full screen background image

‘கபாலி’ இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பாளரானார்..!

‘கபாலி’ இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பாளரானார்..!

‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். தனது இரண்டாவது படமான ‘மெட்ராஸ்’ படத்தில் தன்னை மீண்டும் சிறந்த இயக்குநர் என்று நிரூபித்துக் கொண்டார். மூன்றாவது படமான ரஜினி நடித்த ‘கபாலி’ மூலம் உலகம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டார். இப்போது ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் இவரே இயக்கவுள்ளார்.

இந்த நேரத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் புதிதாக தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்திருக்கிறார். புதிய சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கியிருக்கிறார் பா.ரஞ்சித்.  ‘நீலம்’ புரொடக்சன்  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மூலம் தனது முதல் படமாக ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் மாரி செல்வராஜ். இவர் இயக்குநர் ராமிடம் ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. காதல், ஆக்சன் என எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும்விதமாக இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் நடிக்கிறார். ‘கிருமி’ படம் மூலம் சிறந்த நடிகர் என்று பெயரெடுத்த இவர் இப்படத்திற்காக சிறந்த பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ்  நாராயணன் இசை அமைக்கிறார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய.. ராமு கலை இயக்கம் செய்கிறார்.

ஜனவரி மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. இதற்காக இயக்குநர்கள் குழுவினர் தற்போது நெல்லையில் முகாமிட்டுள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் நெல்லையில் நடைபெறுவதால் அந்த மாவட்ட மக்களை நடிக்க வைப்பதற்கான தேர்வு இப்பொழுது நடைபெற்று வருகிறது.

Our Score