடிகள் படத்திற்கு வெளியீட்டிற்கான அனுமதியை கொடுத்ததால் எங்களுக்குச் சரியான திரையரங்குகள் கிடைக்காமல் போனது. இதனால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தோம்.

அக்டோபர் 5-ம் தேதியன்று படத்தை வெளியிட மறு தேதியை தயாரிப்பாளர் சங்கத்தில் பெற்றோம். அதற்கான விளம்பரங்களைச் செய்ய ஆயத்தமானோம். அப்போது திடுமென 96 மற்றும் நோட்டா ஆகிய படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அனுமதி வழங்கியதால் தவிர்க்க இயலாமல் நாங்களும் திரும்பவும் பின் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே New RSM Films என்கிற பட வெளியீட்டு நிறுவனம் எங்களது ஆண் தேவதை திரைப்படத்தினை வெளியிடுவதாக தினசரிகளில் விளம்பரம் வெளியானது. இரண்டு முறை சென்னை போன்ற நகரங்களில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுவிட்டது. இப்போதும் இரண்டாவது தவணை பணத்தினை தருவதற்கு இழுத்தடித்துக் கொண்டிருந்தார் விநியோகஸ்தர் மாரிமுத்து.

ஒன்று பணத்தைக் கொடுங்கள். அல்லது படத்தினை திரும்பக் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டோம். செப்டம்பர் மாதம் 20-ம் தேதி இரண்டாவது தவணை பணத்தைத் தந்துவிடுவதாகச் சொன்னார் மாரிமுத்து. நாங்களும் அதை நம்பினோம்.

இதற்கிடையே எங்களது ஆண் தேவதை படத்திற்கு விநியோகஸ்தர் சங்கத்தில் ரெட் கார்டு போடப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்தன. அதிர்ச்சியடைந்த நாங்கள் அது குறித்து விசாரித்தபோது விநியோகஸ்தர் மாரிமுத்து எங்களுக்கு முதல் தவணையாக தந்த 41 லட்சம் ரூபாயினை அவர் படூர் ரமேஷ் என்பவரிடம் வட்டிக்கு வாங்கித் தந்திருப்பதால் படூர் ரமேஷ் எங்களது திரைப்படத்திற்கு ரெட் கார்டு போட கேட்டிருக்கிறார் என்று தெரிந்து கொண்டோம். நீங்களே அந்தப் பணத்தைச் செலுத்தி எங்களுடைய படத்தினை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்டோம்.

கையில் ஒரு நயா பைசா இல்லாமல், வெறும் வாய்ச் சவடாலிலும், விநியோகஸ்தர் சங்கப் பதவியிலும் இருப்பதைக் காரணம் காட்டியும் எங்களது திரைப்படத்தினை நைச்சியமாகப் பேசி எங்களிடம் மாரிமுத்து படத்தினை வாங்கியிருப்பதை அப்போதுதான் நாங்கள் புரிந்து கொண்டோம்.

இந்த நிலை நீடித்தால் எங்களால் ஒரு போதும் ‘ஆண் தேவதை’யை வெளியிட முடியாது என்கிற கராணத்தால் நாங்கள் பெற்றுக் கொண்ட 41 லட்சம் ரூபாயினை திருப்பிக் கொடுத்து படத்தினை மீட்டுக் கொள்வது என்று நினைத்து கூட்டமைப்பை அணுகினோம்.

அதற்கு அவர்கள் நாங்கள் வாங்கிய பணத்திற்கு வட்டியோடு பணத்தைத் திருப்பக் கட்டச் சொன்னார்கள். 41 லட்சம் ரூபாயை வாங்கிவிட்டு அதற்காக மூன்று மாத வட்டியோடு சேர்த்து 50 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டிய கட்டாயம் எங்களுக்கு வந்தது.

சரி.. ஒரு தவறான மூன்றாம்தர விநியோகஸ்தரை தேர்வு செய்தமைக்காக நமக்குக் கிடைத்த தண்டனை இது என்று நினைத்து அந்தப் பணத்தைச் செலுத்த ஒப்புக் கொண்டோம்.

