“MeToo’ பிரச்சினை இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்டது அதை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்…” என்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.
அக்கூஸ் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பில் பி.டி. சையது முகமது தயாரித்துள்ள படம் ‘ராஜாவுக்கு ராஜா’.
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் பாடல்களை வெளியிட இயக்குநர்கள் ஏ.வெங்கேஷ் , கரு.பழனியப்பன் இருவரும் அதனைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் கரு.பழனியப்பன் பேசும்போது, “என்னை இந்த விழாவுக்கு வருமாறு நடிகை சோனாதான் போன் செய்து அழைத்தார். அவர் நான்காண்டுகளுக்கு பின் இதற்காக போன் செய்தார். படத்தின் இயக்குநர் ‘எப்படியாவது கரு.பழனியப்பனை அழைத்து வர வேண்டும்’ என்று தன்னிடம் சொன்னதாக கூறினார்.
இப்போதெல்லாம் பிரச்சினைகளை ஆடியோ விழாவில்தான் பேச வேண்டியுள்ளது. இன்று ‘#MeToo’ பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா..? ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா..?
‘#MeToo’ என்பது இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். மீடியாக்கள் இவ்வளவு தூரம் ‘#MeToo’ பற்றிப் பேசுகிறார்களே..!? எந்த மீடியாவாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு, எளிய மக்களுக்கு இப்படி எங்கு பார்த்தாலும் நடக்கும் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா..? அதை சாதாரணமாக கடந்து போகும் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள்.
மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை தோறும் படம் வரும். அதுபோல இந்த நடிகர் மக்கள் நண்பன் விநாயக் தயாரிப்பாளர், இயக்குநர், திரையரங்கு உரிமையாளர் அனைவருக்கும் நண்பனாகி வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார்.
விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, “சினிமாவை பொழுது போக்கு என்று பார்த்த காலம் போய் இன்று சினிமாக்காரர்களின் வாழ்க்கை மக்களுக்குப் பொழுதுபோக்காகிவிட்டது. மீ டூ விஷயத்தில் எது பொய்..? எது உண்மை..? என்பதே தெரியவில்லை. சினிமாவில் எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன. அவைகள் எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளன. ‘#MeToo’-வால் உருவான பிரச்சினைகள் மட்டும் தீரவே தீராது. சங்கம்தான் தீர்வைத் தேடித் தரும். பிரச்சினை இருந்தால் சங்கத்தை அணுகலாம். அதை விட்டுவிட்டு நமக்கு நாமே சினிமாவைக் கேவலப்படுத்தக் கூடாது. சினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது…” என்று பேசினார்.
விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சையத் முகமது, படத்தின் நாயகன் வி.ஆர்.விநாயக், இயக்குநர் ஏ.வசந்தகுமார் இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ், தருண் கோபி, நடிகர்கள் ‘மகாநதி’ சங்கர், ரியாஸ்கான், பவர் ஸ்டார் சீனிவாசன், தியாகராஜன், நடிகைகள் சோனா, சிந்து, ஒளிப்பதிவாளர் காசி விஷ்வா, இசையமைப்பாளர் ஜெயக்குமார், படத்தின் பாடலாசிரியர் காவியன், கவிஞர் சினேகன், தயாரிப்பாளர் ஸ்டார் குஞ்சுமோன், மொய்தீன்கான், அஜ்மல், ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.