full screen background image

“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..!

“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..!

நிலா முகில் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.என்.ஆம்.ராஜி தயாரித்துள்ள திரைப்படம் ‘மாய நதி’.

அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபி சரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வடபழனி கமலா தியேட்டரில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 இந்த விழாவில் படக் குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் சவுந்தரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

Music Director Bhavatharini

விழாவில் இசை அமைப்பாளர் பவதாரிணி பேசும்போது, “இங்கே வந்திருக்கும் எல்லாருக்கும் நன்றி. தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. யுவன் அமீர் சாருக்கு நன்றி. படத்தில் பாடிய சிங்கர்ஸுக்கும் நன்றி…” என்றார்.

இயக்குநர் அசோக் தியாகராஜன் பேசும்போது, “இந்த மேடையை அலங்கரிக்கிற சினிமா ஜாம்பவான்களுக்கு நன்றி. நம் வாழ்க்கையும் நதிபோல்தான் நம்மால் கணிக்க முடியாத ஒன்று. அதுதான் இந்த ‘மாயநதி’ படம்.

Ameer, Ashok Thiyagarajan

நதி நிறைய திருப்பங்கள் கொண்டது. நம் வாழ்க்கையில் நிறைய பக்கங்களை பெண்கள்தான் நிரப்பி வருகிறார்கள். படத்தில் மிக எதார்த்தமாக நடித்துள்ள நாயகன் அபி சரவணன், நாயகி வெண்பா ஆகியோருக்கு நன்றி. மேலும் படத்தில் ஒத்துழைத்து பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி.

இந்த விழாவின் ஹீரோயின் இசை அமைப்பாளர் பவதாரிணி மேடம்தான். எல்லாப் பாடல்களையும் மிகச் சிறப்பாக தந்துள்ளார். இந்தப் படத்தை தனிப்பட்ட முறையில் உருவாக்கிவிடவில்லை. ஒரு டீமாக இருந்துதான் உருவாக்கினோம். இசைஞானி இளையராஜாவின் பாடல்கள்தான் நம் கவலைகளை ஆற்றுப்படுத்தியது. சந்தோஷத்தை அதிகப்படுத்தியது. அவர் வீட்டில் இருந்து இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி…” என்றார்.

yuvan shankar raja (1)

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும்போது, “அக்கா பவதாரிணியின் இசையைப் பற்றி நான் சொல்றது எப்படி இருக்கும்னு தெரியல. இந்தப் படத்தின் பாடல்கள் ரொம்ப நல்லாருக்கு. இசை எங்க வீட்ல எல்லோருடைய ரத்தத்துலேயும் இருக்கு.

முதல்முதல்லா கீ போர்டுல என் கையைப் பிடிச்சி வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணிதான். என்னை இந்தளவிற்கு கூட்டிட்டு வந்தது அக்காதான். படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்…” என்றார்.

இயக்குநர் அமீர் பேசும்போது, “இரண்டு நாட்களுக்கு முன்னாடி சுப்பிரமணிய சிவாதான் இந்த விழாவிற்கு கூப்பிட்டார். நான் யோசிச்சேன். அப்புறம் ‘பவதாரிணிதான் படத்திற்கு இசை’ என்று சொன்னார்கள். என்னால் எதுவும் பேச முடியல. ‘உடனே வருகிறேன்’ என்றேன்.

Audio launch (2)

நடிகர் அபி சரவணன், கேமராமேன், என எல்லாரும் எனக்கு நெருக்கமானவர்கள். உலக வரலாற்றிலே இளையராஜா குடும்பம் போன்று உலகத்தில் எங்கேயுமே கிடையாது. இப்படி ஒரு குடும்பம் தமிழ்க் குடும்பமாக கிடைத்தது நாம் செய்த பாக்கியம்.

எம்.ஜி.ஆர். பற்றிய நினைவுகள் இன்றுவரை நினைவுகூறப்படுகிறது. ஆனால் அவரோடு வேலை செய்தவர்களிடம் நிறைய விசயங்களை கேட்டு பதிவு செய்து வைக்க வேண்டும்.

நம் தமிழ்நாட்டில் இன்று மூன்றே கலைஞர்கள்தான் பெரிய கலைஞர்கள். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் இந்த மூன்று பேர்தான். இவர்கள் பற்றிய பதிவுகளை உடனடியாக பதிய வேண்டும். அதனால் இளையராஜா பற்றிய பதிவுகளை யுவன் சங்கர் ராஜா பதிவு செய்ய வேண்டும்.

Audio launch (3)

இதையெல்லாம் அரசுதான் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். நம் சங்கங்கள் எல்லாம் இப்போது மூடு விழா கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்கிறார்கள். நல்ல விசயம்தான். ஆனால் அது அவர்களுக்கு நல்லதல்ல. இங்கு சேவை என்பது வேறு. அரசியல் என்பது வேறு. இங்கு பொது விசயங்களை செய்தால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதை நானே அனுபவித்து இருக்கிறேன்.

தமிழ்ச் சினிமாவில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் சினிமாதான் இங்கு அரசியலை ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால் சினிமா மட்டும் முன்னேறவே இல்லை. இங்கு சினிமாவில் இருக்கும் பலரும் எம்.ஜி.ஆர். ஆக முயற்சிக்கிறார்கள்.

Audio launch (1)

எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோரிடம் இருந்த ஆட்கள் எல்லாம் அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொண்டார்கள். அவர்களும் இந்தச் சினிமாவிற்கு எதையும் செய்யவில்லை.

கலைஞர், எம்.ஜி.ஆர். பெயரில் பிலிம் சிட்டியை அமைத்தார். ஜெயலலிதா வந்ததும் அந்தப் பெயரை மாற்றினார். ஆனால் நமது சினிமா ஆட்கள் உடனே இதை மறுத்து ஜெயலலிதாவிடம் முறையிட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அதனால் கலைஞர் திரும்ப ஆட்சிக்கு வந்ததும் அந்த இடத்தில் பாதியை டைட்டல் பார்க்குக்கு கொடுத்து விட்டார்.

Abi Saravanan, Venba

அதுபோல் கலைஞர் சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கொடுப்பதற்கு இடம் ஒதுக்கினார். அதுவும் நடக்கவில்லை. இங்கு இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர இருப்பதால் தமிழக அரசு கடந்த ஏழாண்டுகளாக திரைப்பட விருதுகளைக்கூட கொடுக்க யோசிக்கிறது என்று யோசிக்கிறேன்.

ஆனால், முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. ஏன் என்றால் அவர் எந்த பால் போட்டாலும் அடிக்கிறார். அதனால் அவரிடம் சினிமா விருதுகளை உடனடியாக வழங்க வேண்டுமென கோரிக்கையாக வைக்கிறேன். ஒரு ஆரோக்கியமான சூழல் சினிமாவிற்கு வரணும்.

இந்த விழா சிறியதாக ஆரம்பித்து பெரிதாக முடிந்திருக்கிறது. இந்த ‘மாய நதி’ என்ற திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்…” என்றார்.

Our Score