நாங்களே நேரடியாக படத்தை வெளியிடும் வேலையில் இறங்கியபோது, கடைசி நேரத்தில் மாரிமுத்து தனது முந்தைய படங்களின் வெளியீட்டின்போது ஒவ்வொரு ஏரியாவிலும் பெற்றிருந்த கடனுக்கெல்லாம் ஆண் தேவதை திரைப்படம்தான் பொறுப்பு என்றும், அந்தக் கடனை கட்டவில்லையெனில் ஆண் தேவதையை வெளியிடவிட மாட்டோம் என்றும் கூட்டமைப்பில் அராஜகமாக கூறினார்கள்.

திருச்சியில் 20 லட்சம், மதுரையில் 7 லட்சம், சேலத்தில் 20 லட்சம், கோவையில் 5 லட்சம் என்று மாரிமுத்து ஏற்கெனவே வாங்கியிருந்த பழைய கடனுக்கெல்லாம் ஆண் தேவதை பொறுப்பேற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

தவிர மாரிமுத்து அவர் அடித்து வைத்திருந்த போஸ்டர்களுக்கு தானே பணம் செலுத்தி விடுகிறேன் என்று சொல்லியிருந்தார். ஆனால் அதையும் செய்யாமல் போஸ்டர்கள், வினைல் என எதுவும் பட வெளியீட்டு தேதிவரையிலும் திரையரங்குகளுக்கு போகாமல் இருந்தது. இதுவும் சேர்ந்து மொத்தம் 56 லட்சம் ரூபாய்க்கு பொறுப்பேற்றுக் கொண்டு, வினைல் போஸ்டருக்காக 15 லட்சம் ரூபாயையும் செலுத்திய பிறகுதான் இந்த ஆண் தேவதை படம் வெளியீட்டீற்கே வந்தது.

தவிரவும் சேலத்தில் இரு வேறு நபர்களுக்கு ஆண் தேவதை விற்பனை உரிமையை எழுதிக் கொடுத்திருந்தார் மாரிமுத்து. கடைசிவரை இப்படி ஏதாவது ஒரு பிரச்சினை மேல் பிரச்சினையாக சிக்கல் வந்து கொண்டேயிருந்தது. ஒரு வழியாக எல்லா வழியிலும் போராடித்தான் படத்தை வெளியிட்டோம்.

யாரோ வாங்கிய கடனுக்கு நாங்கள் ஏன் வட்டி கட்ட வேண்டும்..? அவருடைய நிறுவனத்தின் பெயரில் படத்தை வெளியிடும் ஒரே காரணத்திற்காக நாங்கள் ஏன் அவரது கடன்களை பொறுப்பேற்று அடைக்க வேண்டும்..? இது அப்பட்டமான மோசடி இல்லையா..?

எங்களை போன்ற சிறு முதலீட்டாளர்களிடம் இப்படி முறைகேடாக, தவறாக, கறாராக பேசி கட்டப் பஞ்சாயத்து பண்ணி பணம் வசூல் செய்யும் திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பு மாரிமுத்து போன்ற மூன்றாம்தர விநியோகஸ்தர்களுக்கு பதவி கொடுத்து வைத்திருக்கிறது.

இதற்கு பெடரேஷன் துணை நிற்பது அதிர்ச்சி என்றால், தயாரிப்பாளர் சங்கம் இந்த மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கு வழிவகை செய்யாமல் இருப்பதுதான் இந்த மோசடி நபர்களுக்கு வசதியாக போய்விடுகிறது..

இந்த வெளியீட்டாளருக்கு ஏற்கெனவே இவ்வளவு கடன் பாக்கி இருக்கிறது. அவரிடம் படத்தை கொடுத்தால் அந்த கடன் சுமையை நீங்கள்தான் ஏற்கவேண்டும் என்று கூட்டமைப்பு முன்பே வெளிப்படையாக அறிவித்திருந்தால் நாங்கள் மாரிமுத்து போன்ற மோசடி நபரிடம் சிக்கி, இந்த படுகுழியில் விழுந்திருக்க மாட்டோம்..

தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டால் நீங்கள் ஏன் அவரிடம் போய் சிக்கினீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். சிக்கியவர்களை காப்பாற்றத்தானே சங்கம் இருக்கிறது..?

எங்களை மோசடி செய்த மாரிமுத்து மேலே எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டர்கள். நாளை இதே மாரிமுத்து தைரியமாக இன்னொரு படம் பண்ணுவார். அவரைப் பற்றிய விபரம் தெரியாமல் எங்களைப் போன்ற யாரவது ஒருவர் இனிமேலும் அவரிடம் சிக்கிவிட கூடாது என்கிற எண்ணத்தில்தான் இந்த உண்மைகளை இப்போது வெளியிடுகிறேன்.

சரி.. இவ்வளவு பிரச்சனைகளையும் படத்தின் வெற்றியால் கடந்துவிடலாம் என நினைத்தால் நாங்கள் திட்டமிட்டிருந்த நேரத்தில் மிகப் பெரிய படங்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென களத்தில் குதித்து அதிகப்படியான தியேட்டர்களை கைப்பற்றிக் கொண்டன. அதனால் படத்திற்கு எதிர்பார்த்த அளவு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. கிடைத்த தியேட்டர்களிலும் சரியான காட்சிகள் கிடைக்கவில்லை.

படத்தை வாங்கிய மாரிமுத்துவின் அலட்சிய போக்கினால் சரியாக போஸ்டர்கள் ஒட்டி படத்தை விளம்பரம் செய்யக்கூட முடியவில்லை.. தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு நாள் பேப்பர் விளம்பரத்தையேகூட, மாரிமுத்து கடன் பாக்கி தரவேண்டும் என கூறி நிறுத்தினார்கள் என்றால் இந்தக் கொடுமையை என்வென்று சொல்வது..?  

நல்ல படங்களை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ள இந்த அருமையான தருணத்தில் நல்ல படம் என ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘ஆண் தேவதை’ படமும் நல்ல வெற்றியை அல்லவா பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பின் அலட்சியம், அதிகாரப் போக்கு, தயாரிப்பாளர் சங்கம் சிறிய படங்கள் மீது காட்டும் பாராமுகம் இவை எல்லாமாக சேர்ந்து எங்கள் படத்தை சின்னாபின்னப்படுத்திவிட்டன. நாங்கள் தோற்கவில்லை.. தோற்கடிக்கப்பட்டோம் என்பதுதான் உண்மை.

இந்தப் படம் ஆரம்பிக்கும்போது நிறைய நட்புகள் எனக்கு இருந்தன. இன்று நான் ஒருவன் மட்டும் இங்கு தனியாக நிற்கிறேன். இத்தனை நாட்கள் நான் சேமித்து வைத்த அறமும், நேர்மையும் இந்தப் படத்தில்தான் இருக்கிறது. இந்தப் படம் தோற்றால் எனது நேர்மை தோற்றுவிடும். நான் தப்பிப்பதற்கு இன்னும்கூட வாய்ப்பிருக்கிறது.. இந்தப் படத்தை வரும் அக்டோபர் 26-ம் தேதி மறு ரிலீஸ் செய்வதற்கு நல்ல திரையரங்குகளை கொடுங்கள். மக்களின் ரசனை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இதுதான் நாங்கள் பெடரேஷனிடமும் தயாரிப்பாளர் சங்கத்திடமும் நாங்கள் வைக்கும் வேண்டுகோள்…” என உருக்கமாக முடித்தார் தயாரிப்பாளரும், இயக்குநருமான தாமிரா.

தமிழ்ச் சினிமாவில் புதிய தயாரிப்பாளர்கள் ஒரு படம் எடுத்தக் கையோடு பீல்டைவிட்டு ஏன் ஓடி ஒளிகிறார்கள் என்பதற்கு இயக்குநர் தாமிராவின் சாட்சியமும் ஒரு சான்று..!

மூகமூடி அணியாத திருடர்களும், கொள்ளைக்காரர்களும், கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆட்களும், கருப்புப் பண புள்ளிகளும்தான் தமிழ்த் திரையுலகை ஆட்டிப் படைக்கிறார்கள் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்..!

Our Score