full screen background image

“என்னை ஏன் பலியாக்கினீர்கள்..?” – கேள்வியெழுப்பும் ‘வசந்தகுமாரன்’ படத்தின் இயக்குநர்

“என்னை ஏன் பலியாக்கினீர்கள்..?” – கேள்வியெழுப்பும் ‘வசந்தகுமாரன்’ படத்தின் இயக்குநர்

‘நான் ஏன் சம்மந்தமே இல்லாமல் பலியாக்கப்பட்டேன்’ என்பது குறித்த விளக்கம் வேண்டும் என்று ‘தர்ம துரை’ படக் குழுவுக்கு ‘வசந்தகுமாரன்’ படத்தின் இயக்குநர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘தர்ம துரை’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ 9 சுரேஷ் தயாரிக்கிறார்.

ஸ்டூடியோ 9 சுரேஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவர் கூட்டணியில் புதுமுக இயக்குநர் ஆனந்த் குமரேசன் இயக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பேயே ஆரம்பிக்கப்பட்ட படம் ‘வசந்தகுமாரன்’. விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் படம் நிறுத்தப்பட்டது. தற்போது இருவரும் இணைந்து மீண்டும் ‘தர்ம துரை’ படத்தை துவக்கியிருக்கிறார்கள்.

‘தர்ம துரை’ படத்தின் படப்பிடிப்பு நேற்று மதுரையில் துவங்கியுள்ள நிலையில், ‘வசந்தகுமாரன்’ படத்தின் இயக்குநரான ஆனந்த் குமரேசன், ‘தர்மதுரை’ படக் குழுவுக்கு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து அவரது பேஸ்புக் பக்கத்தில் தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார்.

அது இங்கே :

“நான் கடந்த 2012 டிசம்பரில் ‘வசந்தகுமாரன்’ திரைப்படத்தை எழுதி இயக்குவதற்காக ஸ்டூடியோ 9 நிறுவனத்தில் ஒப்பந்தமாகினேன். பணிகளும் நடந்தன. ஆனால் அதன் பின்பு பிரச்சினைகள், பேச்சுவார்த்தைகள் என்று வருடங்கள் நகர்ந்தன. தற்போது அத்திரைப்படம் கைவிடப்பட்டதாக ஊடகங்களின் மூலம் அறிகிறேன்.

‘வசந்தகுமாரன்’ திரைப்படத்திற்குப் பதிலாக ‘தர்ம துரை’ என்கிற திரைப்படம் இன்று (டிசம்பர் 14 – 2015) படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக மீண்டும் ஊடகங்களின் மூலமே அறிகிறேன். பல்வேறு குழப்பங்களுக்கு ஆட்பட்டுள்ள நிலையில், இதை நான் பதிவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளேன்.

1. ‘வசந்தகுமாரன்’ திரைப்படம் துவக்கப்படாமல் இருப்பதற்குக் காரணம் கதாநாயகருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சினை என்றே அறியப்படுகிறது. அது என்ன பிரச்சினை..?

2. அந்த பிரச்சினை எப்படி முடிவுக்கு வந்தது..?

3. பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தால், சம்மந்தப்பட்ட படம்தானே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக ஏன் ‘வசந்தகுமாரன்’ கைவிடப்பட்டது..?

4. அதற்குப் பதிலாக ‘தர்ம துரை’ என்கிற திரைப்படம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது..?

5. இவை எதுவுமே தொழில் அடிப்படையிலோ அல்லது குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையிலோகூட தயாரிப்பாளரோ அல்லது கதாநாயகரோ, தகவலாகவோ அல்லது என்னை அழைத்து நேரிலோ ஏன் என்னிடம் இதுவரை தெரிவிக்கவில்லை.?

நான் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தபொழுதும் அவர்களிடம் சரியான பதில்கள் கிடைக்கவில்லை. பதில்களே இல்லை என்பதுதான் உண்மை.

இப்பொழுது என்னுடைய எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான்.

மூன்று வருடங்களாகக் காத்திருந்த எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. எனது பன்னிரெண்டு வருட கால சினிமா வாழ்க்கை இதனாலேயே கேள்விக்குறியாகி உள்ளது.

ஒரு திரைப்படம் கைவிடப்பட்டு அதற்குப் பதிலாக இன்னொரு திரைப்படம் நடக்கும்பொழுது அது ஏன் என்று விளக்கமளித்து துறை சார்ந்தவர்களுக்கும், ஊடகங்களுக்கும் ‘அறிவிக்க’ வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் எனக்காவது விளக்கமளிக்க வேண்டியது தார்மீக அடிப்படையில் அவர்களது கடமை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நான் உங்களிடம் படமோ, பணமோ அல்லது பரிதாபமோ வேண்டி நிற்கவில்லை. தயாரிப்பாளருக்கும், கதாநாயகருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையில், ஒரு முதல் பட இயக்குனராகிய நான் ஏன் சம்மந்தமே இல்லாமல் பலியாக்கப்பட்டேன் என்பது குறித்த ஒரு முறையான விளக்கம் மட்டுமே..!” என்று கேட்டிருக்கிறார்.

பதில் கிடைக்குமா..?

Our Score